Monday 13 July 2020

சுளுந்தீ-நாவல்


சுளுந்தீ-நாவல்

ஆசிரியர் : இரா. முத்துநாகு
விலை: ரூ 450/-
பக்கங்கள்: 480
வெளியீடு : ஆதி பதிப்பகம்.
முதல் பாதிப்புடிசம்பர்-2018; நான்காம் பதிப்பு ஜனவரி-2020



சுளுந்தீ……இது பச்சையாகவே எரியும் தன்மையுடைய மரம். இதை வழிப்பயணத்திற்கு விளக்காகவும் பயன்படுத்தலாம்; கொளுத்தவும் பயன்படுத்தலாம்.


கன்னிவாடி ஜாமீன் அல்லது பாளையம், மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அரசு நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட பாளையங்களில் மிக  முக்கியமானதாக  இருக்கிறது. மேலும் மதுரை நாயக்க மன்னர் சொக்கநாத நாயக்கரின் ( 1659-1682)  முக்கியமான படைத்தளமாகவும்  கன்னிவாடி இருக்கிறது.

அதன் அரண்மனையார் அல்லது பாளையக்காரர் சின்னக் கதிரியப்ப நாயக்கர் , அவரது அரண்மனை நாவிதன் ராமன் , அவன் மகன் செங்குளத்து மாடன் ஆகியோர்களின்   இரகசியமான அல்லது கமுக்கமான வாழ்க்கையை  இந்த நாவல் பேசுகிறது. 

ராமன் பன்றிமலை சித்தரின் சீடன் . அவரிடம் சித்த மருத்துவத்தை நன்றாக கற்றறிந்தவன். அரண்மனையார் சின்னக் கதிரியப்ப  நாயக்கரால் " ராம பாண்டுவன்" என்று பாராட்டப்படுபவன். அவனுக்கு தன் மகனை ஒரு படைவீரனாக பார்க்க வேண்டும் என்று மிகப்பெரிய ஆசை இருக்கிறது.  ஆனால், ஒரு வீரனுக்குரிய அத்தனை திறமைகள் இருந்தும் அரண்மனையார் கதிரியப்ப  நாயக்கர் அவனை ஒரு போர் வீரனாக ஏற்றுக் கொள்ளாமல் அரண்மனை நாவிதனாக நியமனம் செய்வார். மனதளவில் நொறுங்கிப் போய் விடுகிறான் ராமன். பிறகு தன் குலத்தொழிலை முறையாக மாடனுக்கு கற்றுத் தருகிறான் ராமன். இறுதியில் பார்ப்பனியத்தின்  நான்கு வர்ண கோட்பாடு தான் வெல்கிறது.

மதுரை நாயக்க அரசர்கள் அனைவரும் சதுர்வர்ணத்தை தூக்கிப்பிடித்து வாழ்ந்து வந்தவர்களே ! அந்த வகையில் கன்னிவாடியும் ஜமீனும் விதிவிலக்கல்ல . அரண்மனையாரின் தளபதி முத்து இருளப்ப நாயக்கருக்கு ராமனின் செல்வாக்கு மற்றும் பாண்டுவத்தின் மீது மிகப் பெரிய காழ்ப்புணர்ச்சி இருக்கிறது . அவரே தனது மகனின் வளர்ச்சிக்கு தடை போடுகிறார் என்ற குறை ராமனுக்கும் இருக்கிறது.

இருந்தாலும் , மாடன் சிறந்த மல்யுத்த வீரனாக உருவாகிறான். கன்னிவாடி ஜமீன் அவன் வீரத்தைக் கண்டு பயப்படுகிறது . இருந்தாலும், ஒரு நாவிதன் வீரனாக இருப்பதையும் , அவன் குதிரையில் பயணிப்பதையும் கன்னிவாடி மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் அவனிடம் வெறுப்பு கொண்டு யாரும் நாவிதம் செய்து கொள்ள விரும்புவதில்லை . இது அவனை மிகவும் காயப்படுத்துகிறது. அதற்கு எதிர்வினையாக , தன்னை யாராவது மல்யுத்தத்தில் தோற்கடித்தல் தான் சவரத் தொழில்  செய்வதாகவும் , மற்றவர்கள் தோல்வி அடைந்தால் அவர்கள் சவரத் தொழில் செய்ய வேண்டும் என்று சவால் விடுகிறான். மாடன்  வெல்ல முடியாதவனாக மாறிப் போகிறான் .

