Saturday 19 January 2013

நிலமெல்லாம் இரத்தம்


புதிய ஆண்டின் முதல் நூல் அறிமுகக் கூட்டத்தில் தோழர். பாலகுமார், "வெட்டுப் புலி" என்ற  தமிழ்மகனின் நாவலையும் அத்துடன்  "சூர்ப்பணங்கு" என்ற நாடகத்தையும் தோழர்.கருப்பையா  "நிலமெல்லாம் இரத்தம்" என்ற பா.ராகவனின் வரலாற்று நூலை அறிமுகம் செய்து வைத்தார்கள். ஏற்கனவே சூர்ப்பணங்கு நாடகம் பற்றிய பதிவினை தோழர். பாலகுமார் தமது "தென் திசை"யிலும் , நமது வாசிப்போர்களத்திலும் வெளியிட்டுள்ளார்.

நிலமெல்லாம் இரத்தம்" பற்றி..

நூல் ஆசிரியர்: பா.ராகவன்
முதல் பதிப்பு : 2005
விலை       : ரூ.300 ( தற்போதைய விலை ரூ.475/-)
பதிப்பு        : கிழக்குப் பதிப்பகம்

இந்நூலைப் பற்றி அதன் ஆசிரியர் பா.ராகவன்  தமது முகப்புப் பகுதியில், இஸ்ரேல் பாலஸ்தீன எரியும் பிரச்சனையின் புரியும் வடிவம்" என்று அடைமொழி கொடுத்திருப்பார்.  நூலை வாசித்து முடித்ததும், இந்த வார்த்தைகள் உண்மையானதாகவே  எனக்குத் தோன்றியது.

நூலில் , கி.மு.44 இல் துவங்கி கி.பி.2004 ஆண்டு வரையிலான மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் வரலாற்றை ( இஸ்ரேல்,எகிப்து,சிரியா,ஜோர்டான்,துருக்கி, லெபனான் மற்றும் பாலஸ்தீனம்) நடுநிலைமையோடு பா.ராகவன் பதிவு செய்திருக்கிறார் என்று கருத இடமுண்டு.  எத்தனைப் போர்கள்! எத்தனை உயிர் பலிகள்!  ஆயினும் இன்னும் சுதந்திர பாலஸ்தீனம் உருவாகவில்லை! இஸ்ரேல் அதை அனுமதிக்கவே இல்லை. இன்றும் கூட காஸாப் பகுதியில் குண்டு வெடிக்காத நாட்களே கிடையாது. இந்த நீண்ட இரத்தம் தோய்ந்த வரலாறு மனதை வலிக்கவே செய்கிறது!

இந்தப் புத்தகம் , இஸ்லாம், கிறித்துவம் மற்றும் யூதர்கள் என்ற மூன்று மதத்தவர்களின்  மூலத்தந்தையான ஆபிரஹாம் காலம் தொடங்கியாசிர் அராபத் மரணம் வரை பேசுகிறது. ஆபிரஹாம் அவர்களுக்கு சாரா, ஆகார் என்று இரண்டு மனைவிகள். சாரா மூத்த மனைவி. இவருக்கு குழந்தை பிறக்காததால், அவரது வேலைக்காரப் பெண்மணி ஆகாரை தமது கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கிறார்.  அவருக்கு இஸ்மாயில் என்ற மகன் பிறக்கிறான்.  குடும்பம் மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கும் போது, பொறாமையில் பீடிக்கப்பட்ட சாரா, ஆகாரை குழந்தையுடன் வீட்டைவிட்டு துரத்துகிறார்.   பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து சாராவிற்கும் "ஈஸாக்"  ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.  இந்த "ஈஸாக்" கின் வழித்தோன்றல்களே "யூதர்கள்'. இஸ்மாயிலின் வழி வந்தவர்கள் தான் " பாலஸ்தீனியர்கள்". ஆகவே, பாலஸ்தீனியர்கள் , யூதர்களைவிட பனிரெண்டு ஆண்டுகள் மூத்தவர்கள்.

