Friday 18 January 2019

களப்பால் குப்பு


களப்பால் குப்பு


பிறப்பு : 1911
இறப்பு: 18/04/1948

நூலாசிரியர்: வாய்மைநாதன்
வெளியீடு : NCBH
விலை : ரூ 100/-


தஞசை, திருவாரூர் மாவட்டத்தில் வாழ்ந்த விவசாயிகளின் விடிவெள்ளியாக திகழ்ந்த தோழர் களப்பால் குப்புசாமியின் வரலாறு , அப்பகுதியின் செங்கொடி வரலாற்றோடு இணைந்தது.

களப்பாலை     சேர்ந்த அருணாசலம்-சமுத்திரத்தம்மாள் தம்பதியினருக்கு  மகனாகப் பிறந்தவர் குப்புசாமி. தலையாரியான அருணாசலம் அவர்களுக்கு  தமது  படிக்க  வைக்க  ஆசை . ஆனால் விவசாய கூலிகளுக்கு பள்ளியில் இடம் கிடையாது. அதனால் தனக்கு மகன் பிறந்ததையே மறைத்து விடுகிறார். தலையாரியின் மகன் என்பதால் குப்புசாமியை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார் வாத்தியார் . ஆனால் இவன் வாத்தியாரையோ, மற்ற உயர் சாதி குழந்தைகளையோ தொட்டுவிடக்கூடாது என்பதால் திண்ணையில் நின்று தான் படிக்க வேண்டும். சிறிய தவறு தெரிந்தாலும்  பிரம்படிதான்.   எப்படியோ ஆறாம் வகுப்பு வரை படித்து விடுகிறான் குப்பு. அதன் பின்பு பண்ணையார் தொப்பையா முதலியாரின் தலையீட்டால்  படிப்பை தொடரமுடியாத நிலை ஏற்படுகிறது., அவர் வீட்டில் பண்ணையாளாகி விடுகிறான்.


ஏழை சூத்திர மக்களுக்கு அங்கு நிகழும் கொடுமைகளைக்   கண்டு கொதித்து எழும் குப்பு , ஒரு நாள் தன்னை அடிக்க வரும் பண்ணை மணியம் காதர் பாட்சாவின்   சாட்டையை பிடுங்கி அவரை வெளுத்து வாங்குகிறான். ஆடிப்போய் விடுகிறது பண்ணை.   பண்ணையாரின் பிடியிலிருந்து தப்பிக்க  குப்பு களப்பாலை விட்டு வெளியேறுகிறான்.


பிறகு ஓவரூரை சேர்ந்த குப்பம்மாளை திருமணம் செய்கிறார் ; ஆனால் சிறிது   காலத்திற்கு பிறகு இவர் பிரிந்து சென்று விடுகிறார். அதன் பின்பு தலை ஞாயிறுவை சேர்ந்த வாஞ்சாலையை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு சோலையம்மாள் என்ற மகளும், கணேசன், பக்கிரிசாமி மற்றும் சிவஞானம் என்ற மகன்களும் பிறக்கிறார்கள்.

நிலப்பிரபுத்துவக் கோட்டையாக திகழ்ந்த தென்பரை, களப்பால் பகுதியில் வாழ்ந்து வந்த விவசாயக் கூலிகளை இணைத்து சங்கம் அமைக்கவும் , கொடூரமும் , வக்கிரமும் நிறைந்த பண்ணையார்களுக்கு   எதிராக போராடவும் பெரிதும் காரணமாக இருந்தவர் களப்பால் குப்பு. சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் போராடும் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய போராளி தோழர். களப்பால் குப்பு.


கி.பி. 1943 ஆம் ஆண்டு தான் விவசாயிகள் சங்கம் தஞ்சைப்பகுதிகளில் வேரூன்றத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் ; வேதபுரம் ரெங்கசாமி , நரசிங்கபுரம் கொள்கைவீரர் பி. வெங்கடேச சோழகர் ஆவார்கள். அதன் பின்பு தோழர் .பி. சீனிவாச ராவின் வருகை விவசாயிகளின் போராட்டத்தை எழுச்சியுடன் வழி நடத்தியது.

அவ்வாறு தென்பரையில் துவக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தில் தான் தமது பணியைத் துவக்கினார் களப்பால் குப்பு . அவரின் வீரமான போராட்டத்தினால் விவசாயக் கூலிகளின் மீது தொடுக்கப்பட்ட சவுக்கடி,  சாணிப்பால் திணிப்பு ஒழிந்தது. அதனால் தஞ்சை மாவட்டத்தில் இருந்த  கூலி உழவர்கள், பண்ணையாட்கள் , குத்தகையாளர்கள், வார சாகுபடியாளர்கள் , சிறுசிறு விவசாயிகள் ஆகியோர்களுக்கு தாரக மந்திரமாக “சங்கம்”  இருந்தது.


