Wednesday, 22 October 2014

சூரியக் கீற்றுகள்-முனைவர் வா.நேரு ; நூல் அறிமுகம்



முனைவர் வா.நேருவின்   இரண்டாவது கவிதை நூல் இது. வாசிக்கும் பொழுது மனதை வருடும் வார்த்தைகள். ஆனால் எழுதப்பட்டுள்ள இந்த 51 கவிதைகளும்  சமூகத்தில்   நிலவும் மூடநம்பிக்கைகளையும் , அவலங்களையும் எதார்த்தமாக இடித்துக் காட்டுகின்றன. கற்பனைகளையும் , கனவுகளையும் , பாலியியல் உணர்வுகளையும் சுமந்து கொண்டு, புரியாத வார்த்தைகளில் வெளிவரும் இக்கால  கவிதைகள் மத்தியில் எளிமையான வார்த்தைகளுடன் சக மனிதனாகப் பேசும் வா.நேருவின் மொழி நம் மனதிற்குள் சட்டென நுழைந்து விடுகின்றன. 

இந்தக் கவிதைகள் அனைத்தும் எழுத்து வலைதளத்தில் வெளிவந்த பொழுது 99 சதவீதமான வாசகர்கள் ( அவரைத் தவிர ) இவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை என்ற தமது ஆழ்ந்த வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் தோழர்.பொள்ளாச்சி அபி. ஏனென்றால் நேருவின் கவிதைகளில் மோகத்தைத் தூண்டும் காதல் வார்த்தைகள் இல்லை; வார்த்தை விளையாட்டு இல்லை; அத்தோடு மற்றவர்களால் பாராட்டப்படவேண்டும் என்ற ஏக்கத்திலும் எழுதப் படவில்லை. ஆனால் அனைத்தும் மனதை வலிக்கச் செய்யும் நிதர்சனமான உண்மைகள்.  

இந்தக் கவிதைகள் சமூகநலத்தை நேசிக்கும் மனிதர்களால் மட்டுமே வாசிக்க இயலும் வாசிக்கப்படும் , விரும்பப்படும் மற்றவர்களால் புறந்தள்ளப்படும் என்று கருதுகிறேன். இப்போது எனக்கு பிடித்த  கவிதைகளின் சில பகுதிகளை மட்டும்  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

கவிதை எண் – 1:  “வயிற்றிலிருந்து இரத்தம் கொட்ட கொட்ட

அய்யா பசியோடிருந்தன
என் குழந்தைகள்
அவர்களின் பசியைப்
பார்த்துக்கொண்டு
வீட்டுக்குள் இருக்க
இயலவில்லை என்னால்
--
எதிர்பார்க்கவில்லை நான்
கத்தியால் வயிற்றில்
குத்துவார்களென
-----
வயிற்றிலிருந்து இரத்தம்
கொட்ட கொட்ட
வாயிலிருந்து அய்யா
பசியோடிருந்தன  என்
குழந்தைகள்---

மதக் கலவரக்காரர்களால் கல்கத்தாவில் கொல்லப்பட்ட காதர் மைதீனின்   வார்த்தைகள் இது. பத்து வயதில் தனது மடியில் உயிரிழந்த  காதர்   மைதீனின்   இந்த வார்த்தைகள் தான் எனக்கு வறுமையின் கொடுமையை  புரிய வைத்து என்னை பொருளாதார மேதையாக்கியது என்று நோபல் பரிசு பெறும்பொழுது மனம் நெகிழ்ந்து கூறினார் அமர்த்தியா சென்.


கவிதை எண் – 4: “ அந்தக்  கிழவி 

அந்த அதிகாலைக்குரல்
தெளிவாகக் கேட்டது
"அம்மாகீரை"
வீட்டின் முன்னே
பார்த்தேன்!
ஊன்றிய தடி
ஒரு புறமும்
கீரைக் கூடையின்மேல்
ஒரு கையுமாய்,
எழுபதைத்  தாண்டிய 
அந்தக்  கிழவி…..