ஈஸாக்கின் மூலமாக வந்த யூத குலத்தில்,  கி.மு.5 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் தான்  இயேசு கிறிஸ்து.  இவருடைய கருத்துகளும், போதனைகளும் பழமையில் ஊறிப்போன யூத மதகுருக்களுக்கு எதிராக இருந்ததால் இயேசு கிறிஸ்துவை வெறுக்க ஆரம்பித்தனர். அப்பொழுது பாலஸ்தீனம், ரோமானியர்களின் கட்டுப்பாட்டில் அதாவது பான்டியஸ் பிலாட் ( பிலாத்து) என்பவரின் பொறுப்பில் இருந்தது.  இயேசு கிறிஸ்துவின் மேல் வெறுப்பில் இருந்த யூத மதகுருக்கள் , பிலாத்து மூலமாக அவரை சிலுவையில் ஏற்றினார்கள். இது நடந்த காலம் கி.பி.30-35 இருக்கலாம். இயேசுவின் இறப்பிற்குப் பிறகும் அவரது புகழ் பரவிஅவரது கருத்துகளை ஏற்றுக் கொண்டவர்கள் " கிறித்துவ" மதத்தை தோற்றுவித்தனர்.  இந்நிலையில், ஜெருசலம் நகரில் இருந்த , ஏறத்தாழ  950 ஆண்டுகள் பழமை வாய்ந்த, யூதர்களின் புனித ஆலயம் ( சாலமன்)  கி.பி.70 இல் கிறித்துவர்களால் ( டைட்டஸ் என்ற ரோமானிய மன்னன்)  இடித்துத் தள்ளப்பட்டது. இதுவே பாலஸ்தீனப் பிரச்சனையின் ஆணிவேராக உள்ளது. [ இந்த கோவிலின் அருகில் உள்ள குன்றில் தான் இஸ்லாமியர்களின் முகம்மது வானில் இருந்து இறங்கியதாக நம்பிக்கை. இதன் கீழே மசூதியும் கட்டப்பட்டது] . அங்கே, கிறித்துவ ஆலயமும் எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து கி.பி.133 இல் ரோமானியப் பேரரசர் கான்ஸ்டன்டைன் கிறித்துவ மதத்திற்கு மாறி " கிறித்துவ மதத்தையே" மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு போட்டதால், பாலஸ்தீனப் பகுதிகளில் கிறித்துவம் வளரத் துவங்கியது. அதனால் கிறித்தவர்களுக்கும், யூதர்களுக்கும் தொடர்ந்து மோதல்கள் ஏற்ப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில் பாலஸ்தீனக் கிளையில் கி.பி.571 இல் முகம்மது நபிகள் பிறக்கிறார்.  முகம்மது நபிகளுக்கு " ஜிப்ரீல்" என்ற அசிரிறீ  மூலமாக அருளப்பட்ட போதனைகளை அவர் மக்கள் மத்தியிலே பரப்புகிறார்.  இதுவே "குரான்" ஆகும். அத்துடன் புதிய இஸ்லாம் மதமும் உருவானது. முகம்மது நபியின் ஒழுக்கத்தினாலும், அன்பினாலும்  மற்றும்  செயலாலும் கவரப்பட்ட பெருவாரியான பாலஸ்தீனியர்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். கூடவே யூதர்களும் தான்.  

நபிகளின் பிறப்பிற்கு பிறகு , பாலஸ்தீனத்தில் இஸ்லாம் முழுமூச்சில் வளர ஆரம்பித்தது. கி.பி.632 இல் நபிகள் நாயகம் இறந்த பிறகு, அவர் வழியில்  உமர், சலாவுதீன் உள்ளிட்ட கலிபாக்களின் ஆட்சி தொடர்ந்தது. , கூடவே கிறித்துவ இஸ்லாமியப் போர்களும் தான். குறிப்பாக , சுல்தான் சலாவுதீன் கி.பி.1181 இல் ஜெருசலம் நகரைக் கைப்பற்றி இஸ்லாத்தின் பிடியில் வைத்துக் கொண்டார். ஜெருசலத்தை மீட்கத் தொடர்ந்து கிறித்துவர்கள் போரிட்டனர்.  இந்தப் போர்கள்  சிலுவைப்போர்கள் என அழைக்கப்பட்டன.   கி.பி. 1095 முதல்  கி.பி 1250 வரை ,  ஏறத்தாழ ஐந்து சிலுவைப்போர்கள் நடைபெற்று பாலஸ்தீனத்தின் அமைதியை கெடுத்தது.  இதில் வேதனையான விசயம் என்னவென்றால், ஜெருசலம் நகரை கைப்பற்றவே இந்த மூன்று மதத்தவர்களும் சண்டையிட்டார்கள் என்பது தான்.

