Sunday 30 October 2016

அஞ்சல் நிலையம்

நூல் :  அஞ்சல் நிலையம்
ஆங்கிலம்: சார்லஸ் புக்கோவ்ஸ்கி
தமிழில்: பாலகுமார் விஜயராமன்
பதிப்பு : எதிர் வெளியீடு

விலை : 200/-


அமெரிக்க எழுத்தாளரான சார்லஸ் புக்கோவ்ஸ்கியின்  படைப்புகள் விழிம்பு நிலை மக்களின் எளிய வாழ்வு , குடி, பெண்களுடனான தொடர்பு , அடிமைத் தொழில் போன்றவற்றை பேசுகின்றன. ஆயிரக்கணக்கான கவிதைகளையும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் , ஆறு புதின்ங்களையும் எழுதி இருக்கிற இவரை "டைம்" பத்திரிக்கை " அமெரிக்க கீழ்நிலை வாழ்வின் அரசவைக் கவிஞ்ர்" என்று புகழாரம் சூட்டியுள்ளது. இவரின் போஸ்ட் ஆபீஸ் என்ற இந்த நாவல் கற்பனையானது என்று கூறப்பட்டாலும் , அது அவரின் சொந்த அனுபவமான சுயசரிதம் என்றே கருதப்படுகிறது. அதைத் தான் " அஞ்சல் நிலையமாக " நமக்கு தந்துள்ளார் பாலகுமார் விஜயராமன். 

நம் நாட்டில் அஞ்சல் நிலையம் என்றதும் நமக்கு ஞாபகம் வருவது பரபரப்பாக இயங்கும் அலுவலகம் ,தபால் பட்டுவாடாதந்தி கொடுப்பது, பணப்பரிவர்த்தனை , ஓய்வூதியம் தருவது மற்றும் ஆயிரக்கணக்கான தற்காலிக ஊழியர்களை கொண்டுள்ளது போன்றவைகள் தான் நினைவில் வரும். ஆனால் இந்த அஞ்சல் நிலையம் "சின்னஸ்கி " என்ற தற்காலிக ஊழியனின் தொழில், அவனது பாலியியல் வேட்கை, குடி , அவன் வாழ்வில் குறுக்கிடும் பெண்கள் , அவனது பலவீனம் மற்றும் நேர்மையான மனம்   போன்றவற்றை பேசுகிறது.

அஞ்சல் நிலைய தற்காலிக ஊழியனாக சின்னஸ்கிக்கும் , அவனது மேலாளர் ஜோன்ஸ்டனுக்கும்    ஏற்படும் பணிமுரண்பாடும் பரஸ்பர வெறுப்பும்  நாவல் முழுவதும் வெளிப்படும். குறித்த நேரத்திற்கு வராவிட்டால் எச்சரிக்கை கடிதம் கொடுப்பதும் , சம்பளத்தை குறைப்பதும் தான் ஜோன்ஸ்டனின்   வேலை. அவனுக்கு அடிபணியாமல் நடப்பதே சின்னஸ்கியின் அன்றாட பணியாக இருக்கும். இதனிடையே குடி, குதிரைப் பந்தயம் என்று பணத்தையும் , தூக்கத்தையும் தொலைக்கும் சின்னஸ்கி நாம் சந்திக்கும் சாதாரண ஒரு தொழிலாளியாகத் தெரிவதில் வியப்பில்லை தான். அவனது பாலியியல் வேட்கையை தணிக்க   "பெட்டி" என்ற ஒரு பெண் வேறு இருக்கிறாள்.

சதா குடியுடனும் , அதனால் எழுந்த தலைவலியுடனும் , கிழிந்த செருப்புடனும் கொளுத்தும் வெயிலில் அவன் தெருவில் நடந்து தபால் பட்டுவாடா செய்வது அவனுக்கு வேதனையாக இருக்கும் . வாசிக்கும் நமக்கும் தான்!!! ஒரு முறைஇளம் பெண் ஒருத்தி பதிவு தபாலைப் பெற்றுக் கொண்டு கையெழுத்து இடாமல் சென்று விடுவதும் கையெழுத்தைப் பெற சின்னஸ்கி துரத்திச் செல்வதும் , அந்தப் பெண் இவனைத் தந்திரமாக வீட்டிற்குள் வரவழைத்து அவனது காம வேட்க்கையைத் தூண்டி  புணர வைப்பதும் வித்தியாசமாக இருக்கும். எதுவும் நடக்காதது போல் பணிக்குத் திரும்பும் சின்னஸ்கியைப் பார்த்தால் ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த இடத்தில் , அந்தப் பெண்ணிற்கும் , சின்னஸ்கிற்கும் நடைபெறும் உரையாடல் பற்றிய பாலகுமாரின் மொழிபெயர்ப்பு விரசம் தெரியாமல் அற்புதமாக இருக்கும். இது போன்ற சம்பவங்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் நடக்கும். ஒரு வேளை நம் நாட்டிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்து,  அது பதிவு செய்யப்படாமல் கூடப் போயிருக்கலாம்.