உழைத்து  உண்ண வேண்டும் என்ற எண்ணத்தில்  வாழும் அந்த  எழுபது வயதுக் கிழவியைப் போல , பேனா விற்கும் எண்பது வயது முதியவரையும் , கைவினைப் பொருள்கள் விற்கும் பார்வையற்றவர்களும் எனக்குத் தெரியும்.  யாரையும் சார்ந்திராமலும் பிச்சை எடுக்காமலும் வாழும் இவர்களே உண்மையான உழைப்பாளிகள்.

கவிதை எண் – 7: “அன்றொரு நாள் கிடைத்த  

சாதியையும்
மதத்தையும்
நெஞ்சு நிறைய
சுமந்து திரியும்
அந்தப் பெரிய மனிதர்
ஊரை அழைத்து
வைத்த விருந்தில்
பங்கேற்ற குற்ற உணர்வு
அகல மறுக்கிறது இன்றும்...

சிறிய  வயதில் சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஒருவரின் வீட்டில் உணவு அருந்தியதை நினைத்துக் குமுறும் கவிஞரின்  சாதியத்தை சாடும் வரிகள்.

கவிதை எண் – 13: “மார்ச் 8” 

மாதச் சம்பளம்
ஐம்பதினாயிரம்
அவளின் கணக்கில்
ஏ டி எம் கார்டை
கணவனிடம்
கொடுத்துவிட்டு
வெகு நேரமாய்
கை ஏந்தி நிற்கிறாள்
பேருந்தில்
அலுவலகம் செல்ல
ஐந்து ரூபாய் கேட்டு....!

இந்தக் கவிதையின் மூலம் மார்ச்-உலக உழைக்கும் மகளிர் தினம் கொண்டாடும்  நாம் பெண்களுக்கு உண்மையான சுதந்திரமும் , உரிமையும் இன்னும் கொடுக்கவில்லை என்பதைச் சாடுகிறார் வா.நேரு. 

கவிதை எண் – 16: “பலர் வாழ்வைக் கொள்ளும் நஞ்சாய் 

தொலைக்காட்சி
பெட்டிகளில்
வேறுபட்ட ஆடைகளில்
ஒரே மாதிரி
பொய்களோடு
ஜோதிடர்கள்
.....
ஜோதிடம்
பலர் வாழ்வைக்
கொள்ளும் நஞ்சாய்
சமூக வாழ்வில்
கொசு பரப்பும் நோய்போல
மதம் பரப்பும் நோயாய்..

இன்றைய காலகட்டத்தில் தொலைக் காட்சியில் வரும் தொடர்களும் , பரப்பப்படும் ஜோதிடம் அருள் வாக்கு போன்ற மூடநம்பிக்கைகளும் சமூகத்தைப் பிடித்துள்ள நோயாகப் பார்க்கிறார் கவிஞர் . இதை மூளைக்குள் புகுத்தப்பட்ட விலங்கு; உடைத்தெறிவது அவ்வளவு எளிதாயில்லை என்று குமைகிறார்.

கவிதை எண் – 21: “நடமாடும் கடவுளாகி விடு 

வாயிலிருந்து லிங்கம் கக்கு!
கையிலிருந்து விபூதி கொட்டு!
முதல்  குடி முதல்
கடைகுடி வரை
காலில் விழ வை
நிறுத்தி நிறுத்தி
இரண்டொரு வார்த்தைகள் பேசு
.......
இந்தியாவில்
எளிதாய் சொத்து சேர்க்க
நீயும் கடவுளாகி விடு
…….
அசைந்து திரிந்த கடவுளின்
அசையா சொத்து
நாற்பதினாயிரம் கோடி.
மதம், ஆன்மிகம் என்ற பெயரில் போலிகள் பணம் பண்ணுவதையும் , அவர்களுக்கு அரசு இயந்திரம் பக்க பலமாய் இருப்பதையும்  இந்தக்  கவிதையின் மூலம் நையாண்டி செய்கிறார் கவிஞர் வா.நேரு. கவிஞர் குறிப்பிட்டது போல் புட்டப்பர்த்தி சாயிபாபா காலிலும் , காஞ்சி ஆச்சாரியார் கால்களிலும் விழுந்து கிடக்கும் அல்லது கிடந்த அரசியல் வாதிகள் , உயர் அதிகாரிகள் எத்தனை பேர்கள்.