இதன் பிறகு, பாலஸ்தீனம் கி.பி. 1517 முதல் 1918 வரை துருக்கியப் பேரரசின் பிடியிலே இருந்தது. இடையில் சில ஆண்டுகள் 1831-1840 வரை மட்டும் எகிப்தின் கீழ் இருந்தது.  இந்தச் சூழ்நிலையில் தான் பாலஸ்தீன மக்களின் விடிவெள்ளியாக வந்த  யாசிர் அராபத் கி.பி.1929 இல் பிறக்கிறார். பாலஸ்தீனத்தை மீட்டுக்க அல்பத்தா ( AL FATAH)  அல்லது புனிதப்போர் என்ற போராளி இயக்கத்தை ஆரம்பிக்கிறார்.  ஆனால் பாலஸ்தீனத் தனி நாடு உருவாகுவதற்குப் பதிலாக, ஐ.நா, மற்றும் அமெரிக்காவின் தலையீட்டால் கி.பி.1948 இல் பாலஸ்தீனம் பிரிக்கப்பட்டு " இஸ்ரேல்"  என்ற நாடு உருவானது.  இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தை உருவாக்க, அல்பத்தாவைப் போன்று அப்போது இருந்த 18 போராளிக்குழுக்கள் இணைந்து கி.பி. 1964 இல்  "பாலஸ்தீன விடுதலை இயக்கம் " [PLO ]  என்ற கூட்டமைப்பை உருவாகியது. அதன் தலைவராக யாசிர் அராபத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தனி நாடு என்பதற்குப் பதிலாக, கி.பி.1994 இல் ,  சுய ஆட்சி அதிகாரம் படைத்த பாலஸ்தீனத்தைத் தான் இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ராபின் அவர்களிடமிருந்து  யாசிர் அராபத்தால் பெற முடிந்தது. அதற்காகவே, இவ்விருவருக்கும் 1994 ஆம் ஆண்டு "அமைதிக்காண நோபல் பரிசு கிடைத்தது".  ஆனால் சுதந்திரத் தனி பாலஸ்தீனம் என்பது,  கி.பி.2004 இல் யாசிர் அராபத் இறக்கும் வரை ஏற்படவே இல்லை!

இது தான் "நிலமெல்லாம் இரத்தம்" நூல்  சுட்டிக்காட்டும் சுருக்கமான வரலாறு.

இந்த நூலை முழுவதுமாக வாசித்தால் இரத்தம் தோய்ந்த பாலஸ்தீனத்தின் வரலாறு ஒவ்வொருவரின் மனதையும் வலிக்கச் செய்யும். படித்துமுடித்த பின்னர், "இஸ்ரேல்-பாலஸ்தீனப்  பிரச்சனை என்பது, தனித்துவம் வாய்ந்த இரண்டு மதங்களின் முரண்பாட்டுப் பின்னணியில் , திறமை மிக்க  அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மக்களின் உணர்வு சார்ந்த பிரச்னை. மதம், அரசியல் மற்றும் உணர்ச்சி -சேரக்கூடாத இந்த மூன்று அம்சங்கள் ஒன்று சேர்ந்த காரணத்தால் இன்று வரை தீர்க்க முடியாத சிக்கலாக இருந்து வருகிறது"  என்று இந்நூல் ஆசிரியர் குறிப்பிடுவது நம் மனதிலும் பதிந்து விடும்.

இந்நூல் உங்களுக்கும் பிடிக்கும்!


( வெட்டுப் புலி நூலின் பகுதி விரைவில்)

