Tuesday 25 December 2018

கீழவெண்மணி துயரத்தை வெளிக்கொணரும் நூல்கள்.

வரலாற்றில் மிகப் பெரிய துயரத்தை சுமந்து கொண்டிருக்கும் கிராமம் இது. கீழவெண்மணி என்ற பெயரைக் கேட்டவுடன் நம் எல்லோருக்கும் நினைவிற்கு வருவது , துடிக்கத் துடிக்க 20 பெண்கள் ,  19 குழந்தைகள், 5 முதியவர்கள் என 44 தாழ்த்தப்படட மக்களை அதுவும் விவசாயக் கூலிகளை,  ஒரு குடிசையில் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவம் தான் நம்  நினைவிற்கு வரும்.


அந்த நாள் 25-12-1968. இரவு 08.30 மணி,

ஆம் , உலக மக்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளைக் கொண்டாடும் அதே நாள்.


கீழவெண்மணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக்கூலிகள்,  கூலியாக, அரைப்படி*** நெல் அதிகம் கேட்டதற்காக,  44 உயிர்கள் கொளுத்தப்பட்ட அந்தச் சம்பவம்  நாட்டையே உலுக்கியது. இந்தக் கொடிய செயலைச் செய்தவன் நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவராக இருந்த இரிஞ்சூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பண்ணையார்  கோபால கிருஷ்ண நாயுடு. ஆனாலும் நீதிமன்றத்தால் பண்ணை அல்லது ஆண்டை என்று அழைக்கப்படட அந்த கோபால கிருஷ்ண நாயுடு குற்றவாளி இல்லை எனக்கூறி விடுதலை செய்யப்பட்டான்.


அந்தக் கூலிப் போராட்டத்திற்கு உறுதுணையாகவும்  , வழிநடத்தியும் சென்றவர்கள் இந்திய கம்யூனிஸ்ட்கள் தான். குறிப்பாக  அப்போதைய தலைவர் தோழர். சீனிவாச ராவ்  தலைமையில் பல தோழர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து இந்தப் போராட்டத்தை நடத்தினார்கள். இந்நிகழ்வைப் பற்றி தமிழில் மூன்று நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. அவையாவன;


1.       குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி ( 1969 ஆம் ஆண்டு ).
2.       செந்நெல்        - சோலை சுந்தரப்பெருமாள் (1999 ஆம் ஆண்டு ).
3.       கீழைத்தீ           - பாட்டாளி.( 2007 ஆம் ஆண்டு ).





இதில் இந்திரா பார்த்தசாரதி தமது குருதிப்புனல் நாவலில் கோபாலகிருஷ்ண நாயுடுவை, கன்னய்யாநாயுடு என்ற பாத்திரத்தில் ஒரு ஆண்மையற்றவனாக சித்தரித்திருப்பார். அதை மறைப்பதற்காக பலபெண்களைக் கெடுத்தது போலவும் , பங்கஜம் என்ற பெண்ணை வைப்பாட்டியாக வைத்திருப்பது போலவும் சித்தரித்திருப்பார். இதனால் இந்நாவல்  விவசாயிகளின் கூலிப் போராடடத்தை  திசைதிருப்பி கொச்சைப்படுத்தி விட்டதாக கடும் விமர்சனம் எழுந்தது குறிப்பாக  இடது சாரிகள் இந்நாவலை ஏற்றுக்கொள்ளவில்லை. 