கன்னிவாடி அடங்கி விடுகிறது.

இறுதியில் ,  தளபதி முத்து இருளப்ப நாயக்கர் , உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள கீரிப்பட்டி " வங்காரன் " மூலமாக சூழ்ச்சி செய்து  மல்யுத்தத்தில் மாடனை கொல்கிறார்.  கன்னிவாடி ஜமீனை எரிய  வைத்துக் கொண்டிருந்த சுளுந்தீ அணைக்கப்படுகிறது.

 பின்னர் , மல்யுத்தத்தில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக வங்காரனும் மடிகிறான்.  

மாடனின் மைத்துனன் நாவிதன் பெருமாள் பயன்படுத்திய மாடனின்நஞ்சு தடவிய கத்தியின்” மூலம் சவரம் செய்யப்படுவதால் தளபதியும் கொல்லப்படுகிறார்.  அந்தப்புரத்தின் வழியாக அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் தளபதி முத்து இருளப்ப நாயக்கர் கொல்லப்பட வேண்டும் என்பதே அரண்மனையார் சின்னக் கதிரியப்ப நாயக்கர் மாடனுக்கு இட்ட கட்டளை என்பது அரண்மனை ரகசியமாகவே இருந்து  விடுகிறது.  

இது தான் " சுளுந்தீயின்" கதை . 

இந்த நாவல்  பன்றி மலை சித்தர் வழியாக  சித்த மருத்துவத்தின் சிறப்பு, நாவிதர்களுக்கும் சித்த மருத்துவத்திற்குமான தொடர்பு, கன்னிவாடி ஜமீனில் நிலவி வந்த குலநீக்க தடைச்சட்டம், அம்மக்களின் வாழ்வாதார சிக்கல்   என்று பல விஷயங்களை வெளிக் கொணருகிறது. அதுமட்டுமல்லாமல் கன்னிவாடி ஜமீனில் வாழும் பல்வேறு சாதீய மக்களின் உறவு , தொழில் மற்றும் வாழ்க்கைநெறி போன்றவை மிக நேர்த்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பாக , சித்தமருத்துவம் கோலோச்சுகிறது. மனிதர்களுக்கு ஏற்படும் அத்தனை நோய்களையும் நலமாக்கும் சித்த மருத்துவ களஞ்சியம் நாவல் முழுவதும் நிறைந்திருக்கிறது. குறிப்பாக நாவலாசிரியர் முத்துநாகுவே ஒரு சித்தமருத்துவராக இருப்பதும் ,  அம்மருத்துவம் சார்ந்த குறிப்புகளை நாவலுக்குள் எழுதியிருப்பதும்   மெருகூட்டுகிறது. உப்புமூலமாக வெடி மருந்து தயாரிப்பதையும் , செந்தூரம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்களை பற்றிய  நாவலாசிரியரின்  விளக்கமும்  பிரமிக்க வைக்கிறது.

சவ அடக்கத்தின் போது நாவிதர்கள் செய்ய வேண்டிய பணி அதாவது  சாதி வாரியாக எப்படி பாடை கட்டுவது, அடக்கம் செய்வது மற்றும் சடங்குகள் செய்வது என்பது பற்றி மிகத் தெளிவான குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார் முத்துநாகு. அதேபோல் கிராமங்களில் துணி துவைக்கும் சலவைத் தொழிலாளிகள்  இடும் அடையாளக் குறிகளில் கூட " சாதி" இருப்பதை வெளிக்கொணர்ந்திருக்கிறார் முத்துநாகு.

நாம்  மலைத்துப் போகும் வாழ்வியல் குறிப்புகள்  நாவல் முழுவதும் பரவிக்  கிடக்கிறது.

குலநீக்கம் செய்யப்பட்ட கட்டக்காமக்குடும்பன் தமது மக்களின் வாழ்வாதாரத்திற்காக கிணறு வெட்டுவதும்  , அதற்கு உதவும் விதமாக மருதமுத்து ஆசாரி " வெடிமருந்து " தயாரிக்கும் முறையைக் கற்றுத் தருவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியைக் காட்டுகிறது.