Thursday 17 January 2013

சூர்ப்பணங்கு - நாடகம் அறிமுகம்


சூர்ப்பணங்கு - ஏழு கன்னிமார் கதை



அடைவெறி நீங்காத தாய்க்கோழியின் விரித்த சிறகுகளுக்குள் அரவணைக்கப்பட்டு, தலையை மட்டும் வெளியே நீட்டியபடி கள்ளப்பிராந்தை அண்ணாந்து பார்க்கும் சிறு குஞ்சுகளாகவும், அவற்றை கொடிய உலகில் வாழ்விக்க வழியற்று தானும் அவையும் சேர்ந்து மரிக்க கிணற்றைத் தேடி அலையும் தாய்க்கோழியான நல்லதங்காளாகவும் அறிமுகமாகிறாள் சூர்ப்பணங்கு. ஆண்டாண்டு காலமாய், சென்ம சென்மமாய் அடுப்படிகளிலும், படுக்கையறைகளிலும், இருண்ட வீதி முனைகளிலும், முள்ளுக்காடுகளிலும், திரையரங்குகளிலும், ஊடகங்களிலும், இணையங்களிலும், ஓடும் பேருந்துகளிலும் நார்நாராக கிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்ணுடலின் மொத்த வடிவாய் எழுந்து நிற்கிறாள் சூர்ப்பணங்கு. பாழாய் விரிந்து கிடக்கும் பூமியில் ஊட்ட ஒரு வாய்ச்சோறு கிடைக்காமல் தன் ஏழு பிள்ளைகளுடன் மரணத்தை அணைக்கும் தாய், இறுதியில் ஏழு தனங்களைக் கொண்டவளாய் அவதரித்து உலகுக்கு அமுதூட்டுகிறாள். செவ்விற மேலாடை குருதியால் நனைந்த படியும், வெண்ணிற பாவாடை, சாட்டையடிகளுக்கு ஏற்றவாறு முடிச்சுகளை இறுக்குவதுமாக பெண்ணுடலின் மீதான அதிகாரம் தொன்மம் தொட்டு தொடர்ந்து வருவதை அழுத்தமாக பதிவு செய்கிறாள் சூர்ப்பணங்கு.

வைக்கோல் பிரியை கூந்தலாய் கொண்டு, அதிலும் வண்டுகள் ஊறும் உருவகத்தைக் கொண்டவளாய் வருகிறாள். திசைக்கொன்றாய் முளைக்குச்சிகளடித்து அடைப்புகளை ஏற்படுத்தி, அம்முளைக்குச்சிகளை தன் அடிவயிற்றியிலும் ஏற்றிக் கொள்கிறாள். பின் வெறி கொண்டவளாய் முளைக்குச்சிகளை பிடுங்கி எறியவும் செய்கிறாள். விளக்குமாறையும், முறத்தையும், உலக்கையையும் சடங்குகளின் தொடர்ச்சியாய் சுமந்து கொண்டலைபவள், அவற்றை ஆயுதமாக்கி அதிகாரத்தை நோக்கி இடிமுழக்கமும் இடுகிறாள். ஒரு பார்வைக்கஞ்சும் சிறுபெண்ணாகவும், ஆங்காரங்கொண்டாடும் வனப்பேச்சியாகவும் இருவேறு இயல்பை ஒன்றாய்க் கொண்டவளாய் இருக்கிறாள் அணங்கானவள். பர்தாவுக்குள் உடம்பை குறுக்கிக் கொண்டு கண்மூடிய நிலையிலும் கல்விக்காக அலைமோதுகிறாள். நெல்குத்தும் உலக்கையின் ஒலி அதிர அதிர பூமியைப் பிளக்கும் ஆவேசங்கொண்டவளாய் அடுக்குமுறையை அடிபணிய வைக்கிறாள். ஒவ்வொரு வன்கொடுமையின் போதும் தன் சுயத்தை காத்துக் கொள்ளப் போராடும் அவள், மாரிலடித்துக் கொள்கிறாள், உழன்று தவிக்கிறாள், விடுவித்துக் கொள்ளத் துடிக்கிறாள், இறுதியில் ஒவ்வொரு முறையும் தன்னைத் தானே பலிகொடுத்தே மாண்டு போகிறாள். அவள் கண்ணீரில் வடிந்த உப்பு நீர் உலகை ஆட்கொள்கிறது.