காரணம், கோபாலகிருஷ்ணநாயுடு உண்மையாகவே  பெண்பித்தன்; பல கூலிபெண்களை சீரழித்தவன், அவனது பாலியியல் கொடுமை என்பது    இரிஞ்சூர்  , கீவளூர் , தேவூர்  மற்றும் கீழவெண்மணி  கிராமங்களில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களான பள்ளர் மற்றும் பறையர் இன மக்களால் சகித்துக்கொள்ளமுடியாதாக இருந்தது. அதனால் குருதிபுனலுக்கு விமர்சனம் எழுந்தது ஆச்சரியமில்லை தான். ஆனால் , இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் கோபாலகிருஷ்ணநாயுடு உயிரோடு இருந்தார்; அதனால்,  அவரை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் " ஆண்மையற்றவனாக" சித்தரித்தேன் என்று இந்திராபார்த்தசாரதி குறிப்பிடுகிறார். மேலும் , தனது நாவலில் வரும் பாத்திரங்களைச் செதுக்குவதில் அந்த எழுத்தாளனுக்கு முழு  சுதந்திரம் உள்ளது. இருந்தாலும் , கீழவெண்மணி கூலிப் போராட்டத்தையும் , அதன் தளத்தையும் இந்நாவல் கொச்சைப்படுத்தவில்லை என்றே  கருதுகிறேன். இந்நாவலுக்கு சாகித்திய அகாடமி பரிசும் கொடுக்கப்பட்டுள்ளது.


ஆனால் ,  சோலைசுந்தரபெருமாளின் செந்நெல் நாவல் கீழ்வெண்மணியைப்பற்றி மிக ஆழமாக பேசுகிறது. படைப்பாளி அந்த மண்ணைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் பலம். இதில் , கோபாலகிருஷ்ணநாயுடுவை நேரடி பாத்திரமாகவே கொடுத்திருக்கிறார். அவரது , பாலியியல் மீறல்களையும் பதிவு செய்திருக்கிறார். இந்த நாவலை வாசிக்கும் போது அந்த வயல்வெளிகளில் நாமும் வாழ்வது போன்ற உணர்வு எழும் என்பது உண்மை. கீழவெண்மணி பண்ணையார் வேலுநாடார் , அவரது பண்ணையாள் பெரியான், அவனது மகன்கள் ரெங்கசாமி , கண்ணுச்சாமி மற்றும் அவனது குடும்பத்தினரின் பாத்திரப்படைப்பு மிகவும் எதார்த்தமாக இருக்கும். எப்போதும்  கூலி தொழிலாளிகளுக்கு ஆதரவாக இருக்கும்  வேலுநாடாரை கோபாலகிருஷ்ணநாயுடு மிரட்டி தனது வழிக்கு வரவழைப்பதும் , அதன் விளைவாக கீழ்வெண்மணியில்  அமைதி குலைவதும் இயல்பாக பதிவு செய்திருக்கிறார் சோலைசுந்தரபெருமாள்.


அத்தோடு , கீழ்வெண்மணியில் வாழ்ந்த பள்ளர் , பறையர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களிடையே (கூலித் தொழிலாளிகளுக்கிடையில் ) இருந்த ஒற்றுமையையும் இந்த நாவல் பேசுகிறது. இறுதியில் கோபாலகிருஷ்ண நாயுடுவின் ஆட்கள் , ராமையாவின் குடிசைக்கு தீ வைத்து கொளுத்தி அங்கே ஒளிந்திருந்த  44 பேர்கள் மரணிக்கும் அவலக்குரலோடு நாவல்  முடிகிறது. சோலை சுந்தரபெருமாள் , கீழ்வெண்மணிப் போராட்டத்தை அதன் துவக்கத்திலிருந்து இராமையாவின் குடிசை எரிப்புவரை திசை மாறாமல் எழுதியிருப்பது  இந்தநாவலின் சிறப்பு. மேலும்   கீழ வெண்மணிப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பினை வடிவேலு பாத்திரத்தின் மூலம்  மிக ஆழமாக வெளிக்கொணர்ந்திருப்பார்.


அடுத்து பாட்டாளியின் கீழைத்தீ!!!


இந்நாவல் , வெண்மணி எரிப்பு படுகொலைக்குப் பிந்தைய நிலையில் ஏற்பட்டப் போராட்டங்களையும் , கோபாலகிருஷ்ண நாயுடுவின் அழித்தொழிப்பு வரையிலான நிகழ்வுகளை பற்றி பேசுகிறது.