அதே போல் அந்தந்த சாதிகளுக்கு பிடித்தவாறு மரங்கள் இருப்பதைக்  கூட  இந்த நாவல் பேசுகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தின் சாலைகள் அனைத்திலும் புளிய மரம் இருப்பது ஏன் ? என்ற கேள்வி எனக்குள் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அந்தப் புளியமரம் , நாயக்கர்களின் குலமரம் என்பதையும் , அதனாலேயே அம்மரங்கள் சாலைகள் முழுவதும் நடப்பட்டுள்ளன என்பதை இந்த நாவல் மூலம் தான் அறிந்து கொண்டேன்.  

இருந்தாலும் இந்த நாவல் என்னுள் கீழ்காணும்  சில கேள்விகளையும் எழுப்பியது;

Ø  நான்கு வருணக் கோட்பாடுகளை கடைபிடிக்காத தனது குடி மக்களை நாயக்க அரசர்களும் , பாளையக்காரர்களும்  குலநீக்கம் செய்ததற்கான  ஆதாரங்கள்  எங்கிருந்து பெறப்பட்டது ?. இது பற்றி எந்த வரலாற்று ஆசிரியரும் எழுதியதாக தெரியவில்லை.

Ø  பன்றிமலைச் சித்தரின் மருத்துவ முறைகளையும் , ஆசியையும்  முழுமையாகப்  பெற்ற ராமன் " சித்தர்" நிலைக்கு செல்லாமல் ஏன் திரும்பவும் " நாவிதனாக " அரண்மனைக்கு திரும்பினான்? .

Ø  கி.பி. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த மன்னர்களும் , பாளையக்காரர்களும் பாலியியல் மீறல்களுக்கு பெயர்பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், இந்த நாவலில் அது பற்றிய பதிவுகள் எதுவுமில்லை என்பது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.

Ø  அதே போல் , ஒரு நாவலுக்கு சுவாரசியத்தை தரும் திருப்பங்களும் , காதலும் இல்லாமல் நாவல் மெதுவாக நகருவதாக இருக்கிறது. மாடனின் மீது அனந்தவல்லிக்கு இருக்கும் காதலும் கூட அழுத்தமாக இல்லை.

மொத்தத்தில் , இந்த " சுளுந்தீ" நாவல் கன்னிவாடி பாளையக்காரர் சின்னக் கதிரியப்ப நாயக்கர்   பற்றியும் , அவரது குடிமக்களின்  வாழ்க்கை நிலைப் பற்றியும் ஓரளவு சரியாகவே பதிவு செய்திருக்கிறார் என்று கருதுகிறேன். நாவலுக்கான தகவல் சேகரிப்பில் நாவலாசிரியர் முத்துநாகு மிகவும் மெனக்கிட்டு இருக்கிறார் என்பதை பாராட்டியே தீர வேண்டும்.

குறிப்பாக ,  இந்த நாவலை  எழுதுவதற்கு முன்பு  கன்னிவாடி  சென்று அதன் கடைசி ஜமீன்தார் அப்பையா நாயக்கர் அவர்களை சந்தித்து  உரையாடி  களஆய்வு செய்து வந்திருக்கிறார்.  அவர் ஏழ்மையில் உழன்று கொண்டிருந்தாலும் ஜமீனுக்கு உரிய மிடுக்குடன் வாழ்ந்து  வருவதை ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறார் முத்துநாகு. அதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் நாங்கள் பட்டத்தை ஏற்கும் போது " நான்கு வர்ணத்தை காப்போம்" என்று உறுதிமொழி கூறித் தான் பதவி ஏற்போம் என்று சொல்லியிருக்கிறார்.

இந்த 21 ஆம் நூற்றாண்டிலேயே  அப்பையா நாயக்கர்  இப்படிச் சொல்லியிருக்கும் போது , 17-18, ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சின்னக் கதிரியப்ப நாயக்கர் எப்படி இருந்திருப்பார் என்பதை நம்மால் யூகிக்க முடியும்.

