Saturday 4 November 2017

பன்னாட்டுச் சந்தையில் பாரதமாதா - நூல் வெளியீடு

பன்னாட்டுச்  சந்தையில் பாரதமாதா - நூல் வெளியீடு







 முனைவர்.மரிய ஜான் கென்னடி பேராசிரியர் அருளானந்தர் கல்லூரி

எழுத்தாளர்கவிஞர் முனைவர்.வா.நேரு 


முனைவர்.இரா. முரளி மாநில செயலர்மக்கள் சிவில் உரிமைக்கழகம் 


சு.கருப்பையா , ஒருங்கிணைப்பாளர், வாசிப்போர்களம்


நமது உறுப்பினர் தோழர் மு.சங்கையாவின் முதலாவது படைப்பான "லண்டன் " நூலை  வாசிப்போர்களம் பெருமையோடு  வெளியிட்டதை போலவே அவரது இரண்டாவது படைப்பான பன்னாட்டுச்  சந்தையில் பாரதமாதாநூலையும் வாசிப்போர் களம் மதுரை சார்பில் 26-10-2017 ந் தேதி மாலை 05-30 மணிக்கு “MUTA” அரங்கில் வெளியிடப்பட்டது.




மிகவும் எளிமையாக நடைபெற்ற  இந்த விழாவில் நமது உறுப்பினரும்  , மாநில பகுத்தறிவாளர் கழக தலைவருமான , எழுத்தாளர், கவிஞர் , முனைவர்.வா.நேரு வெளியிட , தோழர். சே. வாஞ்சிநாதன் , மாநில ஒருங்கிணைப்பாளர் , மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.


மதுரை கல்லூரி முன்னாள் முதல்வர், முனைவர்.இரா. முரளி , மாநில செயலர், மக்கள் சிவில் உரிமைக்கழகம் அவர்கள் , நூலை பற்றிய சிறப்பான வாழ்த்துறையை வழங்கினார். அத்தோடு , இந்த நூல் அரசியல் பொருளாதாரம் பற்றி பேசுவதால் அனைத்துக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடத்தில் இந்நூலை கொண்டு சேர்க்க வேண்டும் என்று பரிந்துரையும்  செய்தார்.             


முனைவர்.மரிய ஜான் கென்னடி , பேராசிரியர் , அருளானந்தர் கல்லூரி, அவர்கள்  , இந்நூலை பற்றிய தமது பார்வையை மிகச் சரியாக பதிவு செய்தார். இந்நூல் வெளிக்கொணரும் பொருளாதார புள்ளி விபரங்கள் , பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெறுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அவர் குறிப்பிடத்தவறவில்லை. அதனால் , நல்லதொரு நூலை வெளிட்ட திருப்தி நமக்கு கிடைத்தது.


நூலின் வெளியிட்டாளர் உரையை பார்வைக்காக கீழே கொடுத்துள்ளேன்:


                            ஒரு நாடு தன்னிறைவு பெற்ற நாடாக விளங்க வேண்டுமென்றால் அந்நாட்டின் பொருளாதாரம், வாணிபம், வெளிநாட்டு உறவுகள், தேசப்பாதுகாப்பு ஆகிய நான்கும் அதன் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி அதன் மூலம் தொழில்நுட்பம், விஞ்ஞானம்  ,விவசாயம் பெருகி நாட்டு மக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும்.அத்தோடு ஏற்றுமதியும், அந்நிய செலாவணியும் அதிகரிக்க வேண்டும். அத்தகைய செயல்த் திட்டங்கள் இன்றைய  சூழ்நிலையில் , மூன்றாம் உலக நாடுகளுக்கு சாத்தியமாகுமா என்ற கேள்வியை எழுப்பினால் அதற்கு சாத்தியமில்லை என்ற கசப்பான உண்மை தான் பதிலாக வெளிப்படும்.காரணம் உலகமயமாக்கல் என்கிற போர்வையில் பொருளாதாரத்தில் மேலோங்கிய அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள்  எல்லாத் துறைகளையும் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வர சர்வதேச நிதிநிறுவனம்,[IMF],உலகவங்கி , உலக வர்த்தக நிறுவனம்[ world trade organisation] போன்றவற்றைப்  பயன்படுத்திக் கொண்டன . இன்று உலகவங்கியிடமும் , சர்வதேச நிதி நிறுவனத்திடமும்  கடன் பெறாத நாடுகளே இல்லை என்பது தான் உண்மை .அதன் வரலாற்றைத் தான் தோழர் மு.சங்கையா  நிறைய புள்ளி விவரங்களோடு இந்நூலில் மிகத் தெளிவாக தந்துள்ளார்.

