Monday 23 December 2019

மதில்கள்-நாவல் .


வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில்: சுகுமாரன்
வெளியீடு: காலச்சுவடு , 2015
பக்கங்கள்: 71
விலை: ரூ.65 /-





மதில்கள்  ….

இந்த  குறுநாவல் 1962 -63   இல் வைக்கம் முகம்மது பஷீர் அவர்களால் எழுதப்பட்டது. 1942   ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட  பஷீர் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு சக கைதி நாராயணி மேல் அவருக்கு ஏற்பட்ட காதலும் , சிறை அனுபவங்களும் தான் இந்த குறுநாவலாக வடிவெடுத்திருக்கிறது.


பஷீர் சிறைக்குள் காய்கறித் தோட்டம் போடுவதும் , ரோஜா  பூக்கள் வளர்ப்பதும் , மரங்களில் விளையாடும் அணில்களை ரசிப்பதும்  மிகவும் இயல்பாக இருக்கிறது.

அதேபோல் சிறைச்சாலையின் மறுபக்கத்தில் இருக்கும் பெண்கள் பகுதியிலிருந்து  வரும் " பெண்ணின் மணமும்" அவரை ஈர்க்கிறது. பெண்ணிற்கு மணம் இருப்பதையும் , அதை தமது நுட்பமான மனத்தால் அறிந்துகொள்ள முடியும் என்பதையும் பஷீர் உணர்ந்திருக்கிறார்.


இவருக்கும் , நாராயணிக்கும் இடையே சிறைக்குள் இருக்கும் நீண்ட நெடிய மதில்கள். அதற்கு உயிரூட்டி இருக்கிறார் பஷீர்.  சிறைச்சாலைக்குள் தேநீர் போடுவது , தோட்டவேலை செய்வது மற்றும் ஜெயலரின் தில்லுமுல்லுகள் என்று சாதாரணமாக நகரும் நாவல் , நாராயணி வந்த பிறகு நம்மை வேறு தளத்திற்கு அழைத்துச் செய்கிறது.


மதிலுக்கு இருபுறமும் நின்று கொண்டு அவர்கள் பேசும் சரசம் நமக்கு விரசத்தைத் தரவில்லை; ரசிக்கவே முடிகிறது.

இப்படியாக வளரும் காதல் , அவர்களை சந்திக்கத் தூண்டுகிறது. ஆகவே ,  ஒரு வியாழக்கிழமை  சிறைச்சாலைக்குள் இருக்கும் மருத்துவனையில் சந்திக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். அடையாளங்களை பரிமாறிக் கொள்கிறார்கள், நாராயணி  தனது வலது கன்னத்தில் மச்சம் இருக்கும் என்று கூறுகிறாள். பஷீரின் கைகளில் சிவப்பு ரோஜாப்பூ. பஷீர் கனவுகளில் மிதக்கிறார். ஆனால், புதன்கிழமை மதியம் ஜெயிலர் அனியன் வருகிறார். அவர் கையில் ரோஜாப்பூக்கள் . ஆம்! பஷீருக்கு விடுதலை.

அந்த தருணத்தை பஷீர் இப்படி எழுதியிருக்கிறார்," நான் நடுங்கிப் போனேன். என்னுடைய கண்கள் காணாமற் போயின, காதுகள் கேட்காமற்  போயின, மொத்தத்தில் ஒரு திணறல். எனக்கு எதுவும் புரியவில்லை". மகிழ்ச்சி தரவேண்டிய அத்தருணம் பெரும் துக்கத்தைத் தருகிறது.

பஷீர் தமது ரோஜாத்தோட்டத்திற்கு வருகிறார். ஒரு சிவப்பு ரோஜாவைப் பறித்து முத்தமிட்டபடி பார்க்கிறார். ஜெயிலர் அவரின் லாக்கப் கதவை பூட்டுகிறார். பஷீர் , தமது மனக்கதவைப் பூட்டுகிறார்.

ஒரு மனிதனின் உணர்வோடு  கலந்துவிட்ட காதலானது மகத்துவமானது. அக்காதல்  வெற்றி பெறும் பொழுது  அவனுக்கு  மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தருகிறது; மாறாக , தோல்வியுறும்  போது அழியாத காயத்தைத் தருகிறது.  , அது அவன் மரணிக்கும் வரை உடன் பயணிக்கும் வடுவாகவே  இருக்கிறது  

பஷீர் தமது காதலை இந்த நாவல் மூலம் அப்படியே நம் மனதிற்குள் பதிவேற்றுகிறார். இந்தியாவின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக அவர்  போற்றப்படுவதற்கான அடையாளத்தை நாம் இந்த நாவலில் காணலாம்.

இந்த மதிலுக்கு உயிர் இருக்கிறது.

பஷீர் அந்த மதிலையும் நாராயணியையும்  தமது இறுதி காலம் வரை சுமந்து திரிந்திருப்பார்....





Wednesday 6 November 2019

நூல் மதிப்புரை: அக விடுதலையே பெண் விடுதலை.


ஆசிரியர்: முனைவர் .நா.நளினிதேவி
பக்கங்கள்: 114
வெளியீடு : கைத்தடி பதிப்பகம்
வருடம்: ஜூலை-2019
விலை: ரூ.110/-
தொடர்பு: தொலைபேசி:044-48579357;
               கைபேசி: +919566274503








முனைவர் . நா. நளினிதேவி அவர்கள்  இந்த நூலின் மூலம் பெண்ணின் உரிமைகள்  மற்றும் விடுதலையைப்  பற்றி  தந்தை பெரியாரின் வழியில்     சற்று விரிவாக பதிவு செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அவர் விவாதத்திற்கு உட்படுத்தியிருக்கும் முக்கியமான கருப்பொருள்கள்;


