Saturday 29 October 2016

புறாக்காரர் வீடு

புறாக்காரர் வீடு
பாலகுமார் விஜயராமன்.
நூல்வனம் வெளியீடு.


புறாக்காரர் வீடுஎன்ற இந்நூல் எழுத்தாளர் பாலகுமாரின் முதல் சிறுகதை தொகுப்பு. நூல் வடிவில் வந்த அவரின் முதல் படைப்பு . ஆனால், அவர்  இதற்கு முன்பே சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் "போஸ்ட் ஆபீஸ்" என்ற நாவலை தமிழில் " அஞ்சல் நிலையம்" மொழி பெயர்த்துள்ளார். அப்படிப் பார்த்தால் இதை அவரது இரண்டாவது படைப்பு என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும்  " அஞ்சல் நிலையம் " அடுத்தவரின் பிள்ளை, நமது என்று சொந்தம் கொண்டாட முடியாது  தானே !

இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான சிறுகதைகள் அவரின் சோலை அழகுபுரம் , தென்திசை போன்ற அவரின் வலைப்பூவில் எழுதப்பட்டது  தான். சில கதைகள் மலைகள், எழுத்து , தமிழ் மனம் போன்ற தமிழ் வலைத்தளங்களில் படித்ததாகவும் ஞாபகம். இக்கதைகளை மெருகேற்றி இப்போது நூல்வடிவில் தந்துள்ளார்.  பாலகுமாருக்கு "எழுத்து"  என்பது சுவாசத்தைப் போன்றது. அதே போல் அவரது மொழிவளமும் அற்புதமானது. உயிர்ப்பான பல கவிதைகளையும் தமது வலைப்பூவில் எழுதி இருக்கிறார். உண்மையைக் கூறவேண்டுமென்றால் இவர் ஒரு சிறந்த கவிஞர்.

சிறுகதைகள் என்றாலே என் மனதை ஆக்கிரமித்துள்ள எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன் , ஜெயகாந்தன், மௌனி மற்றும் அம்பை போன்றவர்களே!. இருந்தாலும் அவர்களின் பிம்பத்தை என் மனதிலிருந்து அழித்து விட்டுத் தான் இந்த " புறாக்காரர் வீடடை " வாசித்தேன். பாலகுமார், இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள  கதைகளில் தமது சொந்த வாழ்க்கையில் ஏற்படட அனுபவங்கள்  , தான் சந்தித்த, பார்த்த, பழகிய மனிதர்களின் அனுபவங்கள், மன உணர்வுகள் என்று நிஜ வாழ்க்கையின் எதார்த்தங்களையே எழுதியுள்ளார் என்பதை இதை வாசிப்பவர்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.  உண்மையைக்கூற வேண்டுமானால் சில சிறுகதைகள் அதற்கான இலக்கண வரம்பிற்குள் வரவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.. உதாரணமாக,  இன்மை உணர்தல், நெகிழ்தல் தோற்றம் மற்றும் திருவாளர் பொதுஜனம் போன்ற சிறுகதைக் கூறலாம். ஆனால் , அதில் ஒரு செய்தியும் இருக்கிறது , அது வெளிக்கொணரும் ஒரு உண்மையும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால் , புறாக்காரர் வீடுஉரு வெளிதோற்றம் , சமிக்ஞை, மலை வரும் பருவம்கைப்பிடிமண், நாகதேவதை மற்றும் கருப்பு என்னும் காவல்காரன் போன்ற சிறுகதைகள் உண்மையிலேயே கவனிக்கப் படவேண்டியவை. இவைகள் மனிதர்களின் ஏமாற்றம், பேரழிவு, மாயதோற்றம், மூடநம்பிக்கை மற்றும் இழப்பு போன்ற உளவியல் குறியீடுகளை சுட்டிக்காட்டுகின்றன.