நாவலில்  சன்னாசித் தாத்தாவின் கதைகளும் , வெங்கிட்டன் -ஜோதி இவர்களின் சாதி கடந்த காதலும் , வயல்வெளிகளும் , புரட்சிகர அரசியலும் நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது. அத்தோடு , கோபாலகிருஷ்ணநாயுடுவின் பாலியியல் வன்முறைகள் மற்றும் வக்கிரகங்களை அப்பட்ட்டமாக  எடுத்து கூறியிருப்பார் பாட்டாளி. அவரது கல்லு வீடும் , வில்லு வண்டியும் ஏராளமான பாவங்களுக்கு அடையாளமாக இருக்கிறது. கோபாலகிருஷ்ணநாயுடு,  44 பேர்கள் எரிப்பிற்குப்பிறகும் திருந்தவில்லை என்பதே அவரது கொலைக்கு வித்திடுகிறது.   நாவலில் வரும்  இடதுசாரி தோழர்கள் ஜோசப் ராஜா, ஆரோக்கியராஜ், ரவிக்குமார் , திருநாவுக்கரசு மற்றும் ஏகேடி போன்றவர்களின் பாத்திரங்களை திறம்பட கையாண்டிருப்பார் பாட்டாளி. இறுதியில்   வரும் கோபாலகிருஷ்ண நாயுடுவின் அழித்தொழிப்புத் திட்டமும் , கொலையும் நம் மனதில் அழுத்தமாக பதிகிறது.


ஆம்!

வெண்மணி துயரத்திற்கு மூலகாரணமாக இருந்த கோபாலகிருஷ்ணநாயுடு  24 இடங்களில் வெட்டப்பட்டு, 14-12-1980 ந் தேதி கொல்லப்பட்டு பழிதீர்க்கப்படுகிறார்.  இந்தக் கொலையில் முதல் குற்றவாளியாக நந்தன் இருக்கிறான். இவனே , கீழ்வெண்மணியில் ராமையாவின் குடிசையில் எரிந்து போன அந்த 44 பேர்களின் அவலக் குரலை நேரில் கேட்ட சாட்சி . அப்போது அவனுக்கு வயது 11.    நந்தனின் மனம் அன்று அமைதியடைகிறது.

கோபாலகிருஷ்ணநாயுடு  கொலையுண்டதால் , கீழவெண்மணி முழுக்க மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடியது, மக்கள் நரகாசுரன் ஒழிந்தான் என்று பாயாசம் செய்து மகிழ்ந்தார்கள் என்றும்,  கோபாலகிருஷ்ணநாயுடுவின் அழித்தொழித்தல் நிகழ்வே தமிழகத்தில் இடதுசாரிகள் (எம் எல்) நடத்திய கடைசி நிகழ்வு என்று பதிவு செய்து நாவலை முடிக்கிறார் பாட்டாளி.


  
இந்த மூன்று நாவல்களும் குறிப்பிடும் தளமானது  உழைப்பு ; கூலி , போராட்டம் மற்றும் கம்யூனிசம் தான்.  


என்னைப் பொறுத்தவரை வெண்மணி படுகொலையை  கூலியை உயர்த்திக்  கேட்டதால் நடந்த நிகழ்வாக மட்டும் பார்க்க முடியவில்லை . அதற்கான மூலகாரணங்களாக,  அங்கே வாழ்ந்த உழைக்கும் மக்களின் ஒற்றுமை, அவர்கள் பண்ணைகளை எதிர்த்து கேள்வி கேட்டது., அவர்களுக்கு எதிராக அணி திரண்டது மற்றும்  அரசியல் விழிப்புணர்வு போன்றவைகள் தான்  பண்ணைகளுக்கு கோபத்தையும் கூடவே பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதன் எதிர்விளைவே "வெண்மணி படுகொலைகள்".