அந்த கன்னிவாடி ஜமீனில் தான் ,குலத்தொழிலை விட்டொழித்து மற்ற குடியினர் போல் நாமும் வாழ வேண்டும் என்று போராடி ராமபண்டுவனும், மாடனும் அழிந்து போகிறார்கள். அவர்கள் கொளுத்திப் பிடித்தசுளுந்தீஅணைந்து போகிறது.  

முத்துநாகு இந்த  "சுளுந்தீ"யின்   மூலம் நாவிதர்களின் அர்ப்பணிப்பான  வாழ்க்கையையும் , அவர்களிடமிருந்த சித்த மருத்துவத்தையும்  ஆவணப்படுத்தி இருக்கிறார்  . இந்த நாவல் கன்னிவாடி ஜமீனைத் தாங்கி நிற்கும் ஒரு வரலாற்றுப் பெட்டகமாகவே இருக்கிறது.


கருப்பையா.சு
+919486102431
மதுரை


Tuesday 9 June 2020

சூல்


சூல்

எழுத்தாளர் : சோ.தர்மன்
பதிப்பகம் : அடையாளம்,
விலை: ரூ.380/-
பக்கங்கள் :500
விருது : சாகித்ய அகாடமி பரிசு 2019-2020





இந்த நாவல் எட்டையபுரம் ஜமீனைச் சேர்ந்த " உருளைக்குடி " கிராமத்தின் கதை. உருளைக்குடியில்  பள்ளர், பறையர் , சக்கிலியர் , பிள்ளை , ஆசாரி , ரெட்டியார்  மற்றும்  தேவர் சாதியை சேர்ந்த அனைவரும்  அவரவர்களுக்கு உரிய தொழிலை பார்த்துக் கொண்டு அமைதியாக வாழ்கிறார்கள் அக்கிராமத்தின் ஆணிவேராக உருளைக்குடி கண்மாய் இருக்கிறது.  அய்யனார் , மாடசாமி,  மற்றும் குரவன் சாமி போன்ற கிராம  கடவுள்கள் அந்த கண்மாயை மட்டுமல்ல அந்தக் அக்கிராமத்தையும்  காக்கும் கடவுள்கள்.

மிகப்பெரிய கண்மாயை பராமரிப்பதும் , பாசனத்திற்கு நீர் திறந்து விடுவதும்  மடைக்குடும்பனுக்கும் , நீர்பாய்ச்சி முத்துக்கருப்பனுக்கும் உரிய பணியாக இருக்கிறது.

மகாலிங்கம் பிள்ளை வெற்றிலை பயிரிடும் விவசாயி. உருளைக்குடியில் விளையும் வெற்றிலைக்கு அக்காலத்தில்  தமிழகம் முழுவதும் மிகவும் செல்வாக்கு இருந்துள்ளது.

நாவல்,  இப்படி  உருளைக்குடியில் ஆரம்பித்து  அதனைச் சுற்றியுள்ள பனைப்பட்டி, ஓட்டப்பிடாரம் , ஆறுமுக மங்கலம், சொக்கலிங்கபுரம் , கடலையூர்,  பொத்தையம்பட்டி ,  இருக்கன்குடி , எட்டையபுரம் மற்றும் வேம்பார்  உள்ளிட்ட பல கிராம மக்களின் எளிமையான ஆனால் உயிர்துடிப்பான வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.

உருளைக்குடியில் வாழும் மடைக்குடும்பன் , நீர்பாய்ச்சியோடு சேர்த்து ,  கொப்புளாயி, நாங்கிரியான் , குப்பாண்டி , எலியன், மகாலிங்கம் பிள்ளை, தொத்தல் பகடை   மற்றும் பிச்சைஆசாரி போன்றவர்களின்  பாத்திரப்படைப்பு நம்மை மிகவும் ஈர்த்துவிடுகிறது.  அதேபோல் சொக்கலிங்கபுரம் சோலைக்குடும்பன் மகன் சித்தாண்டிக்கும் , மாயாண்டிகுடும்பன் மகன் இருளப்பனுக்கும் ஏற்படும்  பகையும் , அதனால் சொக்கலிங்கபுரம் கண்மாய் உடைப்பும் கிராமத்து பகையின் விளைவை படம் பிடித்துக் காட்டுகிறது.