இன்று கொடுங்கோலர்களிடமிருந்து மட்டுமல்ல, வீட்டிற்குள்ளே ஒன்றும் வெளியே ஒன்றும் பேசித்திரியும் பெண்ணியவாதிகளிடமிருந்தும், சர்பமாய்த் தீண்டக் காத்திருக்கும் கலாச்சார காவலர்களிடமிருந்தும் தன்னை மீட்டுக் கொள்ள பெண் போராட வேண்டியிருக்கிறது. நிர்கதியாய் நடுரோட்டில் கிடந்த ஒருத்தியை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சமுதாயம் தான் இன்று அவள் சாவிற்கு மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டிருக்கிறது. சமுதாய அக்கறைக்காக பாடுபடுவதாக சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் ”சிறப்புப்பார்வை”க்கு நடுவில் பெண்ணுடலைத் தான் விற்றுக் கொண்டிருக்கின்றன. அவை பெண்ணை உபயோகித்து விட்டு தூக்கி எறியும் ஒரு பண்டமாக காட்டிக் கொண்டே, பெண்ணுரிமையைப் போற்றி சிறப்புக் கட்டணத்தில் குறுஞ்செய்திகள் அனுப்ப அழைப்பு விடுக்கின்றன. அரசாங்கமும், அதிகாரமும் புரையோடிப் போயிருக்கும் புண்ணுக்கு புணுகு பூசும் வேலையைத் தான் காலம்காலமாக செய்து கொண்டிருக்கின்றன.

”மணல்மகுடி” குழுவினர் நடத்திய சூர்ப்பணங்கு நாடகம் மதுரை டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவியர் முன்னே நிகழ்த்தப்பட்டது. கோவில்பட்டி ச.முருகபூபதியின் இயக்கத்தில் நடைபெற்ற இந்த நாடகத்தில் நடித்த இளைஞர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து நடித்திருந்தனர். தேர்ந்த கலைஞனுக்கான நேர்த்தியுடனும், தெளிவான உச்சரிப்புடனும், கணீர் குரல் வளத்துடனும் நூறு சதவீத ஈடுபாட்டுடன் களப்பணியாற்றினர். அமைக்கப்பட்ட மேடை கூட இல்லை, சிறு கற்கள் குத்தும் செம்மண் தரையில் தான் நாடகம் நடந்தேறியது. ஆனாலும் நடித்தவர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. அருள் வந்து ஆவேசங்கொண்டாடுபவர்களைப் போல அர்பணிப்புடனும், முழு ஈடுபாட்டுடனும் தம்மை முழுமையாக சூர்ப்பணங்கிற்கு ஒப்புக் கொடுத்து விட்டது போலிருந்தது. ஒலியமைப்பும், இசையும், வெளிச்ச வடிவமும் நாடகத்துக்கான நிஜத் தன்மையை அதிகரித்தன.

நாடகக்குழுவினர் சொல்ல வந்த கரு அங்கு கூடியிருந்த மாணவியர்களுக்கு முழுமையாய் சென்று சேர்ந்தது என்பதற்கு நாடகம் முடிந்தவுடன் எரிமலை போல் வெடித்துக் கிளம்பிய அந்த பெண்களின் ஆவேசம் கொண்ட கைத்தட்டல்ள் மட்டும் தான் தற்பொழுதைக்குள்ள ஒரே சாட்சி. ஆனாலும் விதைகள் விழுந்திருக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது.

உதவி: 
http://nesamithran.blogspot.in/2011/12/blog-post.html
http://tamizharivu.wordpress.com/2011/10/07/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/
http://livingsmile.blogspot.in/2011/06/blog-post_28.html
******

வி.பாலகுமார்.

Wednesday 9 January 2013

வாசிப்போர்களம்-9


தோழர்களே!

இந்தப் புதிய ஆண்டின் (2013) முதல் கூட்டம் வருகிற 12/01/13 ந் தேதி  மாலை 04-30 மணிக்கு நமது வழக்கமான இடத்தில் கூடுகிறது. தோழர்கள். பாலகுமாரும், சுந்தரராஜனும் நல்ல நூல்களை அறிமுகம் செய்ய இசைந்துள்ளார்கள். இந்த ஆண்டில் நமது வாசிப்போர்களத்தை விரிவுபடுத்தும் விதமாக புதிய தோழர்களை இணைக்கும் முயற்சியில் நமது உறுப்பினர்கள் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.    

Sunday 6 January 2013

வரலாற்றுப் பதிவுகளில் திரிபுகள்-2


" இறைவனின் சித்தத்தால் இந்தியா எதிர்காலத்தில் பற்றாக்குறையுள்ள , எதிர்கால நம்பிக்கையற்ற , மனநிறைவற்ற நாடாக இருக்காது. மாறாக தொழில் துறையில் முன்னேற்றமடைந்த நாடுகளில் ஒன்றாக , எழுச்சிபெற்ற, திறமை படைத்த , செல்வம் செழித்தோங்கிய , வளமும் , வசதியும் மூளைமுடுக்கெல்லாம் பரவிய ஒரு நாடாக எதிர்காலத்தில் திகழும்"
----டெல்லி அரசவை கூட்டத்தில் பேசப்பட்ட செய்தி.