குறிப்பாக , "கைப்பிடி மண்" என்னை யோசிக்க வைத்த சிறுகதை. இக்கதை குறிப்பிடுவது   பிறழ்மனத்தோற்றமா?, கனவுக்குறியீடா? அல்லது அழிவிலிருந்து தப்பிச் செல்ல விரும்பும் ஒரு இனக்குழுவின் தோல்வியா ? , என்று வாசகர்களின் புரிதலுக்கே விட்டு விடுகிறார்.  அதே போல் "நாகதேவதை" என்ற சிறுகதையில் புதுவீடு கட்டுபவர்கள் நம்பும் பூமி பூஜை , புதையல் , பில்லி சூனியம் கழிப்பது , அதற்காக மந்திரவாதியை நம்புவது போன்ற மூடநம்பிக்கைகள் மக்கள் மனதை ஆக்கிரமித்துள்ளதை அப்படியே எழுதி உள்ளார். ஆனால் அதன் பிடியில் இருந்து கதை நாயகன் மாடசாமி முழுவதும் வெளியே வராமல் அதன் சுழற்சிக்குள்ளயே போய் விடுவது ஏமாற்றத்தைத் தருகிறது.

ஆனால் " மழை வரும் பருவம்"  என்ற சிறுகதையில் அனாதையாகிப் போன  செல்வா என்ற   இளைஞ்னின் ஏமாற்றம், புறக்கணிப்பு, துயரம் மற்றும் இழப்பு  போன்றவற்றை அவருடைய தாயின் மரணத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வரும் வரை அழாமல் இருந்து விட்டு , தனது தாயின் பிணத்தைப் பார்த்ததும் வெடித்துக் கிளம்பும் அழுகையை வெளிப்படுத்தும் அந்த இளைஞ்னின் அழுகையை இடி மின்னலுடன் வரும் " மழை"க்கு ஒப்பீடு. செய்வது  கவித்துவமான  உவமை.

சமிக்ஞை, சிறுகதையில் நில அபகரிப்பு , சுற்றுப்புற சூழல் பாதிப்பு அதனால் பறவை இனம் அழிவது , விவசாயம் செய்ய முடியாத நிலமாகிப் போனதால் விவசாயிகள் நாடோடிகளாக வெளியேறுவது போன்றவற்றை அழகாக பதிவு செய்துள்ளார். ஒரு படைப்பாளனுக்கு  சமூகத்தின் மீது ஆழ்ந்த அக்கறை இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் கதை இது. அடுத்துநூலின் தலைப்புச் சிறுகதையான " புறாக்காரர் வீட்டைப்" பற்றி கடடாயம்  சொல்லித்தான் ஆக வேண்டும். எழுத்தாளர் பாலகுமார்  அந்தப் புறாக்கூட்டில் இருந்து வந்தவர் தான்  என்பதை தனது "சுகவாசி" என்ற முன்னுரையில் தெளிவாக கூறியுள்ளார். ஒரு தந்தையின் கடமை, குடும்பம், உறவுகள் , இழப்புக்கள் போன்ற அனுபவங்கள் எப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கேட்க்காமலேயே நுழைகிறது என்பதை இந்தக்கதை அற்புதமாக விளக்குகிறது. புறாக்கூட்டம் போல் வாழ்ந்த உறவுகள் அனைத்தும் பிரிந்து போனபிறகு வெறுமையாகிப் போன அந்த வீட்டையும், தனது உறவுகளையும் எண்ணிப்பார்க்கும் ஒரு புறாவாகவே எனக்கு பாலகுமார் தெரிகிறார். இந்த உணர்வு தான் அவரை எழுதத் தூண்டியிருக்கும் என்றும்  நான் கருதுகிறேன்.

பொதுவாக, இந்தச் சிறுகதைகள் அனைத்தும் படைப்பாளனின் மனம், அவனது மனித உறவுகள் சார்ந்த விஷயங்களையே அதிகம் பேசுகிறது. இதை விடுத்து சமூகச் சிக்கல்களையும் , சாதிய அடக்குமுறைகளையும் , மதத்திற்குள் இருக்கும் அரசியலையும் ,பாலியியல் முரண்பாடுகள் மற்றும் அது சந்திக்கும் எதிர் விளைவுகள்  போன்றவற்றையும் பாலகுமார் எழுத வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒரு வேளை, இதைத்தான் இந்நூலுக்கு முன்னுரை எழுதிய எழுத்தாளர் பாவண்ணனனும்  விரும்புகிறாரோ என்னவோ!.

" புறாக்காரர் வீடு" அழகாக இருக்கிறது . அது வாசகர்களை வசீகரிக்கவும் செய்யும்.

-சு.கருப்பையா. 



1 comment:

  1. இந்த தொகுப்பில் புறாக்காரர் வீடு மிக சிறந்த படைப்பு.

    ReplyDelete