எட்டையபுரம் பாளையக்காரர் எட்டப்பருக்கும்  , பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மனுக்கும் இடையில் இருக்கும் பகை மேலோட்டமாக சொல்லப்பட்டுள்ளது. கட்டபொம்மன் , ஆங்கிலேயர்களுடான போரில் தோல்வியுற்று  கோல்வார்பட்டி ஜமீனுக்கு தப்பி வரும் போது ,  அவரது குதிரைக்கு லாடம் கழன்று  காயம் ஏற்பட அவர் உருளைக்குடியில் ஒரு நாள் மறைந்திருக்கும் நிலை ஏற்படுகிறது .  தனக்கு உதவிய எலியனுக்கும், பிச்சை ஆசாரிக்கும்  கோல்வார்பட்டி ஜமீன் மூலமாக கட்டபொம்மன் தங்க நகைகளை பரிசளிப்பதும் , அதை அவர்கள் வெள்ளையருக்கும் , எட்டப்பருக்கும் பயந்து அவற்றை பயன்படுத்தாமலே இறந்து போவதும் அன்றைய மக்களின் இழிநிலையை தெரிவிக்கிறது.

அதேபோல் மலையாள மாந்தரீகன் குஞ்ஞான், வேம்பாரில் மீனவர்களுக்கு தொல்லை தந்து கொண்டிருக்கும்  “அனுமன் முனி” யை சங்குக்குள் அடக்கி கொண்டு திருவனந்தபுரம் திரும்பும் வழியில் , அந்த அனுமன் முனி எட்டயபுரத்தில் உள்ள குளத்திற்குள் தாவி தப்பி அரண்மனைக்குள் புகுந்து கொள்வதும் , அதை அடக்க அருங்குளம் கிராமத்தில் இருக்கும் " இருளப்பசாமியை " புடிமண் எடுத்து ஏட்டையாபுரம் கோட்டைக்குள் கொண்டு வரும் நிகழ்வு அன்றைய மக்களின் மூடநம்பிக்கையை அப்பட்டமாக படம் பிடித்துக்காட்டுகிறது.

 இறுதியில், உருளைக்குடி கிராமத்திற்குள் கிறித்துவம் புகுந்து ஏசுவிற்கு கோவில் எழுப்பப்படுகிறது ; அதே போல் பள்ளிக்கூடமும் வருகிறது. பின்னர் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கிறது , அதனைத் தொடர்ந்து சுச்சி நாயக்கர் (பெரியார் ) மூலமாக நாத்திகமும் வருகிறது. நிறைஜூலியாக இருந்து உருளைக்குடியை வாழவைத்த  அந்தக் கண்மாய் வற்றிவிடுகிறது . அதனை புதிய அரசின் மக்கள் பிரதிநிதிகள் எடுத்துக் கொள்கிறார்கள்.  உருளைக்குடி மக்கள்  வாழ்க்கை முற்றிலும் மாறிப்போகிறது என்று நாவல் முடிகிறது.

நாவலின் சிறப்பு:

இந்த நாவலில் வரும் எல்லா கதைமாந்தர்களும் மிகவும் உயிர்ப்புடனும் , யதார்த்தமாகவும் இருக்கிறார்கள். எளிய, வெள்ளேந்தியான கிராமத்து வாழ்க்கையை இம்மி பிசகாமல் அப்படியே கொடுத்திருக்கிறார் சோ. தருமன். உதாரணத்திற்கு சிலரைப் பார்க்கலாம்;

கொப்புளாயி தான் இந்த நாவலின் மிகச் சிறந்த பாத்திரப்படைப்பு. மலடியாகப்போன வாழ்க்கைக்கு அவள் ஒரு  புதிய வடிவம் கொடுக்கிறாள். தனது எருமை மாடுகளை குழந்தைகளாக பாவிப்பதும் , அவைகளோடு பேசி மகிழ்வதும் , அவை தரும்  பால், தயிர் போன்றவற்றை கிராமத்து மக்கள் அனைவருக்கும் இலவசமாக தருவதும் , காட்டுப்பூச்சி என்ற அனாதையை மகனாக பாவித்து வளர்ப்பதும் இந்த சமூகத்திற்கு தேவையான அடையாளத்தைக் காட்டுகிறது.   இருக்கங்குடி மாரியம்மன் கோவிலுக்கு போகும்  பக்தர்களுக்கு நந்தவன தோப்பு அமைத்துக் கொடுப்பதும் , வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு மோர் கொடுத்து மகிழ்ந்து வாழ்ந்துவிட்டு மரணித்துப் போகிறாள். இந்த பாத்திரம் மானிடத்தின் அழகியலை மனதிற்கு புகுத்துகிறது. 

