Friday 4 January 2013

வரலாற்றுப் பதிவுகளில் திரிபுகள்!


சில சமயம் நல்ல எழுத்தாளர்கள் கூட நமக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.  அப்படி ஒரு செய்தி தான் இது. சமீபத்தில் நியூ செஞ்சுரியின்   சிறுநூல் வரிசையில் வந்த பிரபல எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் " பகவான் புத்தர்" என்ற சிறு படைப்பை வாசித்தேன். அதில் சித்தார்த்தன் கி.மு.623 இல் பிறந்தார் (பக்கம் -7) எனவும் , கி.மு. .542 இல் சுந்தன் என்ற கொல்லர் வீட்டில் பன்றி மாசிச உணவு உண்டு அவர் இறந்தார் (பக்கம்-14) எனவும் பதிவு செய்திருந்தார். இதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு சிறிது நெருடல் ஏற்பட்டது.

காரணம் , திரு.பிரேம்நாத் பசாஸ் எழுதிய " இந்திய வரலாற்றில் பகவத்கீதை" (விடியல் பதிப்பகம்) என்ற சிறப்பான நூலில், புத்தர் கி.மு.543 இல் பிறந்தார் (பக்கம் -154) எனவும், கி.மு. .483 இல் சுந்தன் என்ற கருமான்   வீட்டில் காளான் உணவு உண்டு அதனால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவர் இறந்தார் (பக்கம்-163) எனவும் பதிவு செய்திருந்தார்.  இது மிகச் சிறந்த ஆய்வுநூல், இந்நூல் பற்றி விபரமாக பின்னர் எழுதுகிறேன்.

சரி! வலைத்தளங்கள் என்ன பதிவு செய்திருக்கின்றன என்று பார்க்கலாம் என்று  தேடினால்  http://www.humanjourney.us/buddhism2.html  எனக்கு மேலும் குழப்பம் ஏற்பட்டது. ஆம்! இங்கே கொடுப்பட்டுள்ள வலைத்தளத்தில் புத்தரின் காலம் கி.மு.490-410  என பதிவு செய்து இருந்தார்கள்!
அடுத்து விக்கி பீடியாவிற்கு ஓடினேன். விபரம் இதோ;
புத்தர் பிறப்பு: கி.மு.563;
புத்தர் இறப்பு: கி.மு.483 அல்லது கி.மு.411-400.

ஆனால் எல்லோரும்,  புத்தர் 80 வயதில் இறந்தார் என்று மட்டும் தெளிவாக பதிவு செய்திருந்தனர். இதில்  புத்தரின் மறைவில் விக்கி பீடியாவின் கருத்து சற்று  வித்தியாசமாகவும்   கொஞ்சம் நம்புமாறும் இருக்கிறது! அதாவது புத்தரின் இறப்பு காளான் உணவினால் என்று "சைவ" உணவு உண்பவரும், பன்றிக்கறி உணவினால்  என்று  அசைவ உணவு உண்பவர்களும் பதிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் அவர் முதுமைபருவத்தின் காரணமாகவே இயற்கை எய்தினார் என குறிப்பிட்டுள்ளது.    

இந்திய வரலாற்று சுவட்டில் , நம் நாடு பெற்றெடுத்த மிகச்சிறந்த மனிதனின் வரலாற்றைக்கூட சரியாக பதிவு செய்யாதது மிகவும் வேதனையாக இருக்கிறது.  புத்தரின் உண்மையான காலத்தை  யாரவது கூறுங்களேன் !

----சு.கருப்பையா.

No comments:

Post a Comment