Thursday 14 May 2015

வாசிப்போர் களம் கூட்டம் - 08/05/2015

வாசிப்போர் களம் அமைப்பின் இந்த மாத கூட்டம், கடந்த வெள்ளியன்று (08/05/2015) மாலை நடைபெற்றது. தோழர் கருப்பையா அவர்கள், இராமாயணத்திலுள்ள பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பான “மீட்சி” புத்தகத்தையும், தோழர் சங்கையா அவர்கள் ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய “ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்” மொழிபெயர்ப்பு புத்தகத்தையும் உறுப்பினர்களிடம் அறிமுகம் செய்து வைத்து பேசினார்கள். சுருக்கமாகவும், அதே நேரம் புத்தகத்தை வாசிக்கத் தூண்டும் வகையிலும் சுவாரஸ்யமாக அமைந்திருந்தது இருவரின் உரையும். தோழர்களுக்கு வாழ்த்துகள் !. 

மேலும் கூட்டத்தில் நடந்த விவாதத்தில், திருமலை நாயக்கர் மன்னர் ஆட்சிக்காலத்தில் சித்திரை மாதத்தில் மதுரையில் சித்திரைத்திருவிழா எவ்வாறு பெருநிகழ்வாக உருப்பெற்றது என்ற தகவல்  பரிமாற்றம் சுவையானதாக இருந்தது. மதுரை மாநகரிலுள்ள மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு பிரபலப்படுத்தப்பட்டது தான் “அழகர் ஆற்றில் இறங்கும் விழா”. சுற்று வட்டாரத்திலிருக்கும் கிராம மக்கள் வண்டி கட்டிக் கொண்டு மதுரைக்கு வந்து, சில நாட்கள் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்து செல்வது சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சம். பலர் அழகர் கோவிலில் இருந்து அழகர் கிளம்பி, வைகை ஆற்றில் இருங்கி, பின் திரும்பி அழகர் கோவிலுக்கு செல்வது வரை சாமி கூடவே பயணம் செய்த பின்னே தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவர். அந்த நேரங்களில் மதுரை நகரம், சுற்றியுள்ள ஊர்களுக்கு மிகப்பெரிய வியாபார ஸ்தலமாக இருக்கும். முதலில் தேணூர் கிராமத்தில் தை மாதத்தில் தான் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெற்றது. திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தான் அந்த நிகழ்வை, விவசாயிகள் ஓய்வாக இருக்கும் சித்திரை மாதத்தில், சுற்றியுள்ள ஊர்களில் இருந்து மக்கள் வந்து செல்ல வசதியான பெரிய ஊரான மதுரையில் “சித்திரைத் திருவிழாவாக” மாற்றி அமைத்துள்ளனர். இன்றும் சித்திரைத் திருவிழா என்பது மதுரை மக்களுக்கு ஒரு விழா மட்டுமல்ல, மிகப்பெரிய உள்ளூர் வர்த்தகத்துக்கான தளம்.  

வாசிப்போர் களம் சார்பாக வெளியிடப்பட்ட முதல் நூலான, தோழர் சங்கையா எழுதிய “இலண்டன், ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” நூலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்திருப்பது குறித்த மகிழ்ச்சியையும் நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள். மேலும் புனைவு சார்ந்த நூல்கள் மட்டுமல்லாது அறிவியல், சட்டம், பொது அறிவு தொடர்பான நூல்களைய் பற்றிய விவாதங்களையும் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. வாசிக்கும் பழக்கத்தை பரவலாக்க “வாசிப்போர் களம்” மூலமாக இன்னும் சீரிய முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. விரைவில், வாசிப்போர் களம் அமைப்பை பதிவு செய்வது குறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதுடன் கூட்டம் நிறைவு பெற்றது.


-- வாசிப்போர் களம் சார்பாக வி.பாலகுமார்

Monday 4 May 2015

கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள் !



பிறப்பு: 05-05-1818
இறப்பு: 14-03-1883