Tuesday 28 July 2015

மாமனிதர் அப்துல் கலாம் மறைவு

தேசமே கண்ணீரில் மிதக்கிறது | 7 நாள் துக்கம்





குடியரசு முன்னாள் தலைவர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) மாரடைப்பால் திங்கள் கிழமை மாலை உயிரிழந்தார்.

இந்த இழப்பை தாங்க முடியாமல் தேசமே கண்ணீரில் மிதக்கிறது. மத்திய அரசு 7 நாள் துக்கம் அறிவித்துள்ளது. குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் திங்கள் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அங்கு நேற்று மாலை 6.30 மணி அளவில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டி ருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு பிராண வாயு செலுத்தப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையின் இயக்குநர் ஜான் சாலியோ ரயான்தியாங் கூறியபோது, 'நாடித்துடிப்பு அடங்கிய நிலையில்தான் கலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார், மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்துள்ளது' என்று தெரிவித்தார்.

தகவல் அறிந்து மேகாலய ஆளுநர் சண்முகநாதன், மாநில தலைமைச் செயலாளர் வாஜ்ரி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தனர்.

பின்னர் தலைமைச் செயலாளர் வாஜ்ரி நிருபர்களிடம் கூறியபோது, 'அப்துல் கலாமின் உடல் செவ்வாய்க்கிழமை காலை டெல்லிக்கு கொண்டு செல்லப் படுகிறது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் கோயலுடன் ஆலோசனை நடத்தி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார்.

அப்துல் கலாமின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கலாமின் மறைவு நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசமே கண்ணீர் வடிக்கிறது.

வாழ்க்கை வரலாறு
தமிழகத்தின் ராமேஸ்வரம் நகரில் கடந்த 1931 அக்டோபர் 15-ம் தேதி அப்துல் கலாம் பிறந்தார். அவரது தந்தை ஜைனுலாபுதீன், தாயார் ஆஷியம்மா.
ராமேஸ்வரத்தில் பள்ளிக் கல்வியை முடித்த அவர் மேற்படிப்புக்காக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1954-ல் இயற்பியலில் பட்டம் பெற்றார்.

1955-ம் ஆண்டில் சென்னை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்தார். அங்கு படித்தபோது விமானியாக வேண்டும் என்று கலாம் ஆசைபட்டார். அதற்கான தேர்வில் அவர் 9-வது இடம்பெற் றார். ஆனாலும் விமானியாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஏவுகணை விஞ்ஞானி
சென்னை எம்.ஐ.டி.யில் உயர் கல்வியை முடித்த அவர் 1960-ம் ஆண்டில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார்.

முதலில் இந்திய ராணுவத் துக்காக சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்தார். பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) அவர் தனது ஆராய்ச்சி பணிகளைத் தொடர்ந்தார். அங்கு 1980-ம் ஆண்டு எஸ்.எல்.வி.-3 ராக்கெட் மூலம் ரோகினி-1 என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவியதில் முக்கிய பங்காற் றினார். அவரது சேவையைப் பாராட்டி 1981-ல் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அடுத்து 1990-ல் பத்ம விபூஷண் விருதைப் பெற்றார். 1963 முதல் 1983 வரை இஸ்ரோவில் சிறப்பாகப் பணியாற்றினரா்.
பின்னர் 1999-ம் ஆண்டில் பொக்ரான் அணுஆயுத சோதனை யில் கலாம் முக்கிய பங்காற்றினார். இதேபோல அக்னி, பிருத்வி, ஆகாஷ் உட்பட ஐந்து ஏவுகணை திட்டங்களில் முக்கிய பணியாற்றி உள்ளார்.

அவரை கவுரப்படுத்தும் விதமாக 1997-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவை தவிர 30-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. மேலும் ஏராளமான சர்வதேச விருதுகளையும் அவர் பெற்றுள் ளார்.

மக்களின் குடியரசுத் தலைவர்
கடந்த 2002 ஜூலை 25-ம் தேதி நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக அவர் பதவியேற்றார். 2007 ஜூலை 25-ம் தேதி வரை அவர் பதவி வகித்தார்.

அவர் விஞ்ஞானியாக பணியாற் றியபோது இந்தியாவின் ஏவுகணை தந்தை என்றும் குடியரசுத் தலைவராக இருந்தபோது மக்களின் குடியரசுத் தலைவர் என்றும் போற்றப்பட்டார்.