Ø  ஆண் ஆதிக்கத்தால் பூட்டப்பட்ட பெண்களின் அகஉணர்வு கட்டுகளையும் , தளைகளையும் தகர்த்தெறிதல் வேண்டும்.
Ø  கல்வி கற்றால் தான் பெண் விடுதலை பெற முடியும்.
Ø  மரபு  வழியாக வரும் அகச்சிக்கலும் , புறச்சிக்கலும்  பெண்களைப் பாதிக்கிறது ; உதாரணமாக பெண்களுக்கு மட்டுமே உரிய " கற்பு"  மற்றும் குடும்பப்பொறுப்புகள்.
Ø  தடை செய்யப்பட்ட உறவு மற்றும் நட்பு.
Ø  பாலியியல் சுதந்திரமின்மை: கற்பு என்ற கற்பனைப் பொருளுக்குள் அடைத்து வைத்தல்..
Ø  பெண்களை பாலியியல் சின்னமாகப் பார்ப்பது.
Ø  பெண்களுக்கு எதிரான இலக்கியங்களும் , புராணங்களும்,
Ø  பெண்களுக்கு ஆதரவான படைப்புகள்.
Ø  பெண்களின் மீதான பாலியியல் அடக்குமுறை.
Ø  பெண்விடுதலையும் பாலியியல் தளையும்.
Ø  கற்பும் தளையும்.
Ø  காதலும் , திருமணமும்.
Ø  தடைகளை உடைத்தெறிந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும்; அதற்கு அகவிடுதலை தேவை,

மேற்கண்ட கருத்துக்களை மிக ஆழமாக ஆராய்ந்து, எப்படியெல்லாம் பெண்கள் அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று  தெளிவாக வாதிடுகிறார் முனைவர். நா.நளினிதேவி.

குறிப்பாக, பெண்களுக்கு கல்வி, திருமணம், பாலியியல் உணர்வு போன்றவற்றில் கட்டவிழ்க்கப்பட்ட சுதந்திரம் வேண்டும் என்று நியாயம் கேட்க்கிறார். கற்பு என்ற கற்பனையான கருத்தை பெண்களுக்கு மட்டுமே கொடுத்துவிட்டு , ஆண்கள் பல திருமணங்கள் செய்து கொள்வதும் அல்லது பல பெண்களுடன் உறவு கொள்வதும் எந்தவிதத்தில் நியாயம் என்ற கேள்வியையும் எழுப்புகிறார். இவர் எழுப்பும் வாதங்களுக்கும் , கேள்விகளுக்கும் இந்திய சமூகத்தில் தீர்வு கிடைக்குமா? , ஆண்களுக்கு இணையாக பெண்கள் சுதந்திரமாக செயல்பட  முடியுமா ? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

இப்பிரச்னைகளை உலக வரலாற்றோடு பொருத்திப் பார்க்கும் போது , நமக்கு பல உண்மைகள் தெரிய வரும்.

முதலில் தாய்வழிச் சமூகமாக இருந்த மக்கள் கூட்டம் , தந்தைவழிச் சமூகமாக தோற்றமெடுத்து , குடும்பம் , தனிச்சொத்து என்று மாறிய பிறகு நிலப்பிரபுத்துவக்கூட்டமும் , அடிமைச்சாதியினரும் தோன்றுகிறார்கள். அது தான் பெண்களை தங்களுடைய உடைமைப் பொருளாகவும் , அடிமையாகவும் கருதத் துவங்கிய காலம். இந்த சூழலில் , ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியக்கூட்டம் பெண்களை அடிமையாகவே கருதினர்; நடத்தினர். அவர்களை சூத்திரர்களுக்கு இணையாக வைத்து தீண்ட தகாதவர்களாகவே பார்த்தார்கள்   .  அவர்கள் உருவாக்கிய வேதங்களில் இருந்து தோன்றிய வர்ணாசிரமக் கோட்பாடு தான் இன்று வரை இந்திய மக்களை ஆட்சி செய்கிறது. அதுவே மக்களை சாதி , இன ரீதியாக பிரித்து வைத்திருக்கிறது. தனக்கு பிறக்கும் குழந்தைகளுக்கே  சொத்து என்ற கொள்கையை அது கொண்டிருக்கிறது. அதுவே, பெண்களையும் தனக்குரிய சொத்தாக பாவிக்கத் தூண்டியது . பெண்களை தனக்குரிய போகப் பொருளாகவும் , தன்னுடைய  சந்ததியைக் கொடுக்கும் ஒரு கருவியாகவும் பார்த்தது. அவளுக்கு கல்வி போதிக்கப்படவில்லை ; விரும்பிய ஆண்மகனை திருமணம் செய்து கொள்ளமுடியாது; கணவனைத் தவிர பிற ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. கற்பு அங்கே போதிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. அதாவது , பெண்களின் யோனி அவளது  கணவனுக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலை உருவானது!. இதுவே  பெண் அடிமையான வரலாற்றின் ஒரு பகுதியாகும்.   அப்படிப்பட்ட அடக்கு முறையே  இன்றும் பெண்களின் மீது தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது .  இப்படிப்பட்ட ஆணாதிக்க சமூகம் பெண்களின் அக  உணர்வுக்கு எப்படி செவி சாய்க்க முடியும் ? .

ஒரு மனிதனின் பசி, தாக்கம், உறக்கம் போல் பாலியியல் உணர்வும் தனிமனிதன் சம்பந்தப்பட்டது , அதில் தலையிட மற்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்கிறார் தந்தை பெரியார். அக்கருத்தையே முன்னிறுத்துகிறார் முனைவர்.நளினிதேவி . தனது காமஇச்சையை தனித்துக் கொள்ள பிற பெண்களுடன் உறவு கொள்ளும் பாலியியல் சுதந்திரம் ஆண்களுக்கு இருக்கும் போது , பெண்களுக்கு மட்டும்  ஏன் இருக்கக்கூடாது ? என்ற ஆசிரியரின் கேள்வியில் நியாயம் தெரிகிறது.  ஆனாலும்  தனது மனைவியை பிற ஆண்களுடன் பகிர்ந்து கொள்ளவும் , அவளுக்குப் பிடித்தவனோடு உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கவும் தேவையான பரந்த மனப்பான்மை இன்று வரை எந்த ஆணுக்கும் இருக்கவில்லை.   ஒரு பெண் பிறந்ததிலிருந்து தந்தை, சகோதரன்  பிறகு மகன் என்று அனைவருக்கும் அடிமையாக வாழும் சூழலே இன்றும் நிலவுகிறது. அவளால் சுதந்திரமாக செயல் பட இயலாது (சில விதி விலக்குகள் உண்டு). ஏன் இந்த இழி நிலை?.