தோழர் பி.சீனிவாச ராவ் கலந்து கொண்ட விவசாய  சங்க கூட்டங்களில் தேன் கூட்டில் மொய்க்கும் தேனீக்களை போல் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினார்கள். அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் மக்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தது. " சாட்டையால் அடிக்காதே! சாணிப்பாலை நிறுத்து ! அடித்தால் திருப்பி அடிப்போம்! "வாடி போடி " என்றால் " வாடா போடா " என்போம் என்ற வார்த்தைகள் பண்ணையார்களின் மனதில் பயத்தை உருவாக்கின.


களப்பால் குப்பு , சீனிவாசராவை வைத்து பல்வேறு கூட்டங்களை நடத்தி வைத்தார். அதனால் அப்பகுதியில் எப்போதும் பதட்டம் நிலவியது. பிரச்சனையை முடிவிற்கு கொண்டுவர களப்பால் குப்புவை  கொலைசெய்ய திட்டமிட்டு பண்ணையார்கள்  கூலிப்படையை நியமித்தனர் . ஆனால் ஒவ்வொரு முறையும் தமது வீரத்தால் தப்புகிறார் குப்பு. ஒரு முறை இவரை கொலை செய்ய வந்த நான்கு கூலிப்படையினருடன் பேசி , அவர்களை மனம் மாற செய்வதும் , அவர்கள் குப்புவை பாதுகாப்பாக வீட்டில் விட்டு செல்வதும் மனதை நெகிழச்செய்வதாக இருக்கிறது.


இதனைத் தொடர்ந்து களப்பாலில் பிரமாண்டமான ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் குப்பு. அதனை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் , குப்புவிற்கு தணடனை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிந்தித்த  பண்ணையார்கள் கூலிப்படையை ஏவி குப்புவின் மூத்த மகன் கணேசனின் கையில் வெட்டி விடுகிறார்கள். செய்தி கேள்விப்பட்ட குப்புவின் மனைவி அதிர்ச்சியிலும் , ஏற்கனவே இருந்த பெரியம்மை பாதிப்பினாலும் இறந்து விடுகிறார்.


தகவல் அறிந்த குப்புசாமி மிகவும் துயரமடைந்தார்; ஆனாலும் ஒரேயடியாக குலைந்து போகவில்லை. " அவள் இறந்து விட்டாளா?" நொடி நேரம் அவர் அமைதியாக நின்றார்; பிறகு தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னார்: " நான் வந்து என்ன செய்யப் போகிறேன்? நீங்களே அவளை அடக்கம் செய்யுங்கள்!"  என்றார். இத்தகைய நெஞ்சுரம் கொண்ட  இடது சாரி  தோழன் களப்பால் குப்பு.


இறுதியாக குன்னியூர் கிராமத்தில் சேரிவாசிகள்  பண்ணையாட்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வீடுகளை இழந்தார்கள்; பெண்கள் கேவலப்படுத்தப்பட்டார்கள். பொறுமை கடந்த சேரி மக்கள் வெகுண்டார்; குண்டர்களை எதிர்த்து மோதினார். அந்தக் கைகலப்பில் கூலிப்படையினர் இருவர் இறந்தனர். ஆனால் கொலைப்பழி களப்பால் குப்புவின் மீது விழுந்தது. தஞ்சை அமர்வு நீதிமன்றம் அவருக்கு " தூக்குத் தண்டனை " விதித்தது.


அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்ய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அவருக்கு மருந்து கொடுக்கும் சாக்கில் விஷமுள்ள மாத்திரைகள் இராமன் என்ற கைதியால் கொடுக்கப்பட்டது. அதனால் 18/04/1948  ந் தேதி இரத்தவாந்தி எடுத்து அந்த எரிமலையின் வாழ்வு   மரணத்தில் முடிந்தது.    


கி.பி. ஆம் 1911 ஆண்டு  பிறந்த களப்பால் குப்பு இந்த மண்ணில் 37 ஆண்டுகளே  வாழ்ந்தார். அவரின் வாழ்வும் , தியாகமும்  வருங்கால சந்ததிகளுக்கு பாடமாகவே இருக்கிறது. களப்பால் குப்புவின் கதை  பட்டிதொட்டிகளிலெல்லாம் பேசப்பட வேண்டும். சாதியமும், மதவாதமும் மீண்டெழுந்துள்ள இத்தருணத்தில் மக்களை பாதுகாக்க களப்பால் குப்புசாமி போன்ற தோழர்கள் நம் நாட்டிற்கு மிகவும் தேவைப்படுகிறார்கள்!

அம்மாவீரனின் சுருக்கமான வரலாறே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தியாகம் மிகுந்த முழுக்கதையையும் இந்த நூலை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சு.கருப்பையா.


1 comment:

  1. வீர வணக்கம் தோழர் களப்பால் குப்பு அவர்களுக்கு

    ReplyDelete