குடியரசுத் தலைவர் பதவி காலம் முடிந்த பிறகு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இளைய தலைமுறையினருக்காக பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

கலாம் எழுதிய புத்தகங்கள்

சிறந்த எழுத்தாளராகவும் அவர் விளங்கினார். அக்னி சிறகுகள், எழுச்சி தீபங்கள், அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

இறுதி வரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த கலாம் மறைந்தாலும் அவரது எளிமையான வாழ்க்கை, இனிமையான பேச்சால் இந்திய மக்கள் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
நன்றி : தி இந்து தமிழ் 28/07/2015

இந்தியாவின் மிகச் சிறந்த குடிமகன்களில் ஒருவரான மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு வாசிப்போர்களம் அவரது பாதங்களில் மலர்களைத் தூவி வணங்குகிறது. எம் தேசத்திற்கு நீங்கள் விட்டுச் சென்ற அடையாளங்களை , நாட்டின் இறுதிக் குடிமகன் இருக்கும் வரை நினைவு கொள்வான். எங்கள் நன்றியையும் , இறுதி வணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள். 

சு.கருப்பையா. 
ஒருங்கிணைப்பாளர். 

நகரத்தில் கிடைக்கும் வசதிகள் கிராமத்திலும் கிடைக்கவேண்டும் எனத் தன் வாழ்நாள் முழுவதும் கூறிய , நகரத்தில் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் கிராமத்து மக்களின் துயரத்தை நினைத்த , சரியான வழிகாட்டுதலும் , உத்வேகமும் கொடுத்தால் நமது மாணவர்கள் சாதிப்பார்கள் , அதற்காகவே எனது வாழ்க்கை என அர்ப்பணித்த அய்யா .அ.பெ. ஜை. அப்துல் கலாம் அவர்களுக்கு வீரவணக்கம்.

முனைவர் வா.நேரு.






4 comments:

  1. ஒருதலெவர் என்ன சொன்னார் என்பதைவிட என்னசெய்தார் யார்பக்கம் நின்றார் என்பதைவைத்து இஙகே மதிப்பிடுகள்செய்யப்படுவதில்லை.ஊடகவெளிச்சங்களேஇங்கேஎல்லாவற்றையூம் ததீர்மானிக்கும் சக்தீகளாக இருக்கீன்றன.மறைந்த மூன்னாள் ஜனாதிபதிஅப்துல்கலாம்மறைவில்நாம் கண்ணிர்சிந்துவோம்.ஆனால் குஜராத் படுகொலை,ஈழப்படுகொலை,விவசாயீகள்தற்கொலை க்காக,அவர் கருதத்தூ கூறியதாக வோ அரசுக்கு அறீவுரை கூறீயதாகவோநான்படீத்ததூ இல்லை நீங்கள்படிதிதததூ உண்டா. மு.ச

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்! எல்லாத் தலைவர்களும் எல்லாவற்றையும் செய்யமுடியாது.
      இந்திய மாணவர்களில் மாற்றம் கொண்டுவந்தாரே! அது மிகப் பெரியவிடயம்.
      இவர், இறந்த போது இந்தியாவே அழுதது, ஆனால் ஒரு உயிர் போகவில்லை. தற்கொலை, விரல் வெட்டல்,நாக்கு வெட்டல் இல்லை.அந்த அளவு ஒட்டு மொத்த தேசத்தையும் மனதால் பக்குவப்படுத்தியுள்ளாரே! இது போதாதா?
      இந்தியாவை பொருளாதார ரீதியில் மாற்ற வேண்டுமெனும் சிந்தனை. இது இந்தியாவைப் பீடித்துள்ள சகல பிணிகளின் சகலரோகநிவாரணி! அதை சகல விதத்திலும் பரிந்துரைத்துள்ளார்.
      நிலை உயரும் போது பணிவு,தலைவனாக இருந்தும் ஞானிபோல் ஆடம்பரமற்ற வாழ்வு, எளிமை, கைத்தூய்மை, பற்றின்மை. முகத்தில் இருந்த கனிவு!.
      கடைசியாகவும் தனக்குக் காவலுக்கு 6 மணி நேரம் நின்று கொண்டு வந்த காவலரை, தனியே கூப்பிட்டு நன்றி கூறியது.
      இப்படித் தலைவர்களைக் காண்பதரிது. கண்டோம்... அதனால் எங்களுக்கு அவர் உயர்வாகத் தோன்றுகிறார். இதை எங்கள் ஆழ்ந்த அறிவின்மையாகக் கூட நீங்கள் கருதலாம்.

