Wednesday 18 July 2012

கணவனிடம் மணைவி எதிர்பார்ப்பது என்ன?;வால்மார்ட் (வெற்றிக்கொடி கட்டு);அரசியல் எனக்குப் பிடிக்கும்.


இன்று , 14 /07 /2012  ந் தேதி நடைபெற்ற வாசிப்போர்களம் மூன்றில் தோழர்கள். G.பாலசுப்ரமணியன், J . பாலசுப்ரமணியன் மற்றும் G . சுந்தரராஜன் ஆகியோர்களால் மூன்று புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. 
நூல்-1


நூல்           : கணவனிடம் மணைவி எதிர்பார்ப்பது என்ன?
ஆசிரியர்             : ஜானகி சரவணன்
பக்கம்            : 156
விலை             : ரூ. 130
பதிப்பகம்              : பிளாக்கோள் மீடியா பப்ளிகேசன் லிமிடெட் .
அறிமுகம்              : G.பாலசுப்ரமணியன்



"நான் குழப்பமாக இருந்த நேரத்தில் இந்தப்புத்தகம் எனக்கு தெளிவான பாதையை காட்டியது"

இப்படிதான் இந்த நூலின் அறிமுகத்தைத் துவக்கினார் பாலா. உண்மையிலே இது இந்தநூலின் ஆசிரியருக்கு கிடைத்த மாபெரும் வெற்றியே!. 

முன்னுரையில்,  "கேட்கப்படாத மெல்லிசை-பெண்களின் எதிர்பார்ப்பு " என்று நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளதில் ஆரம்பித்து கணவன் மணைவி உறவுக்குள் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை மிகவும் எதார்த்தமாக விளக்கி உள்ளதை நயமாக எடுத்துரைத்தார் பாலா. அவற்றில் சில;

ஊடல் எதனால் ஏற்படுகிறது

·         கோபம்-இயலாமை
·         பாதுகாப்பற்ற உணர்வு
·         பொறுமையின்மை
·         குழந்தை வளர்ப்பு

கணவன்- மணைவி பிரச்சனைக்கு என்ன காரணம்?

·         நானே மேல் என்ற உணர்வு
·         பெண்கள் தங்கள் கணவர்களிடம் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளப் பயப்படுவது
·         இருவரும் வேலைக்குச் செல்லுதல் - வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளாதது
·         மனைவியின் கருத்துகளுக்கோ , உணர்வுகளுக்கோ மதிப்பு கொடுக்காமல் இருத்தல்.
·         தனிமையின்மை-கூட்டுக்குடும்பம் -தனித்து செயல் படமுடியாதது
·         உறவினர்களால் உண்டாகும் சிக்கல்கள்.
·         தனிப்பட்ட கருத்துக்கள், விருப்பு வெறுப்புகள், தனித்துவங்கள்   

மேற்கண்ட பிரச்சனைகள் கவனிக்கப்படாமல் முற்றும்போது மணமுறிவிற்கு வழி வகுக்கிறது

மேலும் நூலின் ஆசிரியர் ஒரு பெண் என்பதால், பெண்களின் மனவோட்டத்தில் தோன்றும் பல நுணுக்கமான உணர்வுகளை பதிவு செய்துள்ளார். நல்ல தாம்பத்தியத்திற்கு கீழ் காணும் குணாதிசியங்கள் அவசியம் என்கிறார்;

·         மனைவியின் மனதில் நம்பிக்கையை விதைப்பது
·         கலந்து ஆலோசிப்பது
·         ஊக்கப்படுத்துதல்
·         இனிய தாம்பத்தியம்
·         கள்ள உறவு இல்லாமை

இதுபோன்ற பண்புகளே இல்லறம் சிறக்க தேவையானவை என்று குறிப்பிடுகிறார். மேலும் வளமான இல்லற வாழ்விற்கு கீழ்காணும் பத்து முத்துக்களை கொடுத்துள்ளார்;
·         என்றைக்கும் மாறாத காதல்
·         அனுசரணை
·         ஒளிவு மறைவு இல்லாத குணம்
·         நம்பிக்கை
·         பாதுகாப்பு
·         அவரவர் கருத்துக்களுக்கும்,உணர்வுகளுக்கும் மதிப்பளித்தல்
·         அவரவர் இயல்புகளை ஏற்றுக்கொள்ளுதல்
·         ஊக்கப்படுத்துதல்
·         பிரச்சனைகளில் வீண் பழி சுமத்தாமல் சரியான வழியில் அணுகுதல்
·         புகை, மது, போதை, பிறன் மனை தீண்டாமை