இதே போல் ஜோய்ஸ் என்ற ஒரு இளம் பெண்ணை ஒரு குதிரைப் பந்தயத்தின் போது பார்க்கிறான் சின்னஸ்கி . சில முரடர்களிடம் இருந்து அவளைக் காப்பாற்றி அழைத்துச் செல்லும் சின்னஸ்கி ஆவலுடன் உறவு வைத்துக் கொள்கிறான் , அதன் பின்னர் அவளை மணம் முடித்தும்  கொள்கிறான். அதிக பாலியியல் உணர்வு உள்ள அவளிடம் சதா உடலுறவு கொள்வதே அவனுக்கு வேலையாகிப் போகிறது.  அதன் பிறகு தான் , அவள் மிகப் பெரிய பணக்காரி என்பதும் வீட்டை விட்டு கோபத்தில் வெளியேறி இருப்பதும் சின்னஸ்கிக்குத் தெரிய வருகிறது .

பின்னர் சின்னஸ்கிக்கும் , ஜோய்ஸ்க்குக்கும் மணமுறிவு ஏற்படுகிறது. அதன் பிறகு அவனுக்கும் "பே" என்ற பெண்ணிற்கும் தொடர்பு ஏற்படுகிறது. அதுவும் முறிகிறது. இப்படியாக சின்னஸ்கி என்கிற சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் பாலியியல் அனுபவங்களை இந்த " அஞ்சல் நிலையம் " சுமந்து செல்கிறது. இடையில் அவனுக்கு அஞ்சல் நிலையத்தில் பணி நிரந்திரம் கிடைக்கிறது. திரும்பவும் பணிக்குச் செல்கிறான். அங்கே முட்டை முட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்  காலாவதியாகிப் போன தபால்களும் , பேப்பர்களும் மக்கிப் போய் நாற்றமடிக்கிறது. அதை அப்புறப்படுத்த நிர்வாகம் தயாராக இல்லாததால் அங்கே தற்செயலாக தீ விபத்து ஏற்படுவது போல் ஏற்பாடு செய்து தீ வைத்து கொளுத்திவிடுகிறான்.  ஒரு வழியாக அந்த தபால் நிலையத்தை சுத்தப்படுத்திய திருப்தி அவனுக்கு ஏற்படுகிறது. இந்த சூழலில் அவனது பழைய காதலி "பெட்டி" மரணமடைகிறாள். அவளுக்குத் தேவையான ஈமச்சடங்கைச்  செவ்வனே செய்கிறான் சின்னஸ்கி . அவளது மரணம் அவனுக்கு பெரிய பாடத்தைத் தருகிறது. வேலையை திரும்பவும் துறந்து விட்டு குதிரை பந்தயத்திற்கேத்  திரும்புகிறான் சின்னஸ்கி. இது தான் " அஞ்சல் நிலையம் " நாவல். 

இந்த நாவலை மிக அழகாக தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் பாலகுமார். சின்னஸ்கியின்  பாலியியல் உறவு மற்றும் அவன் பேசும் மொழி பற்றிய பல ஆங்கில வார்த்தைகளுக்கு  அப்படியே தமிழில் நேரிடையான வடிவம்  கொடுத்திருப்பார் . அது சிலருக்குத் விரசமான வார்த்தையாக தெரியலாம். ஆனால் , அது தான் ஒரு மொழிபெயர்ப்பானின் கடமை . அப்போது தான் அதில் உயிர் இருக்கும்.  அந்த வகையில் பாலகுமாரின் பணி பாராட்டுக்குரியது. ஆனால் , இந்த நாவல் சின்னஸ்கி (சார்லஸ் புக்கோவ்ஸ்கி)    என்ற மனிதனின் அகம்  மற்றும் புறம் சார்ந்த  உணர்வுகளை  எந்த விதமான சமரசத்திற்கும் இடமில்லாமல் விவரிக்கிறது.  நாவலை படித்து முடித்ததும் ஒரு புதிய மனிதனை தெரிந்து கொண்ட உணர்வு தான் எனக்கு எழுந்தது.

-சு.கருப்பையா.




1 comment:

  1. பாலகுமார் மொழி பெயர்ப்பிற்காகவே இதை வாங்கினேன். என்னுடைய வாசிப்பு அனுபவத்தை முகநூலில் பதிவிட்டுள்ளேன்.

    ReplyDelete