இப்படி தேசப்பற்றுடன் பேசியவர் ஒரு இந்திய அரசியல் தலைவராக இருப்பார் என்று நீங்கள் நினைத்திருந்தால் நிச்சயம் ஏமாந்துபோவீர்கள். ஆமாம்! மேற்கண்ட வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் மற்றும் கவர்னர் ஜெனரல் கர்சான் பிரபு.  இது கி.பி.1903 ஆம் ஆண்டு டெல்லி அரசவைக் கூட்டத்தில் கர்சான் நிகழ்த்திய உரையே! 

மேற்கண்ட பகுதியை நான் வாசித்தது இந்திய வரலாற்றில் பகவத்கீதைஎன்ற நூலில் தான். அதை எழுதியவர் பிரேம்நாத் பசாஸ், தமிழ் வடிவம் கொடுத்தவர் கே.சுப்ரமணியன்.  இந்நூலின் 29 அத்தியாயத்தில் , இந்தியாவின் பொற்காலம் என்று குறிப்பிட்டால் அது ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலமே என்று பதிவு செய்துள்ளார். அதற்கு அவர் கொடுத்திருக்கும் காரணங்களும் எனக்குத் சரியாவே தோன்றுகிறது.   
            
பொதுவாக மனிதகுல வாழ்வையும் உலக வரலாற்றையும்  குறிப்பாக நம் நாட்டின் வரலாற்றை கற்பதில் எனக்கு எப்போதும் தணியாத ஆர்வம் உண்டு.. இளம் வயதில் பள்ளியில்  "குப்தர்களின் காலம் இந்தியாவின் பொற்காலம்" என்றும், ஆங்கிலயர்கள் இந்தியாவை அடிமைபடுத்தி நம்மை அடிமைகளாக வைத்திருந்தனர், அவர்களது பிரித்து ஆளும் சூழ்ச்சியினால் தான் நமது ஒற்றுமை சிதைந்து நாம் அவர்களுக்கு அடிமைகளாக 300 ஆண்டுகள் இருந்தோம் என்றும் சொல்லிக் கொடுத்த போது அவைகளை அப்படியே நம்பினேன். ஆனால், இந்திய வரலாறு சரியான வகையில் எழுதப்படவில்லை என்பதை புரிந்து கொள்வதற்கு எனக்கு பல ஆண்டுகள் தேவைப் பட்டது. எந்த ஆங்கில ஆட்சியின் மீது எனக்குள் கோபமும் வெறுப்பும் திணிக்கப்பட்டதோ  அவர்களே இந்தியாவை ஒருங்கிணைத்தவர்கள் என்றும், பல ஆங்கிலேய அதிகாரிகள் நம் நாட்டையும்,மக்களையும் நேசித்துள்ளார்கள் என்று அறியும் போது மனதிற்குள் நெகிழ்வும் அவர்கள் மீது மரியாதையும் ஏற்பட்டது.

அதிலும் , கர்சான் காலத்தில் தான் ( கி.பி. 1899-1905) இந்தியாவின் வரவு செலவு திட்டம் (BUDGET )  உபரியாக இருந்தது. அதன் விபரம் இதோ;

கி.பி 1898-99     ரூ,1.30 கோடி உபரி.
கி.பி 1900-91     ரூ,1.50 கோடி உபரி.
கி.பி 1902-93     ரூ,4.50 கோடி உபரி.

{இதற்குப் பிறகு , இந்தியாவின் வரவு செலவு திட்டம் உபரியாக இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.அதுவும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பற்றாக்குறை பட்ஜெட்டைப் பார்த்து எனக்குப் பழகிப் போய்விட்டது. உபரி பட்ஜெட் என்பது இந்தியாவில் இனி இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது}

