Monday 23 December 2019

மதில்கள்-நாவல் .


வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில்: சுகுமாரன்
வெளியீடு: காலச்சுவடு , 2015
பக்கங்கள்: 71
விலை: ரூ.65 /-





மதில்கள்  ….

இந்த  குறுநாவல் 1962 -63   இல் வைக்கம் முகம்மது பஷீர் அவர்களால் எழுதப்பட்டது. 1942   ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட  பஷீர் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு சக கைதி நாராயணி மேல் அவருக்கு ஏற்பட்ட காதலும் , சிறை அனுபவங்களும் தான் இந்த குறுநாவலாக வடிவெடுத்திருக்கிறது.


பஷீர் சிறைக்குள் காய்கறித் தோட்டம் போடுவதும் , ரோஜா  பூக்கள் வளர்ப்பதும் , மரங்களில் விளையாடும் அணில்களை ரசிப்பதும்  மிகவும் இயல்பாக இருக்கிறது.

அதேபோல் சிறைச்சாலையின் மறுபக்கத்தில் இருக்கும் பெண்கள் பகுதியிலிருந்து  வரும் " பெண்ணின் மணமும்" அவரை ஈர்க்கிறது. பெண்ணிற்கு மணம் இருப்பதையும் , அதை தமது நுட்பமான மனத்தால் அறிந்துகொள்ள முடியும் என்பதையும் பஷீர் உணர்ந்திருக்கிறார்.


இவருக்கும் , நாராயணிக்கும் இடையே சிறைக்குள் இருக்கும் நீண்ட நெடிய மதில்கள். அதற்கு உயிரூட்டி இருக்கிறார் பஷீர்.  சிறைச்சாலைக்குள் தேநீர் போடுவது , தோட்டவேலை செய்வது மற்றும் ஜெயலரின் தில்லுமுல்லுகள் என்று சாதாரணமாக நகரும் நாவல் , நாராயணி வந்த பிறகு நம்மை வேறு தளத்திற்கு அழைத்துச் செய்கிறது.


மதிலுக்கு இருபுறமும் நின்று கொண்டு அவர்கள் பேசும் சரசம் நமக்கு விரசத்தைத் தரவில்லை; ரசிக்கவே முடிகிறது.

இப்படியாக வளரும் காதல் , அவர்களை சந்திக்கத் தூண்டுகிறது. ஆகவே ,  ஒரு வியாழக்கிழமை  சிறைச்சாலைக்குள் இருக்கும் மருத்துவனையில் சந்திக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். அடையாளங்களை பரிமாறிக் கொள்கிறார்கள், நாராயணி  தனது வலது கன்னத்தில் மச்சம் இருக்கும் என்று கூறுகிறாள். பஷீரின் கைகளில் சிவப்பு ரோஜாப்பூ. பஷீர் கனவுகளில் மிதக்கிறார். ஆனால், புதன்கிழமை மதியம் ஜெயிலர் அனியன் வருகிறார். அவர் கையில் ரோஜாப்பூக்கள் . ஆம்! பஷீருக்கு விடுதலை.

அந்த தருணத்தை பஷீர் இப்படி எழுதியிருக்கிறார்," நான் நடுங்கிப் போனேன். என்னுடைய கண்கள் காணாமற் போயின, காதுகள் கேட்காமற்  போயின, மொத்தத்தில் ஒரு திணறல். எனக்கு எதுவும் புரியவில்லை". மகிழ்ச்சி தரவேண்டிய அத்தருணம் பெரும் துக்கத்தைத் தருகிறது.

பஷீர் தமது ரோஜாத்தோட்டத்திற்கு வருகிறார். ஒரு சிவப்பு ரோஜாவைப் பறித்து முத்தமிட்டபடி பார்க்கிறார். ஜெயிலர் அவரின் லாக்கப் கதவை பூட்டுகிறார். பஷீர் , தமது மனக்கதவைப் பூட்டுகிறார்.

ஒரு மனிதனின் உணர்வோடு  கலந்துவிட்ட காதலானது மகத்துவமானது. அக்காதல்  வெற்றி பெறும் பொழுது  அவனுக்கு  மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தருகிறது; மாறாக , தோல்வியுறும்  போது அழியாத காயத்தைத் தருகிறது.  , அது அவன் மரணிக்கும் வரை உடன் பயணிக்கும் வடுவாகவே  இருக்கிறது  

பஷீர் தமது காதலை இந்த நாவல் மூலம் அப்படியே நம் மனதிற்குள் பதிவேற்றுகிறார். இந்தியாவின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக அவர்  போற்றப்படுவதற்கான அடையாளத்தை நாம் இந்த நாவலில் காணலாம்.

இந்த மதிலுக்கு உயிர் இருக்கிறது.

பஷீர் அந்த மதிலையும் நாராயணியையும்  தமது இறுதி காலம் வரை சுமந்து திரிந்திருப்பார்....





1 comment:

  1. சிறைக்கைதிகளின் காதல் கதை இதுவரை நான் எந்தக்கதையிலும் படித்ததில்லை.உங்களின் நாவல் மதிப்புரை படிக்கத்தோன்றுகிறது.மதிலுக்கு மட்டுமல்ல மனமுவந்து வாசிக்கும் ஒவ்வொரு நூலுக்கும் உயிர் இருக்கிறது..ஆம் உயிரற்ற நடைப்பிணங்களை விட அவை மேலானவை...நன்றி படித்ததை பகிர்ந்தமைக்கு....

    ReplyDelete