Wednesday 6 November 2019

நூல் மதிப்புரை: அக விடுதலையே பெண் விடுதலை.


ஆசிரியர்: முனைவர் .நா.நளினிதேவி
பக்கங்கள்: 114
வெளியீடு : கைத்தடி பதிப்பகம்
வருடம்: ஜூலை-2019
விலை: ரூ.110/-
தொடர்பு: தொலைபேசி:044-48579357;
               கைபேசி: +919566274503








முனைவர் . நா. நளினிதேவி அவர்கள்  இந்த நூலின் மூலம் பெண்ணின் உரிமைகள்  மற்றும் விடுதலையைப்  பற்றி  தந்தை பெரியாரின் வழியில்     சற்று விரிவாக பதிவு செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அவர் விவாதத்திற்கு உட்படுத்தியிருக்கும் முக்கியமான கருப்பொருள்கள்;


Ø  ஆண் ஆதிக்கத்தால் பூட்டப்பட்ட பெண்களின் அகஉணர்வு கட்டுகளையும் , தளைகளையும் தகர்த்தெறிதல் வேண்டும்.
Ø  கல்வி கற்றால் தான் பெண் விடுதலை பெற முடியும்.
Ø  மரபு  வழியாக வரும் அகச்சிக்கலும் , புறச்சிக்கலும்  பெண்களைப் பாதிக்கிறது ; உதாரணமாக பெண்களுக்கு மட்டுமே உரிய " கற்பு"  மற்றும் குடும்பப்பொறுப்புகள்.
Ø  தடை செய்யப்பட்ட உறவு மற்றும் நட்பு.
Ø  பாலியியல் சுதந்திரமின்மை: கற்பு என்ற கற்பனைப் பொருளுக்குள் அடைத்து வைத்தல்..
Ø  பெண்களை பாலியியல் சின்னமாகப் பார்ப்பது.
Ø  பெண்களுக்கு எதிரான இலக்கியங்களும் , புராணங்களும்,
Ø  பெண்களுக்கு ஆதரவான படைப்புகள்.
Ø  பெண்களின் மீதான பாலியியல் அடக்குமுறை.
Ø  பெண்விடுதலையும் பாலியியல் தளையும்.
Ø  கற்பும் தளையும்.
Ø  காதலும் , திருமணமும்.
Ø  தடைகளை உடைத்தெறிந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும்; அதற்கு அகவிடுதலை தேவை,

மேற்கண்ட கருத்துக்களை மிக ஆழமாக ஆராய்ந்து, எப்படியெல்லாம் பெண்கள் அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று  தெளிவாக வாதிடுகிறார் முனைவர். நா.நளினிதேவி.

குறிப்பாக, பெண்களுக்கு கல்வி, திருமணம், பாலியியல் உணர்வு போன்றவற்றில் கட்டவிழ்க்கப்பட்ட சுதந்திரம் வேண்டும் என்று நியாயம் கேட்க்கிறார். கற்பு என்ற கற்பனையான கருத்தை பெண்களுக்கு மட்டுமே கொடுத்துவிட்டு , ஆண்கள் பல திருமணங்கள் செய்து கொள்வதும் அல்லது பல பெண்களுடன் உறவு கொள்வதும் எந்தவிதத்தில் நியாயம் என்ற கேள்வியையும் எழுப்புகிறார். இவர் எழுப்பும் வாதங்களுக்கும் , கேள்விகளுக்கும் இந்திய சமூகத்தில் தீர்வு கிடைக்குமா? , ஆண்களுக்கு இணையாக பெண்கள் சுதந்திரமாக செயல்பட  முடியுமா ? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

இப்பிரச்னைகளை உலக வரலாற்றோடு பொருத்திப் பார்க்கும் போது , நமக்கு பல உண்மைகள் தெரிய வரும்.

முதலில் தாய்வழிச் சமூகமாக இருந்த மக்கள் கூட்டம் , தந்தைவழிச் சமூகமாக தோற்றமெடுத்து , குடும்பம் , தனிச்சொத்து என்று மாறிய பிறகு நிலப்பிரபுத்துவக்கூட்டமும் , அடிமைச்சாதியினரும் தோன்றுகிறார்கள். அது தான் பெண்களை தங்களுடைய உடைமைப் பொருளாகவும் , அடிமையாகவும் கருதத் துவங்கிய காலம். இந்த சூழலில் , ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியக்கூட்டம் பெண்களை அடிமையாகவே கருதினர்; நடத்தினர். அவர்களை சூத்திரர்களுக்கு இணையாக வைத்து தீண்ட தகாதவர்களாகவே பார்த்தார்கள்   .  அவர்கள் உருவாக்கிய வேதங்களில் இருந்து தோன்றிய வர்ணாசிரமக் கோட்பாடு தான் இன்று வரை இந்திய மக்களை ஆட்சி செய்கிறது. அதுவே மக்களை சாதி , இன ரீதியாக பிரித்து வைத்திருக்கிறது. தனக்கு பிறக்கும் குழந்தைகளுக்கே  சொத்து என்ற கொள்கையை அது கொண்டிருக்கிறது. அதுவே, பெண்களையும் தனக்குரிய சொத்தாக பாவிக்கத் தூண்டியது . பெண்களை தனக்குரிய போகப் பொருளாகவும் , தன்னுடைய  சந்ததியைக் கொடுக்கும் ஒரு கருவியாகவும் பார்த்தது. அவளுக்கு கல்வி போதிக்கப்படவில்லை ; விரும்பிய ஆண்மகனை திருமணம் செய்து கொள்ளமுடியாது; கணவனைத் தவிர பிற ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. கற்பு அங்கே போதிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. அதாவது , பெண்களின் யோனி அவளது  கணவனுக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலை உருவானது!. இதுவே  பெண் அடிமையான வரலாற்றின் ஒரு பகுதியாகும்.   அப்படிப்பட்ட அடக்கு முறையே  இன்றும் பெண்களின் மீது தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது .  இப்படிப்பட்ட ஆணாதிக்க சமூகம் பெண்களின் அக  உணர்வுக்கு எப்படி செவி சாய்க்க முடியும் ? .