கவிதை எண் – 27: “கருகின பயிரைப் பார்த்து 

இக்கவிதையில் கடன் வாங்கி விவசாயம் பார்த்து நொடித்து போகும் ஏழை விவசாயிகளின் ஏமாற்றத்தையும், மனக்குமுறலையும் அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக;
செத்துப் போன
பிள்ளையைப் பார்த்து
கதறி அழும் பெத்தவன்போல
கருகின பயிரைப் பார்த்து
மனதிற்குள் கதறி அழும் வேலை
வட்டிக்கு கடன் கொடுத்த
வட்டிக்காரன் வாரானே!
என்ன செய்ய?”

இந்த ஏழைக் குடியானவனின் அபயக் குரலை மேல்தட்டு வாசகர்கள்  அதிகம் உள்ள  எழுத்து.காம் வலைத்தளத்தில் எழுதிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த  முனைவர் நேரு அவர்களை கட்டாயம் பாராட்டியே தீர வேண்டும். ஆனால் விவசாயம் நொடித்துப் போவதையோ அல்லது  கடனுக்குப்  பயந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதையோ தெரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ளாத மக்கள் வாழும் நாடு இது. கவிதையின் இறுதியில் இப்படி எழுதி இருக்கிறார்;

இருக்கிற தண்ணியை
பகிர்ந்து கொடுக்க வக்கில்லே
இல்லாத பகுதிக்கு
தண்ணி வர வைக்கிற
திட்டம் ஏதுமில்லே, இந்தியாவில்.
பின்னே எதுக்கு அரசாங்க வானொலியில்
அன்பார்ந்த விவசாயிகளே!
என்று முடித்திருப்பார். ஆனால் நான் வாசித்த மூலக்கவிதையில் கீழ்காணும் வகையில் இருந்ததாக ஞாபகம்;  
பின்னே எதுக்கு அரசாங்க வானொலியில்
அன்பார்ந்த விவசாயிகளே!
                            என்று அழைக்கிறீர்கள்
சாகப் பிறந்தவர்களே
என்று அழையுங்கள்! .....
நூலில் ஏனோ கடைசி வரியை நீக்கி இருக்கிறார் கவிஞர். எனக்கென்னவோ அந்த வரிகளும் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

கவிதை எண் – 41: “மாணவனை மறைமுகமாகக் கழுவேற்றி 

இக்கவிதையில் ஆசிரியர்களும் , பெற்றோர்களும்  படிப்பு என்ற பெயரில் குழந்தைகளை சித்திரவதை செய்யும் கொடுமையை கடுமையாக விமர்சித்துள்ளார். குழந்தைகளை அவர்களின் வழியே சென்று , அவர்களின் அறிவைத் தூண்டி வளர்ப்பதற்குப் பதிலாக , வியாபார நோக்கில் உருவாக்குவது தவறு என்று சுட்டிக்காட்டுகிறார். அதற்கு அவர் கூறும் காரணம்;

மதிப்பெண் மட்டுமா வாழ்க்கை!
பிள்ளைகளின் வசந்த காலத்தை
இருண்ட காலமாய் ஆக்காதீர்!
விரும்பிய பாடம் படிக்கட்டும்
விருப்பப்படி படிக்கட்டும் !
படித்தவர்கள் எல்லாம் ஜெயித்ததில்லை!
ஜெயித்த பலபேர்
நன்கு படித்ததில்லை!
திணிக்காதீர் உங்கள் கனவுகளை
உங்கள் பிள்ளைகளின் மேல்!

இதே கருத்தில் எனக்கு  முழு உடன்பாடு இருப்பதால்  இந்தக் கவிதை எனக்கு பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை தான்.