நாங்கிரியான் பகடை ஏட்டையாபுரம் அரண்மனையில் மாடுகளை மேய்த்து வருகிறான். கொழுகொழுவென்று இருக்கும் மாடுகளை சாப்பிடுவதற்காக அவற்றின் உறுப்புகளை இரகசியமாக சிதைத்து சாகடித்து பின்னர் தான் சாப்பிடுவதும் , குற்ற உணர்வில் குற்ற உணர்வினால் நோய் ஏற்பட்டு  ஊனமுற்றவனாகி  திருந்தி அழுவதும் அவன் மீது நமக்கு இரக்கத்தை ஏற்படுத்துகிறது. அவன்  மகள் மாதாயி திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆகிவிடுகிறாள். ஆனால் கிராம பஞ்சாயத்தில் அவன் காதலன் கருப்பன் அதை  மறுப்பதும் ,  நாங்கிரியான் அக்குழந்தையை தனது பேரக்குழந்தையாக வளர்த்துக் கொள்கிறேன் என்று ஏற்றுக்கொள்ளும் போது மிக உயர்ந்த இடத்திற்குப் போய்விடுகிறான். வெம்பி வாழும் மாதாயி , கருப்பனை உளியால் தலையை வெட்டி கொன்று விட்டு , தனது வயிற்றைக் கிழித்து அந்த நிறைமாத குழந்தையை வெளியே எடுத்து அவன் மேல் வீசிவிட்டு மடிந்து போகிறாள். அவளின் அறசீற்றத்தின் கோபம் கண்டு   நாம் திகைத்துப் போகிறோம்.

குப்பாண்டி ,  அந்தக்கிராமத்தில்  ஒரு சித்தனாக வாழ்வதும் , உயிருடன் இருக்கும் போதே சமாதி கட்டிக்கொண்டு வாழ்ந்து , இறுதியில் அதில் அடங்கிப் போவதும் ஒரு இல்லறத்துறவியின் புனிதமான வாழ்க்கையை பிரதிபலிக்கிறது .

மகாலிங்கம் பிள்ளை,  வெற்றிலை கொடிக்கால் வளர்க்க , அதன் சூட்சுமத்தை பெரிய நாடாரிடம் கற்றுக்கொண்டு உருளைக்குடியில் அதை செயல் படுத்தும் போது மரணித்துப் போகிறார். அவரின் கனவு நிறைவேறாமல் போவது பரிதாபமாக இருக்கிறது.

எலியனும், பிச்சைஆசாரியும்,  நாவலின் பரிதாபத்திற்கு உரிய பாத்திரங்களாக வளம் வருகிறார்கள். கட்டபொம்மன் தன்னை காப்பாற்றியதற்காக அவர்களுக்கு பரிசளித்த தங்க நகைகளை அனுபவிக்க முடியாமல் , வீட்டுக்குள் புதைத்து வைத்துக் கொண்டு பயந்து வாழ்வது பரிதாபமாக இருக்கிறது. இந்த தங்கப் புதையல்  அவர்களது சந்ததியினருக்கும் கிடைக்காமலே  மர்மமாக காணாமல் போகிவிடுகிறது.

சொக்கலிங்கபுரத்தில் வாழும்  சித்தாண்டி , தனது பங்காளி இருளப்பனை பழிவாங்க நிறை கண்மாயை வெட்டிவிட்டு,  அவன் வயலை அழிப்பதன்மூலம்    , குரோதமும் கிராமவாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது  என்பதை பதிவு செய்திருக்கிறார் சோ.தருமன்.