இதற்கெல்லாம் அடிப்படை காரணமாக இருப்பது சாதியும் , சொத்தும் தான். இந்தச் சமூகம் பெண்களை தங்கள் சாதியின் குறியீடாகவே பார்க்கிறது . அதில் கலப்பு ஏற்பட ஆதிக்கசாதி மனநிலை அனுமதிப்பதில்லை. கலப்பு மணத்தால் தனது சாதிக்கும் , சொத்திற்கும் இழப்பு வரும் என்ற காரணத்தாலேயே பெண்களையும் , அவர்களின் உணர்வையும் உரிமைகளையும் அடித்து நொறுக்கி கூண்டிலேயே பூட்டி வைத்திருக்கிறார்கள். இந்தப் பூட்டை உடைத்து வெளியேறுவது பெண்களின் கைகளில் தான் இருக்கிறது.  அதற்கு இந்திய குடும்ப அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு , பெண்களுக்கு முழுச்சுதந்திரமும் , அதிகாரமும் கிடைக்க வேண்டும் .  பெண்கள் தங்களின் விடுதலையை கேட்டுப் பெறுவதை விட எடுத்துக் கொள்வது தான் சிறந்தது. அதற்கு இந்த நூல் உந்து சக்தியாக இருக்கும் என்று கருதுகிறேன். ஐயா கி.வீரமணி அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டவாறு , இந்நூல் பெண்கள் மத்தியில் பெரும் பாய்ச்சலோடு பரவ வேண்டும் என்பதையே நானும் விரும்புகிறேன்.

இருந்தாலும் இந்து மதம் இருக்கும் வரை சாதியையும் , பெண்ணடிமைத்தனத்தையும் களைந்து , பெண்கள் அகவிடுதலை பெறுவது   என்பது மிகவும் கடினம்  என்றே எனக்குத் தோன்றுகிறது. 







இறுதியாக ,  இந்த நூலை எளிமையான  தமிழில் தெளிவாக எழுதியதற்கும் , ஆழமான கருத்துக்களை உள்ளடக்கிய அழகிய ஓவியங்களையும், படத்தையும் புத்தகத்தில் இடம் பெற செய்த முனைவர்  .நா. நளினிதேவிக்கு பாராட்டுக்கள் . குறிப்பாக , தாய் தமது மகளுக்கு சொல்வது போன்ற முதல் பக்க ஓவியமும் , பல கட்டுத்தளைகளை கொண்ட ஆணின்  அகந்தையை  கட்டுடைக்க   அம்பெய்தும் படமும் மிகவும் அர்த்தமுள்ளது .  

ஆனாலும், இந்தியாவில் நிகழும் ஆணவப்படுகொலைகள் ,  தொலைக்காட்சி (தொடர்கள்) மற்றும் ஊடகங்களின் மூலம்   பெண்களை கொச்சைப்படுத்தும் நிகழ்வுகளையும்  , ஆன்மீகத்தின் பெயரால் பெண்களிடமுள்ள மூட நம்பிக்கைகள் போன்றவற்றையும்  முனைவர்.நா. நளினிதேவி கையில் எடுக்கவில்லை என்ற குறையும் உள்ளது.   ஆனாலும் , இந்த நூல் பெண்கள் மத்தியில் மட்டுமல்ல ஆண்களிடத்திலும்  ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை . 



Saturday 26 October 2019

மருது சகோதரர்கள்




பெரிய மருது : பிறப்பு 17-12-1748: இறப்பு  24-10-1801
சின்ன மருது : பிறப்பு 1753:  இறப்பு 24-10-1801


மருதிருவர் என்று அழைக்கப்படும் மருது சகோதரர்கள் பரம்பரை ஆட்சி உரிமை பெற்ற பாளையக்காரர்கள் அல்லர். அவர்கள் திறமையாலும் , உழைப்பாலும் , போராட்டத்தாலும் மக்களின் அன்பினாலும் உருவெடுத்த உண்மையான மக்கள்  தலைவர்கள் . இராமநாதபுரம் நரிக்குடிக்கு அருகே முக்குளம் எனும் கிராமத்தில் மொக்கப் பழனியப்பன் சேர்வை எனும் சாதாரணப் படைவீரனுக்கும்  பொன்னாத்தாள் எனும் எளிய பெண்மணிக்கும் பிறந்த மருது சகோதரர்களை அவர்களுடைய தந்தை சிவகங்கை அரசர்முத்து வடுக நாதரிடம் வேலைக்குச் சேர்த்து விடுகிறார். ஆரம்பத்தில் மன்னரது குதிரைகளையும் , வேட்டை நாய்களையும் பராமரிக்கும் எளிய வேலைகளை மருதிருவர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கட்டாய வரி வசூல் கொள்ளை நடத்தி வந்த சுகபோகியாக ஆற்காட்டு நவாப் வரி வசூலை ஆங்கிலேயர்களுடன் பங்கிட்டுக் கொள்வதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களது இராணுவத்தைப் பயன்படுத்துகிறான்.கொள்ளையில் தங்கள் பங்கை அதிகரிப்பதற்காக கிழக்கிந்தியக் கம்பெனிக்கான வரி பல இடங்களில் 100 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

இப்படித்தான் ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப்படை 1772  இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றுகிறது. அடுத்து சிவகங்கை . வெள்ளையன் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்துவடுகநாதர் காளையார் கோவில் போரில் கொல்லப்படுகிறார். சிவகங்கைச் சீமையின் வீரவரலாற்றில் முதல் களப்பலியாகிறார். அவரது பட்டத்தரசி வேலு நாச்சியார் , மகள் வெள்ளச்சி , அமைச்சர் தாண்டவராயன்பிள்ளை , மற்றும் மருதிருவரும் விருப்பாட்சிக்குத் தப்பிச் செல்கின்றனர்.