      நான் ஈழத்தவன் , என்றுமே என் நாட்டில் நடந்தவற்றுக்கு கருத்துக்களால் ஆவது ஏதுமில்லை.

      Delete
    2. தோழர் சங்கையா அவர்களுக்கு நன்றி. மரியாதைக்குரிய கலாம் அவர்கள் ஒரு அரசியவாதியோ அல்லது சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற விருப்பம் உடைய புரட்சிக்காரராகவோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு எளிமையான, நேர்மையான மனிதர். நம் நாடு விழித்தெழ வேண்டுமென்றால் அது நல்ல இளைஞர்கள் கையில் தான் இருக்கிறது என்று கனவு கண்டவர். அவர்களைச் சிந்திக்க வைக்க உழைத்தவர்.அதனால் தான் இந்தியநாடே அவரது மரணத்தால் துயரத்தில் ஆழ்ந்தது. இந்த நல்லவரால் இந்திய அரசியல்வாதிகளை திருத்த முடியாது தான். ஆனாலும் இந்திய நாடாளுமன்றம் நன்றாக இயங்கி மக்கள் நலனில் பங்கெடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர். தோற்றும் போனவர். அதனால் தான் மாற்றத்தைக் கொடுக்கும் மாணவர்களை நோக்கிச் சென்றார் சென்றார். பலன் இல்லாமலா போய்விடும்?

      சகோதரன் யோகனே! தங்களின் வருகைக்கும் , பதிவுக்கும் நன்றி. கலாம் போன்றவர்களால் கூட செய்ய முடியாததை என் போன்ற சாமானியன்களால் என்ன செய்து விட முடியும் ? . துயரம் தோய்ந்த வடுக்களை மனதில் சுமந்து கொண்டு , எங்களது இயலாமையால் வெட்கி தலைகுனிந்து வாழத்தான் முடிந்தது. உங்கள் வலிகளை எங்களால் உணர முடியும் . அதனால் உங்களுக்கு என்ன இலாபம். காலம் பதில் சொல்லும்.

      Delete
    3. மதிப்பிற்குறிய கலாம் அவர்களின் எளிமை,பணிவு நேர்மை ஒழுக்கம் கனிவு கல்வி துறைசார்ந்த சாதனைகளின் மீது எனக்கும் மரியாதைஉண்டு.ஆனால் சமுகத்தளங்களில் அவரது பங்கு விமர்சனத்துக்கு உரியது தான்.இதில் மறைக்க ஏதுமில்லை. குஜராத்மதப் படுகொலைகள் ஈழப்படுகொலைகள் தமிழக மீனவர் கொலைகள் விவசாயிகள் தற்கொலைகள் என இம் மக்களின் பிரச்சனைகளை காணமறுத்து மெளனித்து ஞானியப்போல் உலா வந்ததில் என்ன பலன். சுகாதாரம் குடிநீர் மருத்துவம் உயர் கல்வி என இங்கே வாழும் சாதாரண மக்களுக்கு கனவாகவே இருக்கும் போது வல்லரசுக் கனவு யாருக்காக. அடிப்படை வசதிகளுக்குக் கூட. வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலையில் இளைஞர்களுக்கு. இவர் சொன்ன இலக்கில்லாக் கனவுகள் தீர்வைத்தருமா. கதாகாலட்சேபம் உபன்யாசம் ஜெபக் கூட்டங்கள் எதை சாதித்ததோ அதைத்தான் களமாடாத கருத்துக்களும் சாதிக்கும்.உபதேசங்கள் இனிக்கும் ஆனால் அது காதறுந்தஊசி தான்.நடைமுறையில்லா எந்த தத்துவமும் வரட்டுத்தனமானது தான்.வரலாறு முழுவதும் இதைப் பார்க்கலாம்.வெறும் பக்தியும் பரவசமும் எதையும் சாதிக்காது. கலாம் அவர்கள்ஆளும் வர்க்கங்களளுக்குக் கிடைத்த அலங்கார பொம் மை . முச

      Delete