Sunday 6 January 2013

வரலாற்றுப் பதிவுகளில் திரிபுகள்-2


" இறைவனின் சித்தத்தால் இந்தியா எதிர்காலத்தில் பற்றாக்குறையுள்ள , எதிர்கால நம்பிக்கையற்ற , மனநிறைவற்ற நாடாக இருக்காது. மாறாக தொழில் துறையில் முன்னேற்றமடைந்த நாடுகளில் ஒன்றாக , எழுச்சிபெற்ற, திறமை படைத்த , செல்வம் செழித்தோங்கிய , வளமும் , வசதியும் மூளைமுடுக்கெல்லாம் பரவிய ஒரு நாடாக எதிர்காலத்தில் திகழும்"
----டெல்லி அரசவை கூட்டத்தில் பேசப்பட்ட செய்தி.

இப்படி தேசப்பற்றுடன் பேசியவர் ஒரு இந்திய அரசியல் தலைவராக இருப்பார் என்று நீங்கள் நினைத்திருந்தால் நிச்சயம் ஏமாந்துபோவீர்கள். ஆமாம்! மேற்கண்ட வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் மற்றும் கவர்னர் ஜெனரல் கர்சான் பிரபு.  இது கி.பி.1903 ஆம் ஆண்டு டெல்லி அரசவைக் கூட்டத்தில் கர்சான் நிகழ்த்திய உரையே! 

மேற்கண்ட பகுதியை நான் வாசித்தது இந்திய வரலாற்றில் பகவத்கீதைஎன்ற நூலில் தான். அதை எழுதியவர் பிரேம்நாத் பசாஸ், தமிழ் வடிவம் கொடுத்தவர் கே.சுப்ரமணியன்.  இந்நூலின் 29 அத்தியாயத்தில் , இந்தியாவின் பொற்காலம் என்று குறிப்பிட்டால் அது ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலமே என்று பதிவு செய்துள்ளார். அதற்கு அவர் கொடுத்திருக்கும் காரணங்களும் எனக்குத் சரியாவே தோன்றுகிறது.   
            
பொதுவாக மனிதகுல வாழ்வையும் உலக வரலாற்றையும்  குறிப்பாக நம் நாட்டின் வரலாற்றை கற்பதில் எனக்கு எப்போதும் தணியாத ஆர்வம் உண்டு.. இளம் வயதில் பள்ளியில்  "குப்தர்களின் காலம் இந்தியாவின் பொற்காலம்" என்றும், ஆங்கிலயர்கள் இந்தியாவை அடிமைபடுத்தி நம்மை அடிமைகளாக வைத்திருந்தனர், அவர்களது பிரித்து ஆளும் சூழ்ச்சியினால் தான் நமது ஒற்றுமை சிதைந்து நாம் அவர்களுக்கு அடிமைகளாக 300 ஆண்டுகள் இருந்தோம் என்றும் சொல்லிக் கொடுத்த போது அவைகளை அப்படியே நம்பினேன். ஆனால், இந்திய வரலாறு சரியான வகையில் எழுதப்படவில்லை என்பதை புரிந்து கொள்வதற்கு எனக்கு பல ஆண்டுகள் தேவைப் பட்டது. எந்த ஆங்கில ஆட்சியின் மீது எனக்குள் கோபமும் வெறுப்பும் திணிக்கப்பட்டதோ  அவர்களே இந்தியாவை ஒருங்கிணைத்தவர்கள் என்றும், பல ஆங்கிலேய அதிகாரிகள் நம் நாட்டையும்,மக்களையும் நேசித்துள்ளார்கள் என்று அறியும் போது மனதிற்குள் நெகிழ்வும் அவர்கள் மீது மரியாதையும் ஏற்பட்டது.

அதிலும் , கர்சான் காலத்தில் தான் ( கி.பி. 1899-1905) இந்தியாவின் வரவு செலவு திட்டம் (BUDGET )  உபரியாக இருந்தது. அதன் விபரம் இதோ;

கி.பி 1898-99     ரூ,1.30 கோடி உபரி.
கி.பி 1900-91     ரூ,1.50 கோடி உபரி.
கி.பி 1902-93     ரூ,4.50 கோடி உபரி.

{இதற்குப் பிறகு , இந்தியாவின் வரவு செலவு திட்டம் உபரியாக இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.அதுவும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பற்றாக்குறை பட்ஜெட்டைப் பார்த்து எனக்குப் பழகிப் போய்விட்டது. உபரி பட்ஜெட் என்பது இந்தியாவில் இனி இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது}

இவற்றைத் தவிர, கல்வித்திட்டம் சட்டஆணையம், போக்குவரத்து மற்றும் "சதி" என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்தது போன்றவை நடந்தேறியது இந்தக்காலக் கட்டத்தில் தான். அதனால் , இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று உண்டு என்றால் அது பௌத்தர்கள் கூறிவது போல் மௌரியர் காலமும் அல்ல, இந்துக்கள் கூறுவது போல் குப்தர்கள் காலமும் அல்ல, இஸ்லாமியர்கள் கூறுவது போல் முகலாயர்கள் காலமும் அல்ல. மாறாக 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார் காலமே என்று பிரேம்நாத் பசாஸ் எழுதிருப்பதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

(“இந்திய வரலாற்றில் பகவத்கீதை விடியல் பதிப்பகம் . விலை. ரூ.350/-
எழுதியவர் பிரேம்நாத் பசாஸ், தமிழ் வடிவம் கொடுத்தவர் கே.சுப்ரமணியன்.  பதிப்பு-2006
பக்கங்கள்-950)
---சு.கருப்பையா.

No comments:

Post a Comment