விருப்பாட்சியை உள்ளடக்கிய திண்டுக்கல் பகுதி அப்போது ஹைதர் அலியின் ஆட்சியில் இருந்தது.  அமைச்சர் தாண்டவராயன் சிவகங்கையை மீட்பதற்கு ஹைதரிடம்  உதவி கோருகிறார். சிவகங்கை மட்டுமல்ல ஏனைய பாளையங்களையும் விடுதலை செய்வதாக ஹைதரும் உறுதியளிக்கிறார்.  இதனிடையில் அமைச்சர் மரணமடைய பாளையத்தை மீட்கும் பொறுப்பு மருது சகோதரர்களிடம் வருகின்றது. இந்தப் போராட்டத்தினூடாகத் தான் இவர்கள் காலனியாதிக்க எதிர்ப்பில் உறுதியடைகின்றனர். நவாப்பின் ஆட்சியை எதிர்த்துக் கலக்கம் செய்ய சிவகங்கை மக்களைத் திரட்டுகிறார் சின்னமருது. இராமநாதபுரம், சிவகங்கை மக்கள் கிளர்ச்சி செய்கின்றனர். மருதிருவரின் தலைமை போராட்டத்தைத் தீவிரப்படுத்துகிறது. இதே காலகட்டத்தில் , 1780  ஆம் ஆண்டு வெள்ளையர்கள் மீது படையெடுக்கிறார் ஹைதர்.  ஹைதரின் திண்டுக்கல் தளபதி சையத் சாகிபு அளித்த சிறு படையின் உதவியுடன் மருதிருவரும் சிவகங்கையை மீட்க போர் தொடுகின்றனர். சிவகங்கை மீட்கப்படுகிறது. வெள்ளச்சி அரசியாகவும், பெரிய மருது தளபதியாகவும் , சின்ன மருது அமைச்சராகவும் பதிவியேற்கின்றனர். மருதிருவரின் வீரம் மக்களிடையே புகழாகவும் செல்வாக்காகவும் பரவத் தொடங்குகிறது. ஆத்திரம் கொண்ட நவாப் கம்பெனியின் உதவியுடன் சிவகங்கை மீது படையெடுக்கிறான். 1783  இல் கர்னல் புல்லர்டன் தலைமையிலும் , 1789  இல் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் தலைமையிலும் கம்பெனிப் படைகள் சிவகங்கையை ஆக்கிரமிக்க முயன்றன. இத்தாக்குதலின் போது தாற்காலிகமாகப் பின் வாங்கிய மருதிருவர் கம்பெனிப் படைகள் அகன்றதும் தமது பாளையத்தை மீண்டும் கைப்பற்றுகின்றனர். இறந்து போன மன்னர் முத்துவடுக நாதன் மகள் வெள்ளச்சியை, அல்லது தந்தை வழி உறவினரான வெங்கம் பெரிய உடையது தேவருக்கு மணம் செய்து கொடுத்து , அவரையே சிவகங்கையின் அரசராகவும்   ஆக்குகின்றனர்.

இக்காலகட்டத்தில் மாவீரன் திப்புவை ஒழிப்பதற்குக் கவனம் செலுத்தி வந்த கம்பெனி சிவகங்கையோடு முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. மருதிருவருடன் ஒத்துப் போகுமாறு நவாப்பையும் அறிவுறுத்தியது.

இப்படி வெள்ளையர்கள் மற்றும் ஆற்காட்டு நவாப்பின் சூழ்ச்சிகள் , படையெடுப்புகளை முறியடித்து சிவகங்கையைக் காப்பாற்றிய மருதிருவர் 1790  முதல் அமைதியாக ஆட்சி புரிந்தனர்.

" சின்ன மருது எளியவர். செழிப்பான நாட்டின் உண்மையான மக்கள் தலைவர் ; அனைவரிடமும் வேறுபாடின்றி பழகும் இயல்பினர்; அவரது தலையசைப்பையே சட்டமாகக் கருதி அதற்குக் கீழ்ப்படிய மக்கள் தயாராக இருந்தனர்; தனக்கென்ன ஒரு மெய்க்காப்பாளனைக் கூட வைத்துக் கொள்ளாத அவரை 1795  இல் அவரது சிறுவயல் அரண்மனையில் சந்திக்கச் சென்றேன். எளிதில் மக்கள் சென்று வரும் வகையில் அமைந்திருந்தது அவ்வரண்மனை. அவருக்கு கடவுளின் அருள் கிட்ட வேண்டும் என் மக்கள் வேண்டியதையும் கேட்டறிந்தேன். மருதிருவர் நினைத்திருந்தால் வெள்ளையர்களுடன் சமரசமாகப் போயிருக்கலாம். அவர்களுக்கு நாங்கள் எந்தக்குறையும் வைக்கவில்லை. அதனால் அவர்கள் எங்கள் மீது சினங்கொண்டு போர் தொடுத்தார்கள் என்பதும் எனக்கு விளங்கவில்லை " என்று ஆங்கிலேயத் தளபதி ஜேம்ஸ் வெல்ஷ் தமது நூலில் குறிப்பிடுகின்றான்.

1790  களில் வெள்ளையர்களோடு சிவகங்கைப் பாளையத்திக்குத் தீவிரமான முரண்பாடுகள் இல்லையென்ற போதிலும் , வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பு நாடெங்கும் அதிகரித்து வருவதை மருதிருவரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. கட்டபொம்மனைப் போராடத் தூண்டுகிறார் சின்னமருது. 500  வீரர்களை அனுப்பி உதவுகிறார். தென் தமிழகத்தில் கூடடணியை உருவாக்கப் பாடுபடுகிறார். இராமநாதபுரம் கூட்டிணைவிற்குத் தலைமையேற்றதோடு , கட்டபொம்மனைத் திருநெல்வேலிக்கு கூட்டிணைவுக்குத் தலைமை தாங்கவும் வைக்கிறார்கள் மருது சகோதரர்கள்.

1801  - திப்பு சுல்தான் , கட்டபொம்மன், தூந்தாஜி வாக் அனைவரும் கொல்லப்பட்டுவிட்ட காலம் (திப்புவின் வீரமரணம் 04-05-1799,  கட்டபொம்மன் தூக்கிலடப்பட்ட நாள் 17-10-1799, தூந்தாஜி வாக் வீரமரணம் 10-09-1800,  ) . தீபகற்பக் கூட்டிணைவு பெரிதும் தளர்ந்து இருந்த நேரத்தில் மருதிருவர் கிளர்ச்சிக்குத் தலைமையேற்கின்றனர். இராமநாதபுரத்தில் வெள்ளையர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த மைலப்பன் அங்கிருந்து தப்பி மருதிருவரிடம் தஞ்சமடைகிறார்.  அதேபோல் பாஞ்சாலங்குறிச்சியின் வீட்சியைத் தொடர்ந்து மே-28  அன்று ஊமைத்துரையும் சிவத்தையாவும் தம் வீரர்களுடன் சிவகங்கைக்கு வருகின்றனர்.