ஆனாலும் , அன்று விவசாயம் இருந்தது; பண்ணைகள் இருந்தது ; ஆடு மாடுகள் இருந்தது!  அன்று விவசாயக்கூலிகள் மட்டும் அடிமைப்படுத்தப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள் ; கம்யூனிஸ்ட்கள் போராடினார்கள். உண்மையில், வெண்மணிப்போராட்டம் தான் கம்யூனிஸ்டுகளுக்கு தமிழகத்தில் அதன் தேவையை நியாயப்படுத்தியது.  அதனால் டிசம்பர் 25 ஆம் நாள் கிறித்தவர்களுக்கு மட்டுமல்லாமல் கம்யூனிஸ்ட்களுக்கும்  புனிதமான நாள் தான் என்று பத்திரிக்கையாளர் மைதிலி சிவராமன் கூறியது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.



ஆனால் இன்று ?

நம் நாட்டில் ( தமிழ் நாடு உட்பட ) விவசாயம் அழிகிறது; விவசாயிகள் தற்கொலைகள் செய்கிறார்கள். சாதித்தீ பரவுகிறது. காதலர்கள் கொல்லப்படுகிறார்கள்; ஆணவக்கொலைகள் அதிகரிக்கின்றன. கிராமங்கள் அழிகிறது. ஆனாலும் .... மக்களும் , அரசியல் வாதிகளும் அதை கடந்து செல்கிறார்கள். அதனால், இந்த நாவல்கள்  கொடுக்கும் படிப்பினையை நாம் தவறவிடுகிறோம் என்றே தோன்றுகிறது.


சு. கருப்பையா



Friday 5 October 2018

அபசுரமே எட்டி நில்..


" செம்புலப் பெயல்நீர் " போல
எல்லாம் கலந்து விட்ட
இந்தக் காலத்திலுமா
சாதியையும்
வருணத்தையும்
உன் விலாசம் என்கிறாய்?
             
                அந்த விலாசத்தில் தான்
                நீ இருக்கிறாய்?


காலப் புயலில்
உன் வீடு இடிந்து போகவில்லையா?
நீ குடி பெயர்ந்து போகவில்லையா?
நடந்து கலைத்துச்
சத்திரங்களில் தங்கியதில்லையா?

                உன் இரத்தத்தைக் கிளறிப் பார்
               நீயும் ஒரு
               சமுத்திரம் என்பதை அறிவாய்.

சமுத்திரத்தில் ஏது
நதிகளின் விலாசம்?

                "நான், என்பதே
                 இப்போது பன்மைதான்

கைரேகைகளில்
சிக்கல் விழுந்துவிட்ட
இந்தக் காலத்தில்
குலம் என்கிறாய்
கோத்திரம் என்கிறாய்

               குலத்தொழிலைத்தான்
              செய்து கொண்டிருக்கிறாயா
               நீ?

உஞ்ச விருத்தி செய்து தான்
உயிர் வாழ்கிறானா
பிராமணன்?

               ஆட்சி பீடம் தவிர
               வேறெங்கும் அமர்வதில்லையா
               சத்திரியன்?

வைசியன் மட்டும் தான்
தராசு பிடிக்கிறானா ?

                    ஏர் ஓட்டுகிறவனெல்லாம்
                   சூத்திரனா?

வயிற்றுக்காக
முந்தானை விரிக்கத்
தொடங்கிவிட்டபிறகு
இன்னும் எதற்குப்
பத்தினிப் பட்டம்?


                 ஞானிகள் செய்ய முடியாததை
                 விஞ்ஞானிகள் செய்துவிட்டான்

இதோ
நீயே மழித்துக் கொள்கிறாய்
நீயே துவைத்துக் கொள்கிறாய்
           
                  ஏன்
                  கழிப்பறையைக் கூட
                  நீயே கழுவிக் கொள்கிறாய்

இனி
யாரைப் பார்த்து
"எட்டி நில் , என்பாய்?

                  “இல்லை
                  இன்னும் நான்
                  இந்தத் சாதிதான் " என்கிறாயா?

அப்படியென்றால்; பிரேதமே!
உயிருடையவர்கள்  மத்தியில்
உனக்கென்ன வேலை?

                ஒரு புதிய பூபாளத்திற்காகச்
               சுரங்கள் சங்கமிக்கும் நேரமிது
               அபசுரமே!
               எட்டி நில்.


கவிஞர் அப்துல்ரகுமான் "சுட்டுவிரல்" கவிதை நூலிலிருந்து.