                 உலக வங்கியிடம் கடன்பெற்று வீழ்ச்சியடைந்த மெக்சிகோ,பொலிவியா ,மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளின் கண்ணீர் கதைகளை இந்நூல் நேர்த்தியாக படம் பிடித்துக் காட்டியுள்ளது .அது மட்டுமல்லாமல் உலகமயத்தின் விளைவால் உருவான சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் தாக்கத்தையும்,,தண்ணீர் தனியார்மயத்தால் கோக்கும்,” “பெப்சியும்நாட்டின்   நீர் வளத்தை அழிக்கும் கதையையும்,ஆறு விற்பனையாவதையும் ,வேதனையுடன் பதிவு செய்துள்ளார் .

           கேரளாவின் பிளாச்சிமடா மக்கள் கோக்கை முறியடித்த வரலாற்றையும் ,பொலிவிய நாட்டில் தண்ணீர் தனியார்மயத்துக்கு  எதிராக கொச்சம்பா நகரத்து மக்கள் நடத்திய வீரம் செறிந்த  போராட்டத்தையும் அதன் வெற்றியையும் நமது மனம் நெகிழும் வண்ணம் எழுதியுள்ளார் .அதே போல் பல நாடுகளில் சில்லைறை வர்த்தகத்தை ஒழித்துக் கட்டிய  வால்மார்ட் பற்றியும், வளரும் நாடுகள் மற்றும் மூன்றாம் உலகநாடுகளின் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்க உலக வர்த்தக  நிறுவனம் நிர்ப்பந்தம் செய்யப்படுவதையும் எழுதத் தவறவில்லை.

                இன்றைய சூழ்நிலையில் உலக வங்கி  மற்றும் சர்வதேச நிதி நிறுவனம் ஆகியவற்றில் 16 விழுக்காட்டுக்கும் மேல்  பங்குகளை அமெரிக்கா  வைத்திருப்பதால் அதை  மீறி மற்ற நாடுகள்  தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது.. அது இந்தியாவுக்கும் பொருந்தும் .இவைகளின் பிடியை உடைத்து உலக நாடுகள் சுயமாக இயங்குவதற்கான  என்ன வழிமுறைகள்  உள்ளன .அதற்கு வாய்ப்பு இருக்கிறதா ,பிரச்சனைக்கு தீர்வு தான் என்ன  என்பதையும் ஆசிரியர் விளக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

                         தோழர் மு.சங்கையாவின் முதல் படைப்பான லண்டன்-- ஒரு பழைய சாம்ராச்சியத்தின் அழகிய தலைநகரம் என்ற பயண நூலை வாசிப்போர்களம் மதுரை வெளியிட்டது. அது 2013 ஆம்  ஆண்டிற்கான  தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் சிறந்த நூலாக  தேர்வு செய்யப்பட்டதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.பரிசுக்கு எழுதாமல் சமூகம் மேன்மையுர எழுதுகின்றவர்கள் சிலர் தான். அந்த வரிசையில் இந்த நூலின் ஆசிரியரையும்    சேர்க்கலாம்.பாராட்டும் பரிசும் அந்த எழுத்திற்கான  அங்கீகாரமென்பதோடு அது மேலும் முனைப்போடு எழுதுவதற்கு உந்து சக்தியாக இருக்கிறது என்பதும் உண்மை .

                              தோழர் மு.சங்கையாவின் முதலாவது படைப்பை வாசிப்போர்களம் பெருமையோடு  வெளியிட்டதை போலவே அவரது இரண்டாவது படைப்பான பன்னாட்டுச்  சந்தையில் பாரதமாதாநூலையும் வாசிப்போர் களம் மதுரை சார்பில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

*******

நமது நிர்வாகக் குழு உறுப்பினர் ,, எழுத்தாளர், கவிஞர்   , முனைவர். V. பாலகுமார்  அவர்கள் , வெளீட்டுவிழாவினை  கலைநுட்பத்துடன் தொகுத்து வழங்கினார்.



வாசிப்போர்களம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளை சார்ந்த ஏறத்தாழ 50 பேர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். 


தோழர். சௌந்தர், மற்றும் ஆண்டியப்பன் ஆகியோர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. தோழர்.சங்கையாவின் நெகிழ்வான ஏற்புரைக்குப் பிறகு தோழர். தெய்வேந்திரன் நன்றி நவில,  விழா  குறிப்பிட்ட நேரத்தில் நிறைவு பெற்றது.

தோழர். தெய்வேந்திரன்



தோழர்.மு.சங்கையா ஏற்புரை. 

நூலின் விலை: ரூபாய். 225/-
தொடர்பிற்கு: மு.சங்கையா, 
கைபேசி: +919486100608
இல்லம்: 0452-2668001
மதுரை.



No comments:

Post a Comment