சிவகங்கையை மையமாகக் கொண்டு , தென் தமிழகமெங்கும் வெள்ளையருக்கெதிரான போராட்டத் தீ பரவத் தொடங்கியது. அஞ்சி நடுங்கிய துரோகி தொண்டைமான் கவர்னருக்குக் கடிதம் எழுதுகிறான்: " சின்னமருது இப்போது சிவத்தையாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு நாட்டில் கலகத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறான். திருநாவலூர் , நத்தம், மேலூர் முதலிய கோட்டைகளைக் கைப்பற்றியுள்ளான். ஆங்கில அரசுக்கு உரிமையான இராணுவக் கிடங்குகளைத் தாக்கித் தளவாடங்களை கொள்ளையடித்துத்துள்ளான். மேலும் ஒரு கிளர்ச்சிப்படையை இராமநாதபுரத்துக்கு அனுப்பியுள்ளான். எங்கு நோக்கினும் கலகம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது". தொண்டைமான் இந்த கடிதத்தை எழுதிக் கொண்டிருந்த போதே சின்னமருதுவின் மகன் சிவத்தம்பி தலைமையிலான படை அறந்தாங்கியைக் கைப்பற்றுகிறது. புதுக்கோட்டையும் பறிபோய்விடுமோ என்ற பீதியில் அலறுகிறான் தொண்டைமான்.

ஆனால் " துரோகியானாலும் நம் நாட்டவர்கள் " என்று புதுக்கோட்டையை விட்டு விட்டு கம்பெனியின் நேரடி ஆட்சிப் பகுதிகளை மட்டும் தாக்குகிறது கிளர்ச்சிப்படை. தஞ்சை மாவட்டத்தில் நுழைந்து நாகூர் வரை செல்கிறது.

வடக்கே சத்தியமங்கலம் முதல் தெற்கே நெல்லை மாவட்டம் களக்காடு வரை, இப்போர் நடைபெற்றது. ஊமைத்துரை, சிவத்தையா தலைமையிலான படை மதுரை, திண்டுக்கல் பகுதியிலும் , மைலப்பன், மருதிருவரின் தலைமையிலான படைகள் இராமநாதபுரம் , சிவகங்கைப் பகுதியிலும் போர் புரிந்தனர். வெள்ளையர்களிடமிருந்து பல பகுதிகள், கோட்டைகள் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டன. கிளர்ச்சியாளர்களின் கொரில்லாப் போர்முறையினால் வெள்ளையர்களின் படைவரிசை பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. " திப்புவையே வென்று விட்டோம்"  என்று ஆணவத்துடன் வந்த கம்பெனிப்படை பல தளபதிகளை இழந்து மூக்கறுபட்டது.

அடிபட்டுக் கந்தலாகி, தட்டுத்தடுமாறி இராமநாதபுரம் வந்து சேருகிறது கம்பெனிப்படை . சிவகங்கைப் பாளையத்திலிருந்து ஒரு நாயின் ஆதரவைக் கூடப் பெற முடியாது என்பதைப் புரிந்து கொண்ட கர்னல் அக்னியூ ஒரு அறிக்கை விடுகிறான். " சின்ன மருது பரம்பரைப் பாளையக்காரர் அல்ல; சிவகங்கை மன்னனிடம் அடிமையாக வேலைக்குச் சேர்ந்தவன். எனவே, சிவகங்கைப் பட்டத்துக்கு உரிமை உண்டு என்று நினைப்பவர்கள் எவரும் என்னைச் சந்தித்தால் , இந்தக் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின் அவர்களுக்கு அரியணை வழங்கப்படும். மாறாக மருதுவை யாராவது ஆதரித்தால்பாஞ்சாலங்குறிச்சி , விருப்பாட்சி போன்ற இடங்களில் மக்களுக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும்" என்று மிரட்டுகிறான்.

" உண்மையிலேயே அரியணைக்கு பாத்தியதை இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. அரியணைக்கு ஆசைப்படுகிறவன் யாராயிருந்தாலும் வா, பதவி தருகிறேன்" என்கிறான்  அக்னியூ. இப்படி ஆசைகாட்டி ஆள்பிடிக்க வேண்டிய அளவுக்கு மருதிருவருக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததை அக்னீயூவின் அறிவிப்பு நிரூபிக்கிறது.  1801  ஆம் ஆண்டு ஜூன் 12  ஆம் தேதி இராமநாதபுரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புக்கு , தனது வரலாற்று சிறப்புமிக்க திருச்சி பிரகடனத்தின் மூலம் 1801 ஜூன் 16  ஆம் தேதி கீழ்வருமாறு பதிலளிக்கிறார் சின்ன மருது;


சின்ன மருதுவின் திருச்சி பிரகடனம்

இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும். ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத்தீவிவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள், முதலான அனைத்து சாதியினருக்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால்,

மேன்மை தங்கிய நவாபு முகமதுஅலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்துவிட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவை போல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக்கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்துவருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இலாத காரணத்தால்,ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்துகொள்ள இயலாமல், உங்களுள் ஒருவரை ஒருவர் பழி தூற்றிக்கொள்வது மட்டுமின்றி,நாட்டையும் அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழலுகிறார்கள். சோற்றுக்கு பதில் நீராகாரம் தான் உணவு என்றாகிவிட்டது. இப்படி துன்பப்படுவது  தெரிந்தது போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்து கொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.

ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும். ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சி இருக்காமல் செய்ய வேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக்கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும்.

அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப்போல சுக வாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.

ஆதலால்....மீசை வைத்துக்கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும் அதாவது இராணுவம் அல்லது வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த்தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க்கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால், அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்திட வேண்டும்....இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்த பிறகு மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்....இதை ஏற்றுக்கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது.....இதனை ஏற்றுக்கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்கு தன்னுடைய மனைவியைக்கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே உடம்பில் ஐரோப்பியனின் இரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!...

இதைப் படிப்பவர்களோ,கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்...எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவர்களிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செயதவனாகக் கருதப்படுவான்.

இப்படிக்கு,
மருதுபாண்டியன், பேரரசர்களின் ஊழியன் ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி.

(1801 ஆம் ஆண்டு ஜுன் பதினாறாம் நாள் வெள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட இவ்வறிக்கை திருச்சிராப்பள்ளி கோட்டையில் ஒட்டப்பட்டிருந்தது.)

ஒரு பாளையத்தின் அரசுரிமைக்கு ஆசை காட்டுகிறான் அக்னியூ. மருதுவோ தென்னிந்திய மக்கள் ( ஜம்பு தீபகற்பம்) மற்றும் இந்துஸ்தானத்து மக்கள் ( ஜம்புத்தீவு) அனைவரின் விடுதலைக்கு அறைகூவல் விடுக்கிறார். மக்களுக்கு கொலை மிரட்டல் விடுகிறான் அக்னியூ . " ஆயிரம் ஆண்டு வாழ்ந்தாலும் சாவின் நிச்சயம், போராட வா" என்று மக்களைத் தட்டி எழுப்புகிறார் மருது. 

இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக மன்னர்களும் , பாளையக்காரர்களும் நடத்திய காலனியாதிக்க எதிர்ப்பு விடுதலைப் போர்கள் , தங்களது அரசுரிமையைப் பாதுகாத்துக் கொள்வது என்பதை மையப்படுத்தியே இருந்திருக்கிறது. முதன்முறையாக மருதுவின் அறிக்கை " நாட்டு விடுதலை" என்பதை மக்கள் நலனுடன் இணைத்துப் பேசுகிறது. சாதி, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களனைவரையும் காலனியாதிக்க எதிர்ப்புக்காக ஒன்றிணையக் கோரும் முதல் பிரகடனம் இது தான்.

மருது வெளியிட்ட தென்னிந்திய மக்களுக்கான பிரகடனம் அரசியல் மையமான திருச்சிக் கோட்டையிலுள்ள நவாப் அரண்மனையின் வாயிலிலும் , இந்தியா முழுவதற்குமான பிரகடனம் நாடெங்கிலும்பக்தர்கள் வந்து செல்லும் ஸ்ரீரங்கம் கோயிலின் மதிற்சுவரிலும் ஒட்டப்படுகின்றன. உண்மையில் இந்த பிரகடனம் தீபகற்பக் கூட்டிணைவு விடுத்த செயலுக்கான அறைகூவல். “ தீபகற்பக் கூட்டிணைவு ஆங்கிலேயப் பேரரசின் அமைதியையும் பாதுகாப்பையும் அழிக்கும் தன்மையுடையது; பேராபத்தினை விளைவிக்கக் கூடியது." என்று குறிப்பிடுகிறது லண்டன் தலைமையகத்துக்கு இங்கிருந்து அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் இராணுவத்தின் ஆவணம்.

உண்மைதான் .கிளர்ச்சி துவங்கிய பின் கிழக்குக் கடற்கரையின் எந்தத் துறைமுகத்திலும் கம்பெனியின் கப்பல்கள் சரக்குகளை இறக்க முடியாததால் அவை இலங்கைக்குத் திருப்பி விடப்பட்டன. வரிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட வளமான தஞ்சை மண்ணின் உழவர்களே கிளர்ச்சிப் படையுடன் இணைந்து கொண்டார்கள் எனும் போது, பிற பகுதி உழவர்கள் கிளர்ச்சிக்கு அளித்த ஆதரவைப் பற்றி விவரிக்கத் தேவையில்லை. " கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து கொண்ட உழவர்களிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு மரணதண்டனை" என்று அறிவிக்கிறான் கும்பகோணம் கலெக்டர்.  பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தானியம் கொண்டு செல்வதைத்  தடை செய்த கம்பெனி நிர்வாகம் , அதிலும் கொள்ளை இலாபம் அடித்ததால், பஞ்சம் பாதித்த பகுதி மக்களும் திரள் திரளாகக்  கிளர்ச்சியில் இணைந்தார்கள். வெறும் நாலரை லட்சம் மக்கட்தொகை கொண்ட சிவகங்கைப் பாளையத்திலிருந்து மட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மருதுவின் படையில் இணைந்திருந்தார்கள். கம்பெனியின் உள்நாட்டுச் சிப்பாய்களும், நவாப்பின் சிப்பாய்களும் கிளர்ச்சிக்காரர்களை எதிர்த்துப் போரிட மறுத்ததால், மேலும் மேலும் வெள்ளைப் படைகளைக் குவிக்க வேண்டிய கட்டாயம் கம்பெனிக்கு ஏற்பட்டது.

அப்போது கர்னல் அக்னியூ மேலிடத்திற்கு எழுதிய கடிதங்களில் தோல்வி ஏற்படுத்திய சலிப்பும், விரக்தியும் தென்படுகின்றன. போரிட்டு வெல்ல முடியாத வெள்ளையர்கள் சூழ்ச்சியில் இறங்கினார்கள். போர் நடந்து கொண்டிருக்கும் போதே வேலுநாச்சியாரின் உறவினரான கௌரி வல்லப உடையத் தேவன் எனும் துரோகி சிவகங்கையின் புதிய அரசராக வெள்ளையர்களால் அறிவிக்கப்படுகின்றான். உணவையும், சாலை போடுவதற்கான பணியாட்களையும், ஏராளமான வீரர்களையும் அனுப்பி உதவுகிறான் தொண்டைமான். மருதிருவரின் போர்த் திட்டங்களை ஒற்றறிந்து துரோகிகள் வெள்ளையர்களுக்குச் சொல்கின்றனர். தொண்டித் துறைமுகம் வழியாக கிளர்ச்சியாளர்களுக்கு உணவும், வெடிமருந்தும் கிடைத்து வந்ததை அறிந்த வெள்ளையர்கள் அதனைத் தடுத்து நிறுத்துகின்றனர்.

இப்படி துரோகத்தாலும், சதியாலும் பலமடைந்த வெள்ளையர்கள் இறுதியில் தென்னிந்தியா முழுவதுமிருந்த தம் படைகளை ஒன்று குவித்து காளையார் கோவிலை மூன்று திசைகளிலிருந்து முற்றுகையிடுகின்றனர். சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த இந்த முற்றுகைக்குப் பின் மருதிருவர் மற்றும் சிவகங்கை மக்களின் வீரஞ்செறிந்த போர் முடிவுக்கு வருகிறது. சோழபுரம் காட்டில் சின்னமருதுவும், மதகுபட்டிக்காட்டில் பெரிய மருதுவும் , வத்தலக்குண்டில் ஊமைத்துரையும் , சிவத்தையாவும் கைது செய்யப்பட்டனர்.