பரியேறும் பெருமாள்-திரை விமர்சனம்

பொதுவாக நல்ல திரைப்படங்கள் என்று அறியும் போது அப்படத்தை   பார்த்து ரசிப்பதோடு நின்று விடுவேன். அப்படங்களை பற்றி பொதுவெளியில் விவாதிப்பதோ அல்லது விமர்சனம் செய்வதோ எனது பழக்கம் அல்ல. ஆனால்,  இந்தப்படம் என் மனதை மிகவும் கனக்கச்செய்து விட்டது. படம் முடிந்த பிறகு  " பரியேறும் பெருமாளை" (பரியன்) சுமந்து கொண்டு தான் வீட்டிற்கு வந்தேன்.

இந்தியா முழுவதும் சாதியமும், ஆணவக்கொலைகளுக்கும் தலைவிரித்தாடும்  இந்தச் சூழலில் வெளிவந்திருக்கும் இந்தப்படம் தமிழகத்தில்  திருப்புமுனையை தரும் என்றும் எதிர்பார்க்கிறேன். அப்படி இல்லாவிட்டாலும் ஒரு தாக்கத்தையாவது ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. 

கருப்பி என்ற பரியேறும் பெருமாளின் பெண் நாய்  இரயில் தண்டவாளத்தில்  கொல்லப்படுவதிலிருந்து  ஆரம்பிக்கும் கதை, பரியனையும் அதே சூழலுக்குள் தள்ளி,  அவன் விழித்தெழுந்து  , போராடி வெல்லும் வரை உயிர் துடிப்போடு நகருகிறது. 

சட்டக்கல்லூரியில் பரியனுடன் படிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஜோதிலட்சுமி, பரியனிடம் இயல்பாக பழகுவதும், அது கனிந்து அவளுக்குள் காதலாக மலருவதும் எளிய கவிதை போல் இயல்பாக சொல்லப்பட்டிருக்கும் விதம் கவித்துவமாக இருக்கிறது.   அவளது காதலையும் , அவளையும் புரிந்து கொள்ளும் முன்பே  அவளின் உறவினர்கள்  பரியனை அடித்து நொறுக்கும் காட்சி  மனதை  நெகிழச் செய்வதோடு ,  கனக்கவும் செய்கிறது.


அவளது தந்தை , பரியனிடம் தமது மகளை மறந்து விடுமாறு சொல்வதும் , அப்படி இல்லாவிட்டால் அவனோடு சேர்ந்து தனது மகளையும் கொன்று விடுவார்கள் என்று மனம் கலங்கிச் சொல்லும் போது சாதிவெறி புரையோடிக் போயிருக்கும் தென் தமிழகத்தின் நிலைத் தெளிவாகத் தெரிய வரும். 

கூத்துக் கலைஞரான  பரியனின் தந்தையை சட்டக் கல்லூரியின் முன்  அவமானப்படுத்தி நிர்வாணப்படுத்தும் காட்சி , திரையரங்கில் அமர்ந்திருக்கும் அனைவரையும் உறையச் செய்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. 

இத்தனைக்கும் காரணம்...

பெண்.

அவளை உடமையாகாக் கருதும் இந்த சாதீயக் கட்டமைப்பு. அதற்கு துணைபோகும் அகமணைமுறை திருமணம். பெண்ணை  தன் சாதியத்தை காக்கும் அடையாளமாக கருதும் வரை இந்தச் சமுதாயம் மாறப்  போவதில்லை. ஆணவப்படுகொலைகளும் நிற்கபோவதில்லை.  

இதற்குத் தீர்வு தான் என்ன?
பெண் விடுதலை தான்!.

மிருகங்கள் கூட தமது இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பெற்று உள்ளது. ஆனால் , ஆறறிவு பெற்ற மனிதகுலம் அதை மறுப்பது வெட்கக்கேடு!.  அதனால்  தான் தந்தை பெரியாரும் , அண்ணல் அம்பேத்காரும் பெண்ணுரிமையை வலியுறுத்தியுள்ளார்கள்.