இத்தகைய குணயியல்புகளுடன் ஒரு தம்பதியர் வாழ்ந்துவந்தால் உண்மையிலே அக்குடும்பம் சந்தோசமானது தான். இந்த நூல் புரியாத பல புதிர்களை அவிழ்த்து விடவில்லை என்றாலும் சற்று யோசிக்க வைக்கும் என்பது உண்மையே.


நூல்-2

 
நூல்          : வால்மார்ட் (வெற்றிக்கொடி கட்டு)
ஆசிரியர்          : எஸ்.எல்.வி. மூர்த்தி 
பக்கம்           : 144
விலை           : ரூ. 70
பதிப்பகம்         : கிழக்குப் பதிப்பகம்
அறிமுகம்           : J . பாலசுப்ரமணியன்




சாம் வால்ட்டன் 
தோற்றம்  : 19/03/1918
மறைவு    : 05/04/1992


சாம் வால்ட்டன் , உலகக் கோடீஸ்வரன். உலகம் முழுவதும் கொடிகட்டிப் பறக்கும் " வால்மார்ட்" நிறுவனத்தின் நிறுவனத்தலைவர். இந்த  நிறுவனத்தின்  ஆண்டு வருமானம்    2028000 கோடி ரூபாய். இலாபம் 67000 கோடி ருபாய். அதாவது இந்திய பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்ஐ  விட ஐந்து மடங்கு இலாபம் ஈட்டும் நிறுவனம்(139200-19458 கோடி ). இந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 7955 கடைகள் இருக்கிறது. இப்படி சுருக்கமாக கூறிவிடலாம். ஆனால் அதற்கு பின்னே இருக்கும் சாம் வால்ட்டோனின் உழைப்பை எளிதாகக் கூறி விட முடியாது.

ஜூலை 2, 1962 , உலக வர்த்தக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப் படவேண்டிய நாள். அன்று தான் அமெரிக்க நாட்டில் , அர்க்கன்சாஸ் மாநிலத்தில் ரோஜெர்ஸ் நகரத்தில் முதல் வால்மார்ட் கடை திறக்கப்பட்டது.  அதன் அருகே சிறியதாக இரண்டு விளம்பரப்பலகை . ஒன்று,  "நாங்கள் குறைந்த விலைக்கு விற்கிறோம்", மற்றொண்டு, " திருப்தி உத்தரவாதம்" ஆம், அன்றைய சந்தை விலையில் இருபது சதவீதம் குறைத்துக் கொடுத்தால் வரவேற்ப்பு இல்லாமல் போய்விடுமா? அன்று முதல் இன்று வரை வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கிறது வால்மார்ட் நிறுவனம். அதை விளக்குவதே இந்தப் புத்தகம். சாம் வால்ட்டன் என்ற  திறமையான, கடும் உழைப்பாளியின் வெற்றியே இந்த "வால்மார்ட்" என்பதும் , அவர் கடந்து வந்த தடைகளையும் , போராட்டங்களையும் மிக அழகாகப் பதிவு செய்துள்ளார் மூர்த்தி. குறிப்பாக , சாம் வால்ட்டன் கையாண்ட பத்து வெற்றிக் கட்டளைகளை மிக அழகாகக் கொடுத்துள்ளார். அவையாவன;

1.        உங்கள் வியாபாரத்தை நம்புங்கள்
2.        இலாபத்தை உங்கள் ஊழியர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் . ஊழியர்களை உங்கள் பங்காளிகளாக நடத்துங்கள்.
3.        உழியர்களுக்கு ஊக்கம் கொடுங்கள்
4.        ஊழியர்களோடு எல்லாத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
5.        ஊழியர்களின் செயல்பாடுகளைப் பாராட்டுங்கள்
6.        வெற்றிகளைக் கொண்டாடுங்கள்
7.        ஊழியர்களைப் பேச விடுங்கள் . அதனை பேரின் குரல்களுக்கும் செவி கொடுங்கள்
8.        வாடிக்கையாளர்களின் கடை அனுபவங்கள் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை மிஞ்சட்டும்
9.        போட்டியாளர்களைவிடத் திறமையாகக் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள் .
10.     எதிர்நீச்சல் போடுங்கள்.