துரோகி கௌரி வல்லப உடையதேவன் மருதிருவரிடம் சமாதானம் பேசி வெள்ளையர்களிடம் மன்னிப்பு கேட்குமாறு கோருகிறான். சுற்றார் அனைவரையும் இழப்போமென்று தெரிந்த நிலையிலும் அந்த சிவகங்கைச்  சிங்கங்கள் மண்டியிட மறுக்கின்றனர். இறுதியில் மருதிருவர் மற்றும் அவர்களது வாரிசுகள் , உறவினர், ஏனைய கிளர்ச்சிக்காரர்கள் உட்பட சுமார் 500  வீரர்கள் திருப்பத்தூர்க் கோட்டையில் 1801  ஆம்  ஆண்டு  அக்டோபர் 27  ஆம் நாள் தூக்கிலிடப்படுகின்றனர்*. அவர்களில் மருதிருவரின் மகன்கள், பேரன்கள் உள்ளிட்டு ஒருவரையும் வெள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. சின்ன மருதுவின் தலையை வெட்டி எடுத்து காளையார் கோவிலில் நட்டு வைத்தன வெள்ளை மிருகங்கள். ஊமைத்துரையும் , சிவத்தையாவும் பாஞ்சாலங்குறிச்சி  கொண்டு செல்லப்பட்டு அங்கே நவம்பர் மாதம் 16  ஆம் தேதி ( 1801 ஆம்  ஆண்டு  ) தூக்கிலடப்பட்டனர்.

சின்ன மருதுவின் 15  வயது மகன் துரைச்சாமி , சிவகங்கை அரசர் வெங்கம் பெரிய உடையத்தேவர், பாஞ்சாலங்குறிச்சி தளபதி குமாரசாமி நாயக்கர் உள்ளிடட 73  கிளர்ச்சியாளர்கள் மலேசியாவில் இருக்கும் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு  11-02-1802 நாடு கடத்தப்பட்டு அங்கேயே இறந்தும் போயினர். மருதிருவருடைய வீரத்தின் சுவடு கூட மிச்சமிருக்கக்கூடாது என்று கருதிய வெள்ளையர்கள் அவர்களுடைய குடிவழியையே இல்லாதொழித்தனர்.



மக்களோ மருதிருவரை குடி வழியெதுவும் தேவைப்படாத வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக்கிவிட்டனர். மக்களுடைய அன்பின் வெளிப்பாடான இந்த நடுகல் மரபு கல்லாய் இறுகிப் போன கையறு நிலையின் சாட்சியாய் நம்முன்னே நிற்கிறது. எரிமலையாய்க் குமுறி வெடிக்கும் திருச்சி பிரகடத்தின் சொற்கள் நம் செவிப்பறைகளில் வந்து மோதுகின்றன. சின்ன மருதுவின் ஆணை, வணங்கச் சொல்லவில்லை , வாளேந்தச் சொல்கிறது; பக்தியைக் கோரவில்லை, வீரத்தைக் கோருகிறது.

" ஆதலால் மீசை வைத்து கொண்டிருக்கின்ற நீங்கள் அனைவரும்....." உங்களைத் தான் அழைக்கிறார் சின்னமருது.

நன்றி: கட்டுரை ஆசிரியர் : வேல்ராசன் .
புதிய கலாச்சாரம் இதழ் -நவம்பர் 2006

( இக்கட்டுரை கீழைக்காற்று பதிப்பகம் வெளியிட்ட " விடுதலைப்போரின் வீரமரபு " என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளது. )

பின்குறிப்பு : இது மருது சகோதரர்கள் பற்றிய வரலாறு அல்ல; மிகச் சிறிய கட்டுரை தான். இக்கட்டுரையில் பல  முக்கியமான குறிப்புகள்  விடுபட்டுள்ளன. அவற்றில் சில;

1.       1793 ஆம் ஆண்டு சிவகங்கை அரசி வெள்ளச்சி நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறார்,

2.       1796 ஆம் ஆண்டு அரசி வேலு நாச்சியாரின் மரணத்திற்குப் பிறகு, பெரிய மருது சிவகங்கையின் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். சின்ன மருது அமைச்சராகிறார்.

3.       *மருது சகோதரர்கள்  தூக்கிலப்பட்ட நாள் 24-10-1801. அவர்களின்  உடல் காளையார் கோவிலில் அடக்கம் செய்யப்பட்ட நாள் தான்  27-10-1801.

ஆங்கிலேயருக்கு எதிரான காலனிய ஆதிக்க எதிர்ப்புப்போரில்  மருதிருவரின் பங்களிப்பு மகத்தானது. இக்கட்டுரையின் ஆசிரியர் வேலராசன் குறிப்பிட்டது போல் மக்கள் மருது சகோதரர்களை தெய்வங்களாக்கி விட்டார்கள். இருந்தாலும் அம்மாவீரர்களின் மேல் சாதீயக்குறியீடுகள் பூசி , குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே  சொந்தமானவர் என்ற  பிரமையை ஏற்படுத்தி  விட்டார்கள். இது  மிகவும் வேதனை தரும் விளைவாகும் . ஆனாலும் இந்திய சுதந்திரத்தைப் பற்றி பேசும் போதெல்லாம் இந்த மாவீரர்களின்  வீரமும், தியாகமும்  நம் அனைவரின் நினைவுகளிலும் தவறாமல் வலம் வரும்.


Wednesday 23 October 2019

அசுரன் திரைப்படம்-ஒரு பார்வை.


அசுரன்  திரைப்படம்-ஒரு பார்வை.










சில வருடங்களுக்கு முன்பு பூமணியின் "வெக்கை" நாவலை படித்த போது, அவர்  எடுத்துக்  கொண்டிருந்த கதைக்களம் மிகவும் ஈர்ப்பாக இருந்தது. ஒரு பதினைந்து வயது பையனான சிதம்பரம்  தனது அண்ணனைக் கொன்ற வடக்கூரானை பழி தீர்த்துவிட்டு தந்தையுடன் காட்டிற்குள் தலை மறைவாகி பிறகு  நீதிமனறத்தில் சரணடைய போகும் வரையிலான நிகழ்வினை  அந்த நாவல் பேசுகிறது. நாவலை வாசித்தபோது பூமணியின் கரிசல் காட்டு நடை மிகவும் சுவாரசியமாகத் தான் இருந்தது. நான் ஒரே மூச்சில் படித்து முடித்த சில நாவல்களில் இதுவும் ஒன்று.

அந்த நாவல் இப்போது வெற்றி மாறனின்  படைப்பில் " அசுரன் " என்ற தலைப்பில் திரைப்படமாக வெளிவந்து மிகவும் நல்ல படம் என்று பேசப்படுகிறது; மிகப் பெரிய பாராட்டையும் பெற்றுள்ளது. ஆனாலும், வெற்றிமாறன் ஒரு பேட்டியில் " வெக்கை " நாவலை படித்தவர்களுக்கு இந்தப் படம் பிடிக்காது என்று அடக்கமாக கூறியிருக்கிறார். இதுவே , இப்படத்தைப் பார்க்க என்னைத் தூண்டியது. ஆனால், நாவலின் பிம்பத்தை என் மனத்திலிருந்து ஒதுக்கி விட்டே  படத்தை  பார்த்தேன்.