அடுத்து மலையாள மாந்தரீகன் குஞ்ஞான் பாத்திரப்படைப்பு மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கிறது. அவன் அனுமன் முனியை வசப்படுத்துவதும் , அந்த முனியினால் எட்டையாபுரம் அரண்மனைக்குள் குஞ்ஞான் சித்திரவதை அனுபவிப்பதும் , இறுதியில் மரணித்து அரூபவமாக மறைந்து விடுவதாக ஒரு மாயமனிதனாக அவன் வருகிறான். இக்கதை அன்றைய மக்களின் மூட நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறது.

அதே போல் உருளைக்குடி தொத்தல் பகடையின் " கள்ளின்" அனுபவம்,  இச்சியன் கிறித்துவமதத்திற்கு  மாறி ஈசாப்பாக வடிவெடுத்து கோட்டுபோட்டுக் கொண்டு அலைவது, சாயல்குடி அத்தர் விற்கும் யூசுப்பாய் , தற்கொலை செய்து கொள்ளும் அவர் மனைவி தௌலத்பீவி என்று பல மனிதர்களின் அடுக்கடுக்கான  சுவாரசியமான வாழ்க்கையை இந்த நாவல் பேசுகிறது.

சோ. தர்மனின்   மொழி வளம் நாவல் முழுவதும் நன்றாக சிதறி இருக்கிறது . அது மிகவும் அற்புதமாகவும் இரசிக்கும் படியும் உள்ளது. உதாரணத்திற்கு சிலவற்றை பார்க்கலாம்  ;

Ø  கோடை உழவு, நிலம் மணப்பெண்ணாய் கனிந்து கிடக்கும். மழைநீர் தேங்கி மண் மகிர்ந்து உரம் கலந்து விதைப்பதற்குத் தயாராய் இருக்கும்.

Ø  கண்மாய் , கருவுறக் காத்திருக்கும்  புதுப்பெண்ணின் வயிறாய் விரிந்து கிடக்கும்.

Ø  மறஞ்சு இருந்தா தான் யோனி , மறைக்காம இருந்தா ஏணி. ஏணியில் எல்லோரும் ஏறுவான், யோனியில் எல்லோரும் எற மாட்டான்.

Ø  கொப்புளாயி பால் கறப்பதென்பது அவள் லயித்துச் செய்யும் வேலைகளில் ஒன்று. ஒரு வேளை வேறு சுகம் காண்கிறாளோ என்னவோ!

Ø  இருக்கன்குடியில் ஓடும் இரண்டு ஆறுகளிலும் தண்ணீர் மட்டும் ஓடவில்லை.  கொப்புளாயி செய்து வரும் புண்ணியமும் சேர்ந்தே ஓடியது.

Ø  அள்ள அள்ளக் கொறையாது பள்ளனோட  களம், பாங்களத்தை (பாழாப்போன களம்) பாக்காது  பள்ளனோட கண்ணு .

Ø  குற்றம் மனிதர்களால் இயற்றப்பட்ட சட்ட ஒழுங்கு விதிகளை மீறுவது . பாவம், தெய்வங்களாலும் , மத நம்பிக்கைகளாலும் , ஞானிகளாலும் , ஆச்சார ரிஷிகளாலும் போதிக்கப்பட்ட நெறிகளை மீறுவது.

Ø  “மனுஷர்களுக்கு மாதிரியே சாமிகளுக்கும் ஆசாபாசம் இருக்காதா? இப்ப நம்ம ஊரு சாமி காளியம்மா இருக்கு, பக்கத்திலே வைரவ சாமி இருக்கு. அதே மாதிரி வேற ஊரு ஆம்பளைச் சாமி , பொம்பளைச் சாமிக நம்ம ஊரு சாமிகளோட தொடுப்பு வச்சிருக்கும் . நம்ம ஊரு ஆம்பளைச் சாமி , பொம்பளைச் சாமிக வேற ஊரு சாமிகளோட தொடுப்பு வச்சிருக்கும்”.

Ø  மாடு இல்லாதவன் மகாராஜன், பொண்டாட்டி இல்லாதவன் புண்ணியவாளன் என்பது கிராமத்து சொலவாடை.

Ø  உருளைக்குடி ஆட்களின் அத்தனை பேர்களின் வயிறும் ஒரே வயிறாக மாறிப்போனதே கண்மாய்.