கவிதை எண் – 42: “சொல் போதும் எனக்கு 

கவிஞர் வா.நேரு இந்தக் கவிதையில் தன்னைப் பற்றிய ஒரு சுயபிம்பத்தை நமக்குத் தந்துள்ளார். அது  ஒரு எளிய மனிதனின் உயர்ந்த எண்ணங்களை நமக்கு உணர்த்துகிறது.

மதிப்புறு முனைவர்
பட்டங்கள்
எனக்கு வேண்டாம்!
---
சாதனையாளன்
நான் எனச்
சட்டைக் காலரைத்
தூக்கிவிட்டுத்
திரிதல் வேண்டாம் !
சக மனிதன் என்னை
"மனிதன் இவன்"
என்று சொல்லும் சொல்
போதும் எனக்கு!
----
மாட மாளிகையும்
பவனி வரக் காரும்
பவிசும் வேண்டாம் எனக்கு!
நல்ல மகன்
நல்ல கணவன்
நல்ல தந்தை
என்று எனது
உறவுகள் சொல்லும் சொல்
போதும் எனக்கு!

என்ன கவிஞர் இவர்?.  சினிமாவிற்கு பாட்டெழுதி  புகழ் பெற ஆசையில்லாமல் , கார்  வாங்க விருப்பமில்லாமல் , தலை முழுவதும் தான் உலகப் புகழ் பெற்ற கவிஞன் என்ற தலைக்கனம் இல்லாமல் வாழ ஆசைப்படுகிறார்?


கவிதை எண் – 42: “நிறைந்திருக்கிறாய் அம்மா! 

தனது தாயின் மரணத்தினால் ஏற்ப்பட்ட  சோகத்தை இப்படி பதிவு செய்து தாய்மைக்கு பெருமை சேர்த்துள்ளார்
குடத்திற்குள்
நிறைந்திருக்கும்  நீர்போல
நினைவுகள்  முழுக்க
நிறைந்திருக்கிறாய் அம்மா!
---
ஏழு வயதில் தந்தையை
இழந்த என் வளர்ச்சியில்
தந்தையும் தாயுமாய்
செடியை வளர்க்கும்
சூரிய ஒளி போல்
அருகில் இருந்த போதும்
தூரத்தில் இருந்த போதும்
ஒளியூட்டினாய்
உணர்வூட்டினாய்
செரிவூட்டினாய்
என் வாழ்வை அம்மா!

இப்படி தாயன்பை அழகாக கொடுத்துள்ளார்.
இவ்வாறே நூலில் உள்ள மற்ற கவிதைகளிலும் முனைவர்.நேருவின் அனுபவங்களும் , பட்டறிவும்   கவிதை வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது. அவர் இக்கவிதைகள் மூலம் சுட்டிக்காட்டும் மனித வாழ்க்கை சமூகத்திற்கு உரம் போட்டு வளர்க்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனாலும் சாதியத்திற்கு எதிரான வலுவான கவிதைகளும் , விதவை மறுமணம் , காதல், நட்பு , பட்டினி , வறுமை ஒழிப்பு போன்ற தளங்களைச் சுட்டிக்காட்டும் கவிதைகளையும் முனைவர் வா.நேரு  இன்னும் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் படைப்புகள் தொடர்ந்து பயணிக்கட்டும்!

-       -சு.கருப்பையா.


Wednesday, 15 October 2014

வாசிப்போர்களம் -கூட்டம் 19

தோழர்களே !

ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு  நமது வாசிப்போர்களம்  17-10-2014 ந் தேதி மாலை 05-30 மணிக்கு வழக்கமான இடத்தில் கூடுகிறது.  அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும். 

தோழர். கருப்பையா , பாட்டாளி எழுதிய  "கீழைத்தீ " என்ற நூலை அறிமுகம் செய்கிறார்.

 சந்திப்போம்!.

Friday, 29 August 2014

MADURAI BOOK FAIR 2014



The ninth edition of the annual Madurai Book Fair, organised by Booksellers and Publishers Association of South India (BAPASI), will begin at the Tamukkam Grounds here on August 29.