முதல் பாதியில் அப்பா சிவசாமியும், மகன் சிதம்பரமும் காட்டிற்குள் ஒளிந்து திரிவதை மிக விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார் வெற்றி மாறன். அவர்களுடன் நாமும் சேர்ந்து பயணிப்பதாகவே  தோன்றுகிறது. அற்புதமான  படப்பிடிப்பு. அதுவும் இடைவேளைக்கு முன்பு வரும் அந்த சண்டைக்காட்சி  மிகவும் உயிரோட்டமாக இருந்தது. ( பாராட்டுக்கள் பீட்டர் கெய்ன்) பிரமாதம்!. படம் இடைவேளை வரை மிக வேகமாக நகருகிறது.



இரண்டாம் பகுதி சிவசாமியின் கடந்த கால நிகழ்வினை வெளிக்கொணருகிறது. இப்பகுதி நாவலில் இடம்பெறவில்லை . வெற்றிமாறனால் படத்தின் வெற்றிக்காக இணைக்கப்பட்ட பகுதி இது. உண்மையைக் கூற வேண்டுமானால் வெற்றிமாறன் இங்கே தான் வெற்றி பெறுகிறார். அதுவும் சிவசாமி , தான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் மாரியம்மாளுக்கு "செருப்பு" வாங்கி கொடுப்பதும் . அதை அணிந்து  பள்ளிக்குச் கொண்டுசென்ற அவளை ஆதிக்கசாதியினர்  அடித்து அதே செருப்பை தலையில் சுமக்க வைத்து அவமானப்படுத்துவதும் அன்றைய காலத்தில் நிலவிய சாதிக் கொடுமையின் வெக்கையை வெளிக்காட்டியது. அதனால் அவமானத்தால் கூனிக்குருகிப் போன மாரியம்மாள் , இக்கொடுமையை யாரும் தட்டிக்கேட்கவில்லை என்று உடைந்து அழும்போது நெஞ்சம் கனத்துப்போகிறது.

அதேபோல்  பஞ்சமி நிலம்மீட்பு பற்றிய போராட்டத்தையும் , அதையொட்டி ஏற்படும் கலவரத்தின் அடையாளமாக  கீழவெண்மணியில் "ராமையாவின் குடிசையில் " 44  பேர்கள் எரிக்கப்பட்டு இறந்த சம்பவத்தையும் மிகப் பொருத்தமாக இணைத்திருக்கிறார் வெற்றிமாறன். இருந்தாலும் இப்பகுதியின் நீளம் எனக்கு   சற்று சலிப்பை கொடுத்தது உண்மை தான்  . ஆனால் இறுதிப்பகுதி மீண்டும் வேகத்தை கூட்டுகிறது.

உண்மையைக் கூறவேண்டுமென்றால் அடங்கி ஒடுங்கிக் கிடந்த தாழ்ந்த சாதியினர் , ஆதிக்க சாதியினருக்கு எதிராக வெகுண்டெழுந்து அடிக்கு அடி என்று இறங்குவது தான் சரி என்பதை இப்படம் எடுத்துக் காட்டுகிறது. மேலும் காட்சிகளை துவேசம் இல்லாமல் இயல்பாக எடுத்திருப்பது இயக்குனரின் திறமையைக் காட்டுகிறது.

தனுஜின் நடிப்பை பாராட்டாமல் இருக்கவே முடியாது . அதுவும் மூத்த மகனைக் காப்பாற்ற  ஊர் பஞ்சாயத்திற்கு கட்டுப்பட்டு ஒவ்வொருவரின் காலில் விழும் போதும். சின்ன மகனைக் காப்பாற்ற கண்களில் கனல்தெறிக்க போராடும் போதும் நடிப்பின் உச்சம் தொடுகிறார். தனுஷ்  , சிவசாமியாகவே வாழ்ந்திருக்கிறார். இப்படத்தை பார்த்தபிறகு அவர் மீது எனக்கிருந்த எதிர்மறையான   பிம்பங்கள் மறைந்து அவரை மிக உயர்வான இடத்திற்கு கொண்டு சென்றது.



அவரது மூத்த மகனாக நடித்திருக்கும் டிஜேய் அருணாசலம் போலீசாரின் அடியால் உருக்குலைந்து வந்த நிலையிலும் , தந்தை தனுஷ்  வாந்தியெடுப்பதை கையில் ஏந்திச் செல்லும் காட்சியில்  நமக்கும் இப்படியொரு மகன் கிடைக்க வேண்டும் என்று ஏங்கச் செய்யும் விதமாக நடித்திருப்பது உண்மை. அதே போல் சின்ன மகனாக வரும் கென்  கருணாஸின் நடிப்பும் மிகவும் எதார்த்தமாக இருக்கிறது. அவருக்கு நல்ல எதிர் காலம் காத்திருக்கிறது.


இறுதி காட்சியில்  சிதம்பரத்திடம் , " நிலம் இருந்தால் புடுங்கி கிடுவாங்க ; பணம் இருந்தால் புடுங்கி கிடுவாங்க; ஆனால் படிப்பு இருந்தால் அவர்களால் புடுங்க முடியாது" என்று சிவசாமி கூறும் இடம் படத்தின் சிகரமாக இருக்கிறது. தனுஷ் கொலைப்பழியை தான் ஏற்று கொண்டு நீதிமன்றத்தில் சரணடையும் அந்தக்காட்சி.........

மொத்தத்தில் " அசுரன்" ஒரு அற்புதமான படைப்பு. இயக்குனர் வெற்றிமாறனுக்கும் அவரது குழுவிற்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.



இப்படத்தின் மூலம் "பூமணி"  என்ற படைப்பாளனுக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.  அவர் தன்னுடைய " வெக்கை" நாவலின் முன்னுரையில் "கொலை செய்தது என்னவோ சிதம்பரம் தான்; ஆனால் காட்டில் அலைந்து திரிந்தது நான் தான்" என்று எழுதியிருப்பார். அது எவ்வளவு உயர்ந்த வரிகள் என்பதை  இப்படத்தைப் பார்த்தபிறகு தான்  புரிந்து கொள்ள முடிந்தது.



 “அசுரன் எல்லோரையும் கொள்ளை கொள்கிறான்”.