Ø  சடசடத்து  விழும் நீர்த்துளிகள் உயிர்ப்பின்  விதைகளாய் பூமியில் விழுந்தன. குஞ்ஞான் கரைந்து உருகிக் கொண்டிருந்தான்.

Ø  கழுகின் மேனியில் ஒட்டிக் கொண்டதை உணர்ந்து கொண்டது புறா.

Ø  “சுடுகாடு பிணம் எரிக்கும், பிணம் புதைக்கும் நிலம் மட்டுமல்ல , பல்வேறுபட்ட புத்தகங்கள் துயிலும் பல அடுக்கு புத்தக அலமாரி . மண்ணும் சாம்பலுமே  அழியாத மைகொண்ட எழுத்துக்கள் . தத்துவம் , விசாரம், வியாக்கியானம் , பொய், சூது , வாது, பணம், பதவி, துரோகம், புரட்டு, ஆட்சி, அதிகாரம், காமம், கதி, சல்லாபம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய கோடானுகோடி வரலாற்றுப் புத்தகங்கள் துயிலும் இடமே சுடுகாடு”.

மொத்தத்தில் இந்த நாவல் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு உருளைகுடிக் கிராமம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில்  வாழ்ந்த மக்களின் உணர்வுகளையும் , வாழ்க்கையையும்  , உள்ளதை உள்ளது போல் கூறுவதாக எழுதப்பட்டுள்ளது .


நாவலின் பலவீனம் :

நாவலில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் சாதியின் பெயருடனே வருவதால் சிலருக்கு இந்நாவல் வெறுப்பைத் தந்து விடும் அபாயம் இருக்கிறது. ஆனால் , கதை நிகழும் காலம் கி.பி. 1790 முதல் 1950 வரை என்பதால்  , அன்றைய மக்கள் சாதீய அடையாளங்களோடு தான் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பது உண்மை.

மற்றும்  , கட்டபொம்மன் , ஊமைத்துரை  காலத்தில் உருளைக்குடியில் வாழ்ந்த குப்பாண்டி , இந்திய விடுதலைக்கு பின்னர் , அதாவது 1950 க்கு  பிறகு  சமாதி அடைவது சற்று குழப்பத்தைத் தருகிறது. ஒரு மனிதன் இவ்வளவு நாட்கள் உயிர் வாழ்ந்திருக்க முடியுமா?

அதேபோல் கட்டபொம்மன், ஊமைத்துரை பெயரை நாவலில் சரளாக பயன்படுத்திய நாவலாசிரியர் , எட்டையாபுரம் ஜமீனை ஆளும் எட்டப்பர் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

அடுத்து நாவலின் இறுதிப்பகுதி சற்று நீளமாக இருப்பதால் அலுப்பு தட்டுகிறது. ஒரு நூறு முதல் நூற்றி அம்பது பக்கங்களைக் குறைத்திருந்தால் நாவல் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் என்று கருதுகிறேன்.

நாவலின் சாரம்:

இந்த நாவல் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு வாழ்ந்த உருளைக்குடி மக்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பதாக எழுதப்பட்டுள்ளது. அக்கிராமத்தின் விவசாயத்திற்கு ஆணிவேராக இருக்கும் அந்த கண்மாய் சார்ந்தே மக்கள் வாழ்த்து வந்து வந்துள்ளார்கள். அம்மக்களின் உழவுத் தொழில், குடும்பம், சாதீப்பிணைப்பு , ஒற்றுமை , காமம், குரோதம்  மற்றும் சோகம் என்று அனைத்தையும் உள்ளடக்கியதாக உள்ள இந்த நாவல்  பின் நவீனத்துவ இலக்கிய சாயலோடு  இருக்கிறது.  சோ. தர்மன், இந்த நாவலை எழுதியதின் மூலம் அவர் பிறந்த "உருளைக்குடி"  கிராமத்தை பற்றி உலகம் முழுவதும் பேச வைத்திருக்கிறார் என்று நம்புகிறேன். இந்த நாவலுக்கு " சாகித்திய அகாடமி விருது" கொடுத்தது  மிகவும் சரியானதே!. அதற்கான முழுத்  தகுதியும் இந்த நாவலுக்கு உண்டு.


சு.கருப்பையா
மதுரை
+919486102431