உயிர்போராட்டத்தின் இறுதியில்  பரியன் கோபக்கனல் தெறிக்க , " முதலில் மனிதர்களாக இருங்கள்" என்று ஜோதிலட்சுமியின் தந்தையிடம் கூறுவது மிகவும் "யதார்த்தம்"! .

இறுதிக்காட்சியின்   உரையாடலில் ,  ஜோதிலட்சுமியின் தந்தை பரியனைப் புரிந்து கொள்வதும் , அவர்கள் நட்பை ஏற்றுக்கொள்வதும் நேர்மறை எண்ணத்தின் வெளிப்பாடாகவும் , சமூக மாற்றத்திற்கான அடையாளமாகவும் இருக்கிறது.  இங்கே தான் "மாரி செல்வராஜ்"  என்ற படைப்பாளி - சமூக சீர்திருத்தவாதி வெற்றி பெறுகிறான்.!!

உண்மையாகக் கூற வேண்டுமென்றால் இப்படத்தில் யாரும் நடித்திருப்பதாகத் தெரியவில்லை . வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் இது திரைப்படமாக இல்லாமல்  தமிழகத்தை மாற்றத்திற்கு அழைத்துச் செல்லும் ஆவணமாகவே தெரிகிறது!!.

வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ். 

சு.கருப்பையா
மதுரை.


Monday 22 January 2018

பெத்தவன்-நெடுங்கதை





இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் இமையத்தின் " எங் கதெ" நாவல் பற்றிய விமர்சனத்தை  ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.  அதில் வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணின் சிரமங்களையும், அவள் சந்திக்கும் பாலியியல் அத்துமீறல்களையும் மிகவும் யதார்த்தமாக எழுதிருப்பதாக  அறிந்து கொண்டேன்.  1994 இல் தமது " கோவேறு கழுதைகள்" நாவல் மூலம் தமிழ் இலக்கித்திற்குள் நுழைந்த அவரின் எழுத்துக்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்படவில்லை.

அதன் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில்   இமையத்தின் கோவேறு கழுதைகள் , செடல், என் கதெ  மற்றும் பெத்தவன் ஆகிய நூல்களை வாங்கி வைத்திருந்தேன். எனது பணி மாற்றம் காரணமாக இந்நூலகளை வாசிக்கும் வாய்ப்பு மீண்டும் தள்ளிப் போனது. இப்போது  " பெத்தவன்" என்ற நீண்டகதையை எடுத்து முதலில் வாசித்தேன். அவர் எடுத்துக் கொண்டிருந்த கதைக்களம் என்னை திகைக்க வைத்து விட்டது. சாதீயத்தையும், ஆணவக்கொலைகளையும் தூக்கிப் பிடிக்கும் கடலூர் மாவட்டப் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்  இமையம் , அத்தகைய ஒரு நிகழ்வையே நீண்ட கதையாக இந்த " பெத்தவனில் " எழுதியிருக்கிறார்.

வண்டிக்காரன் மூட்டு என்ற கிராமத்தில் வாழும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பழனி என்ற விவசாயின் மகள் பாக்கியம் , கீழ்சாதியைச் சேர்ந்த  பெரியசாமியை காதலிப்பதையும் அவளை சாகடிப்பதற்கு அக்கிராம மக்கள் முயலுவதையும் , அதற்கு பழனியை கட்டாயப்படுத்துவதும் தான் கதையின் கரு. இறுதியாக பாலிடாயில் விஷம் கொடுத்து தமது மகளை அடுத்த நாள் கொன்று விடுவதாக கிராம பஞ்சாயத்தில் ஒத்துக் கொள்கிறார். எப்படியாவது சாதீயத்தை காக்க வேண்டுமல்லவா?.