இப்படி நல்லதொரு தேர்ந்த வியாபாரியாக இருந்த சாம் வால்ட்டன்,   சமூகப் பொறுப்புடன் லத்தின் அமெரிக்க நாடுகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி பயில பண உதவி செய்யத் தவறவில்லை என்பதையும் பதிவு செய்துள்ளார் மூர்த்தி.  அதே சமயத்தில் வால்மார்ட் நிறுவனத்தில் நடைபெறும் , வேலைநேரம், பதவி உயர்வு, சங்கம் அமைப்பது போன்ற சில   தொழிலாளர் விரோத போக்குகளையும் அவர் சுட்டிகடியுள்ளார். மொத்தத்தில் இந்த புத்தகம் வியாபாரத்தில் பணம் நிறைய சம்பாதிக்க விரும்புபவர்களுக்கு பொருத்தமானது. ஆனாலும் அவரது பத்துக் கட்டளைகளையும் BSNL நடைமுறை படுத்தினால் ஒரு வேளைவெற்றி பெறுமோ என்றும் தோன்றுகிறது. 

 
நூல்-3


நூல்           : அரசியல் எனக்குப் பிடிக்கும்
ஆசிரியர்             : ச.தமிழ்ச்செல்வன்
பக்கம்            : 48
விலை              : ரூ. 10
பதிப்பகம்               : பாரதி புத்தகாலயம்
அறிமுகம்               : G . சுந்தரராஜன்


இந்த புத்தகம் நிச்சயம் இளைஞர்களை யோசிக்க வைக்கும். அரசு, அரசியல், அரசாங்கம் போன்றவற்றை எளிய நடையில் கலந்துரையாடல் பாணியில் பத்து அத்தியாயங்களில் தமிழ்ச்செல்வன் விளக்கி உள்ளார் .

அரசு என்றால் 1. நிர்வாகம், 2. இராணுவம், போலீஸ், சிறைச்சாலை 3. நீதிமன்றம் 4. பாராளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றை கவனிப்பதும் ,

அரசியல் என்றால் இரண்டு அரசியல் தான் உள்ளது ; அவை 1. இடதுசாரி அரசியல் 2. வலதுசாரி அரசியல் எனவும்,

அரசாங்கம் என்றால் என்ன ? அது மக்களை எப்படி கவனித்துக்கொள்கிறது அல்லது எப்படி ஏமாற்றுகிறது என்று மிக எளிமையாக புரியும் வண்ணம் எழுதியுள்ளார் தமிழ்ச்செல்வன்.


அரசியலே சாக்கடை . நல்லவர்கள் அரசியலில் ஈடுபடமாட்டார்கள். வசதியிருந்தால் தான் அரசியலில் ஈடுபட முடியும் . அரசியலில் எல்லா அசிங்கங்களும் சகஜம். யாராலும் அரசியலை சுத்தப்படுத்த முடியாது  என்று சொல்லியே ஏழை,எளிய மக்களை அரசியலிலிருந்து விலக்கி வைத்து அரசியல் அற்றவர்களாக மாற்றும் திட்டமிட்ட முயற்சி தான் இந்த வாதங்கள் என்பதை எளிமையாகவும், ஆணித்தரமாகவும் நிறுவுகிறது இந்தப் புத்தகம். கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று. இளைஞர்களே ! இந்தப் புத்தகம் உங்களுக்காகத்தான்!.

Friday 13 July 2012

சந்திப்பு

தோழர்களே ! நாளை 14 /07 /2012  மலை 04.30 மணிக்கு நாம் சந்திக்க இருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். புதிய தோழர்கள் சிலர் வர இருக்கிறார்கள். இளம் தோழர்கள் .J .பாலு  மற்றும் G .பாலா புதிய நூல்களை அறிமுகப் படுத்துகிறார்கள். நாளை சந்திப்போம்.