Friday 5 October 2018

அபசுரமே எட்டி நில்..


" செம்புலப் பெயல்நீர் " போல
எல்லாம் கலந்து விட்ட
இந்தக் காலத்திலுமா
சாதியையும்
வருணத்தையும்
உன் விலாசம் என்கிறாய்?
             
                அந்த விலாசத்தில் தான்
                நீ இருக்கிறாய்?


காலப் புயலில்
உன் வீடு இடிந்து போகவில்லையா?
நீ குடி பெயர்ந்து போகவில்லையா?
நடந்து கலைத்துச்
சத்திரங்களில் தங்கியதில்லையா?

                உன் இரத்தத்தைக் கிளறிப் பார்
               நீயும் ஒரு
               சமுத்திரம் என்பதை அறிவாய்.

சமுத்திரத்தில் ஏது
நதிகளின் விலாசம்?

                "நான், என்பதே
                 இப்போது பன்மைதான்

கைரேகைகளில்
சிக்கல் விழுந்துவிட்ட
இந்தக் காலத்தில்
குலம் என்கிறாய்
கோத்திரம் என்கிறாய்

               குலத்தொழிலைத்தான்
              செய்து கொண்டிருக்கிறாயா
               நீ?

உஞ்ச விருத்தி செய்து தான்
உயிர் வாழ்கிறானா
பிராமணன்?

               ஆட்சி பீடம் தவிர
               வேறெங்கும் அமர்வதில்லையா
               சத்திரியன்?

வைசியன் மட்டும் தான்
தராசு பிடிக்கிறானா ?

                    ஏர் ஓட்டுகிறவனெல்லாம்
                   சூத்திரனா?

வயிற்றுக்காக
முந்தானை விரிக்கத்
தொடங்கிவிட்டபிறகு
இன்னும் எதற்குப்
பத்தினிப் பட்டம்?


                 ஞானிகள் செய்ய முடியாததை
                 விஞ்ஞானிகள் செய்துவிட்டான்

இதோ
நீயே மழித்துக் கொள்கிறாய்
நீயே துவைத்துக் கொள்கிறாய்
           
                  ஏன்
                  கழிப்பறையைக் கூட
                  நீயே கழுவிக் கொள்கிறாய்

இனி
யாரைப் பார்த்து
"எட்டி நில் , என்பாய்?

                  “இல்லை
                  இன்னும் நான்
                  இந்தத் சாதிதான் " என்கிறாயா?

அப்படியென்றால்; பிரேதமே!
உயிருடையவர்கள்  மத்தியில்
உனக்கென்ன வேலை?

                ஒரு புதிய பூபாளத்திற்காகச்
               சுரங்கள் சங்கமிக்கும் நேரமிது
               அபசுரமே!
               எட்டி நில்.


கவிஞர் அப்துல்ரகுமான் "சுட்டுவிரல்" கவிதை நூலிலிருந்து.



No comments:

Post a Comment