அன்று இரவு அவரது வீட்டில் நடைபெறும் உரையாடல்கள் மனதை உருக்குவதாக இருக்கிறது. பாக்கியத்தின் தாய் சாமியம்மா அவளை சாகடித்து விடலாம் என்று கூறுவதும் , பாட்டி துளசி அதற்கு மறுப்பதும் , முடமாகிப்போன தங்கை செல்வராணி பழனியின் கால்களைப் பிடித்துக் வேண்டாமென்று கெஞ்சுவதும் மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. அதுவரை  பெரியசாமியைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருந்த பாக்கியம் கரைந்து போன சந்தர்ப்பம் அது. தன்னால் தமது குடும்பத்திற்கு நேர்ந்து விட்ட அவல நிலையை நினைத்து பழனியின் கால்களைப் பிடித்து கண்ணீர் விடுகிறாள். தானே விஷம் குடித்து சாவதற்கும் தயாராகி விடுகிறாள்.


பழனி தெளிவான ஒரு முடிவை எடுக்கிறார். பாக்கியத்திற்கு தட்டில் சோற்றைப்போட்டு சாப்பிடச் சொல்கிறார். அதில் விஷம் கலந்திருக்கும் என்று தெரிந்து கொண்டே பாக்கியம் கண்ணீர் மல்க சாப்பிடுகிறாள். இதுவே இந்த வீட்டில் நீ சாப்பிடும் கடைசி உணவு என்று சொல்வதும் , அவளுக்கு உணவு விக்கிய பொழுது  தண்ணீர் தருவதும் மனதை நெகிழச் செய்கிறது. அங்கே "இமையம்" என்ற படைப்பாளன் உயர்ந்து நிற்கிறான்.

அவள் சாப்பிட்டு முடித்ததும்  பழனி தன்னிடம் உள்ள பணம் , நகைகளை மூட்டையாகக் கட்டுகிறான். தனது அம்மா , மனைவி  மற்றும் மகள் செல்வராணியில் கழுத்தில் இருக்கும் நகைகளையும் கழற்றச் சொல்கிறான். அக்குடும்பம் குழம்புகிறது. அனைத்தையும் மூட்டையாக கட்டி பாக்கியத்தின் கையில் கொடுத்து " போ" ! , கண்காணாத தூரத்திற்கு போய் அவனோடு வாழு! என்கிறான். கடந்த மூன்று ஆண்டுகளாக   ஊருக்காக தமது பாசத்தையெல்லாம் மறைத்துக் கொண்டு புழுங்கிப் போய் வாழ்ந்து வந்த பழனி என்ற தகப்பனின் மனம் வெளிப்பட்ட தருணம் இது.

அவளை பெரியசாமியிடம் ஒப்படைக்க அவனிடம் கைபேசியில் உறுதி செய்து கொண்டு அவனின் உறவுக்கார பையன் கனகராஜிடம்  பாக்கியத்தை அதிகாலை நான்கு மணிக்கு ஒப்படைக்கிறான் பழனி. அப்போது தனது இடுப்பில் இருந்த வெள்ளிக்கொடியையும் கழற்றி அவளிடம் கொடுத்து கிளம்பு என்கிறான் பழனி. அந்த பெத்தவனின் மார்பை கட்டிக் கொண்டு அழுகிறாள் பாக்கியம்.

அன்று காலையே  தனது தோட்டத்தில் பாலிடாயில் குடித்து செத்துப்  போகிறான்  பழனி.


இந்த கதை எழுதி வெளி வந்த சில மாதங்களுக்குப் பிறகு தான் தருமபுரி , நத்தம் காலனி அழித்தொழிப்புச் சம்பவம் நடந்ததை நினவுப் படுத்துகிறார் இக்கதைக்கு முன்னுரை எழுதியுள்ள எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். உண்மையில் இக்கதையை   சாதீய புரையோடிப்போன இந்தியாவின் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக இன்று தமிழகத்தில் நடைபெறும் சாதிக்கொடுமைகளுக்கும் , ஆணவக்கொலைகளுக்கும் இந்த " பெத்தவன்" விடை தருகிறான்.

நூல்: பெத்தவன்
ஆசிரியர்: இமையம்
வெளியீடு: பாரதி பதிப்பகம்
விலை: ரூ.35/-

சு.கருப்பையா

அலைபேசி : +919486102431