ஒரு மனிதனின் பசி, தாக்கம், உறக்கம் போல் பாலியியல் உணர்வும் தனிமனிதன் சம்பந்தப்பட்டது , அதில் தலையிட மற்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்கிறார் தந்தை பெரியார். அக்கருத்தையே முன்னிறுத்துகிறார் முனைவர்.நளினிதேவி . தனது காமஇச்சையை தனித்துக் கொள்ள பிற பெண்களுடன் உறவு கொள்ளும் பாலியியல் சுதந்திரம் ஆண்களுக்கு இருக்கும் போது , பெண்களுக்கு மட்டும்  ஏன் இருக்கக்கூடாது ? என்ற ஆசிரியரின் கேள்வியில் நியாயம் தெரிகிறது.  ஆனாலும்  தனது மனைவியை பிற ஆண்களுடன் பகிர்ந்து கொள்ளவும் , அவளுக்குப் பிடித்தவனோடு உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கவும் தேவையான பரந்த மனப்பான்மை இன்று வரை எந்த ஆணுக்கும் இருக்கவில்லை.   ஒரு பெண் பிறந்ததிலிருந்து தந்தை, சகோதரன்  பிறகு மகன் என்று அனைவருக்கும் அடிமையாக வாழும் சூழலே இன்றும் நிலவுகிறது. அவளால் சுதந்திரமாக செயல் பட இயலாது (சில விதி விலக்குகள் உண்டு). ஏன் இந்த இழி நிலை?.

இதற்கெல்லாம் அடிப்படை காரணமாக இருப்பது சாதியும் , சொத்தும் தான். இந்தச் சமூகம் பெண்களை தங்கள் சாதியின் குறியீடாகவே பார்க்கிறது . அதில் கலப்பு ஏற்பட ஆதிக்கசாதி மனநிலை அனுமதிப்பதில்லை. கலப்பு மணத்தால் தனது சாதிக்கும் , சொத்திற்கும் இழப்பு வரும் என்ற காரணத்தாலேயே பெண்களையும் , அவர்களின் உணர்வையும் உரிமைகளையும் அடித்து நொறுக்கி கூண்டிலேயே பூட்டி வைத்திருக்கிறார்கள். இந்தப் பூட்டை உடைத்து வெளியேறுவது பெண்களின் கைகளில் தான் இருக்கிறது.  அதற்கு இந்திய குடும்ப அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு , பெண்களுக்கு முழுச்சுதந்திரமும் , அதிகாரமும் கிடைக்க வேண்டும் .  பெண்கள் தங்களின் விடுதலையை கேட்டுப் பெறுவதை விட எடுத்துக் கொள்வது தான் சிறந்தது. அதற்கு இந்த நூல் உந்து சக்தியாக இருக்கும் என்று கருதுகிறேன். ஐயா கி.வீரமணி அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டவாறு , இந்நூல் பெண்கள் மத்தியில் பெரும் பாய்ச்சலோடு பரவ வேண்டும் என்பதையே நானும் விரும்புகிறேன்.

இருந்தாலும் இந்து மதம் இருக்கும் வரை சாதியையும் , பெண்ணடிமைத்தனத்தையும் களைந்து , பெண்கள் அகவிடுதலை பெறுவது   என்பது மிகவும் கடினம்  என்றே எனக்குத் தோன்றுகிறது. 







இறுதியாக ,  இந்த நூலை எளிமையான  தமிழில் தெளிவாக எழுதியதற்கும் , ஆழமான கருத்துக்களை உள்ளடக்கிய அழகிய ஓவியங்களையும், படத்தையும் புத்தகத்தில் இடம் பெற செய்த முனைவர்  .நா. நளினிதேவிக்கு பாராட்டுக்கள் . குறிப்பாக , தாய் தமது மகளுக்கு சொல்வது போன்ற முதல் பக்க ஓவியமும் , பல கட்டுத்தளைகளை கொண்ட ஆணின்  அகந்தையை  கட்டுடைக்க   அம்பெய்தும் படமும் மிகவும் அர்த்தமுள்ளது .  

ஆனாலும், இந்தியாவில் நிகழும் ஆணவப்படுகொலைகள் ,  தொலைக்காட்சி (தொடர்கள்) மற்றும் ஊடகங்களின் மூலம்   பெண்களை கொச்சைப்படுத்தும் நிகழ்வுகளையும்  , ஆன்மீகத்தின் பெயரால் பெண்களிடமுள்ள மூட நம்பிக்கைகள் போன்றவற்றையும்  முனைவர்.நா. நளினிதேவி கையில் எடுக்கவில்லை என்ற குறையும் உள்ளது.   ஆனாலும் , இந்த நூல் பெண்கள் மத்தியில் மட்டுமல்ல ஆண்களிடத்திலும்  ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை . 



No comments:

Post a Comment