இவற்றைத் தவிர, கல்வித்திட்டம் சட்டஆணையம், போக்குவரத்து மற்றும் "சதி" என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்தது போன்றவை நடந்தேறியது இந்தக்காலக் கட்டத்தில் தான். அதனால் , இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று உண்டு என்றால் அது பௌத்தர்கள் கூறிவது போல் மௌரியர் காலமும் அல்ல, இந்துக்கள் கூறுவது போல் குப்தர்கள் காலமும் அல்ல, இஸ்லாமியர்கள் கூறுவது போல் முகலாயர்கள் காலமும் அல்ல. மாறாக 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார் காலமே என்று பிரேம்நாத் பசாஸ் எழுதிருப்பதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

(“இந்திய வரலாற்றில் பகவத்கீதை விடியல் பதிப்பகம் . விலை. ரூ.350/-
எழுதியவர் பிரேம்நாத் பசாஸ், தமிழ் வடிவம் கொடுத்தவர் கே.சுப்ரமணியன்.  பதிப்பு-2006
பக்கங்கள்-950)
---சு.கருப்பையா.

Friday 4 January 2013

வரலாற்றுப் பதிவுகளில் திரிபுகள்!


சில சமயம் நல்ல எழுத்தாளர்கள் கூட நமக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.  அப்படி ஒரு செய்தி தான் இது. சமீபத்தில் நியூ செஞ்சுரியின்   சிறுநூல் வரிசையில் வந்த பிரபல எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் " பகவான் புத்தர்" என்ற சிறு படைப்பை வாசித்தேன். அதில் சித்தார்த்தன் கி.மு.623 இல் பிறந்தார் (பக்கம் -7) எனவும் , கி.மு. .542 இல் சுந்தன் என்ற கொல்லர் வீட்டில் பன்றி மாசிச உணவு உண்டு அவர் இறந்தார் (பக்கம்-14) எனவும் பதிவு செய்திருந்தார். இதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு சிறிது நெருடல் ஏற்பட்டது.

காரணம் , திரு.பிரேம்நாத் பசாஸ் எழுதிய " இந்திய வரலாற்றில் பகவத்கீதை" (விடியல் பதிப்பகம்) என்ற சிறப்பான நூலில், புத்தர் கி.மு.543 இல் பிறந்தார் (பக்கம் -154) எனவும், கி.மு. .483 இல் சுந்தன் என்ற கருமான்   வீட்டில் காளான் உணவு உண்டு அதனால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவர் இறந்தார் (பக்கம்-163) எனவும் பதிவு செய்திருந்தார்.  இது மிகச் சிறந்த ஆய்வுநூல், இந்நூல் பற்றி விபரமாக பின்னர் எழுதுகிறேன்.

சரி! வலைத்தளங்கள் என்ன பதிவு செய்திருக்கின்றன என்று பார்க்கலாம் என்று  தேடினால்  http://www.humanjourney.us/buddhism2.html  எனக்கு மேலும் குழப்பம் ஏற்பட்டது. ஆம்! இங்கே கொடுப்பட்டுள்ள வலைத்தளத்தில் புத்தரின் காலம் கி.மு.490-410  என பதிவு செய்து இருந்தார்கள்!
அடுத்து விக்கி பீடியாவிற்கு ஓடினேன். விபரம் இதோ;
புத்தர் பிறப்பு: கி.மு.563;
புத்தர் இறப்பு: கி.மு.483 அல்லது கி.மு.411-400.

ஆனால் எல்லோரும்,  புத்தர் 80 வயதில் இறந்தார் என்று மட்டும் தெளிவாக பதிவு செய்திருந்தனர். இதில்  புத்தரின் மறைவில் விக்கி பீடியாவின் கருத்து சற்று  வித்தியாசமாகவும்   கொஞ்சம் நம்புமாறும் இருக்கிறது! அதாவது புத்தரின் இறப்பு காளான் உணவினால் என்று "சைவ" உணவு உண்பவரும், பன்றிக்கறி உணவினால்  என்று  அசைவ உணவு உண்பவர்களும் பதிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் அவர் முதுமைபருவத்தின் காரணமாகவே இயற்கை எய்தினார் என குறிப்பிட்டுள்ளது.    

இந்திய வரலாற்று சுவட்டில் , நம் நாடு பெற்றெடுத்த மிகச்சிறந்த மனிதனின் வரலாற்றைக்கூட சரியாக பதிவு செய்யாதது மிகவும் வேதனையாக இருக்கிறது.  புத்தரின் உண்மையான காலத்தை  யாரவது கூறுங்களேன் !

----சு.கருப்பையா.