It will be inaugurated at 6 p.m. on Friday and open from 11 a.m. to 9 p.m. from August 30 to September 7.

Addressing a press conference, BAPASI president Meenakshi Somasundaram said there would be 228 stalls with fiction and non-fiction books in Tamil and English displayed for sale.

BAPASI secretary K.S. Pugalendi said last year’s edition of the fair in the city had received an overwhelming response and books worth more than Rs.2 crore were sold during the expo.

“We had received enquiries from many more publishers who wanted to put up stalls here this year, but due to space constraints we have been able to accommodate only 10 additional stalls,” he said. Commenting on the changing trends in the market, Mr. Pugalendi said the demand for serious literature had been slowly but steadily increasing.

“Cookbooks and motivational books used to be the most preferred books at the fair earlier, but more youngsters have now become serious about reading. Despite various distractions such as internet, there has been a gradual increase in the number of people wanting to read and explore new writing,” he said.

The organisers said the district administration had lent them support by arranging drinking water and sanitation facilities at the venue for the public.
Special visits had been arranged for students from various city schools to the fair, and every evening, there would be competitions and cultural programmes scheduled, the organisers added.

Courtesy: The Hindu.



Friday, 30 May 2014

நூல் வெளியீட்டு விழா!


வாசிப்போர்களத்தின் அமைப்புநிலை உறுப்பினர்களில் ஒருவரும், தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக மாநிலத்தலைவருமான முனைவர்.வா,நேரு அவர்கள் எழுதிய  சூரியக் கீற்றுக்கள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா 01/06/2014 ந் தேதி நடைபெறுகிறது. விபரம் கீழே;
             
நூல் சூரியக் கீற்றுக்கள்
ஆசிரியர்: முனைவர்.வா.நேரு.
நாள்: 01-06/2014,மாலை 06.00 மணி.
இடம் : அ.முருகானந்தம் பழக்கடை, யானைக்கல், மதுரை-1

நூல் வெளியிடுபவர்    :   பொ. நடராஜன், நீதிபதி (ஓய்வு)
பெற்றுக்கொள்பவர்கள்:    சி.மனோகரன், நெல்லை மண்டலத்தலைவர், திராவிடர் கழகம்.
                                         டி .மகேஸ்வரி , பேரவைச் செயலர், தொ.மு.ச. 
                                         சு.கருப்பையா,    வாசிப்போர்களம், மதுரை.

வாசிப்போர்களத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும். முனைவர். வா.நேரு அவர்களுக்கு  வாசிப்போர்களத்தின் சார்பாக மனம் கனிந்த வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி!!



Saturday, 5 April 2014

காவல் கோட்டம்-என்ன நடக்கிறது?

நண்பர்களே!

உங்களுக்கெல்லாம் தெரியும். சு. வேங்கடசனின் "காவல் கோட்டம்"  நாவல்  சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாவல். தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. வெளியீட்டு விலை ரூ.650 /-ஆக இருந்தது.

ஆனால் , இதே காவல் கோட்டத்தை விகடன் பிரசுரம் ரூ. 520 இக்கு வெளியிட்டது ( பிரசுர எண் 782) . எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது!.

எப்படி?.

இப்பொழுது எனக்கு திரும்பவும் அதிர்ச்சி!. ஆம். தமிழினி பதிப்பகம்  காவல் கோட்டத்தை   மறுபடியும் ரூ.350 இக்கு வெளியிட்டுள்ளது.


ஏன் இந்த நிலை? . போட்டியா? அல்லது குளறுபடியா? . யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்.

Thursday, 13 March 2014

வாசிப்போர்களம்-18

தோழர்களே!

 நமது வாசிப்போர்களம் கூட்டம் 14-03-2014 ந் தேதி நடைபெறுகிறது. குறுஞ்செய்தி உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். 

அறிமுகம் செய்யப்படும் நூல்: " இந்து மதம் எங்கே போகிறது." 
ஆசிரியர்: அக்கினிகோத்திர ராமானுஜ தாத்தாச்சாரியார் .